Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 29

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 29

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 29 

கார்டன் ஏரியாவை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்த அர்ஜுன் சியாவின் கல்லறை இருந்த இடத்திற்கு சென்றான். 

கிளாராவும், பிரிட்டோவும், ஆகாஷும்‌ அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். 

அவர்களுக்கு பின்னே சென்று கொண்டிருந்த பாடிகார்டுகள்  தங்கள் கையில் பூட்டி இருந்த ஒரு பெரிய மரப்பெட்டியை கொண்டு சென்றார்கள். 

சியாவின் கல்லறையை நெருங்கிய அர்ஜுன் தன் கையில் இருந்த ரோஜா பூக்கள் அடங்கிய பூங்கொத்தை அந்த கல்லறையின் மீது வைத்தான்.

பின் அவன் தனது ஆட்களை பார்த்து கண்ணை காட்ட, 

நான்கு, ஐந்து பேர் சேர்ந்து சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு வந்த மரப்பெட்டியை அவர்கள் சியாவின் கல்லறைக்கு முன்னே வைத்தார்கள். 

சியாவின் கல்லறைக்கு அருகே சென்று மண்டியிட்டு தரையில் அமர்ந்த அர்ஜுன் 

சமாதியில் உறங்கிக் கொண்டு இருந்த தன் மனைவியிடம் குசுகுசுவென்று ஏதோ பேசினான். 

பின் அவன் கம்பீரமாக எழுந்து நின்றான். 

மீண்டும் அவன் எமோஷனல் ஆகிவிடுவானோ என்று நினைத்து அவன் முகத்தையே அனைவரும் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்க, 

யாரையும் கண்டுக் கொள்ளாமல் சியாவின் காலடியில் தனது கடந்த காலத்தை காணிக்கையாக்கிவிட்டு தனது புதிய முன்னேற்ற பாதையில் கெத்தாக நடக்க தொடங்கினான் அர்ஜுன். 

அவனை அப்படி பார்த்து சந்தோஷப்பட்ட கிளாரா,

“நம்ம பழைய அர்ஜுன் சார் இப்ப தான் திரும்பி வந்த மாதிரி இருக்கு.

முன்னாடி அவர் சியா மேடம் கூட எப்படி ஹாப்பியா இருந்தாரோ அதே மாதிரி 

இப்போ தென்மொழி மேடம் கூட சந்தோஷமா இருந்தா நல்லா இருக்கும்.” என்று மென் குரலில் சொல்ல, 

“அண்ணா கண்டிப்பா அவங்கள ஏத்துக்குவாரு. 

எனக்கு அந்த நம்பிக்கை வந்துருச்சு. 

இனிமே நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டு நம்மளும் ஃபிரெஷா  இருக்கணும். 

இனிமே அர்ஜுன் அண்ணா முன்னாடி யாரும் சியா அண்ணிய பத்தி பேசாதீங்க.” என்றான் ஆகாஷ். 

அர்ஜுன் முன்னே ‌ தன் வீட்டை நோக்கி நடக்க, அவனைத் தொடர்ந்து மற்ற அனைவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள். 

உள்ளே வந்த அர்ஜுன் ஆர்வமன முகத்துடன் வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தேன் மொழியை தான் முதலில் கண்டான்.

முகத்தில் அங்கங்கே வெட்டு காயங்களோடு, கையில் ஒரு பெரிய கட்டுடன் சாதாரண டிஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ்ஸில் அங்கே வந்து கொண்டிருந்த அர்ஜுனை பார்த்து ஸ்தம்பித்து போய்விட்டாள் தேன்மொழி. 

அவன் மூன்று நாட்களுக்கு முன்பு இங்கே இருந்து கிளம்பும்போது டிப்டாப்பாக கம்பீரமாக அத்தனை அழகாக ராஜாவைப் போல சென்றான். 

ஆனால் இப்போது போரில் சண்டையிட்டு காயமடைந்த போர்வீரனை போல அவன் திரும்பி வந்திருந்தான்.

அதனால் பயந்து போன தேன்மொழி அவன் மீது தனக்கு இருந்த கோபம் வருத்தம் என அனைத்தையும் மறந்துவிட்டு வேகமாக அவனை நோக்கி ஓடினாள். 

அவள் தன்னை நோக்கி வருவதை கண்ட அர்ஜுன் அப்படியே நின்று விட்டான். 

அவன் அருகில் சென்றவுடன் அவளுக்கு பதட்டமாக இருக்க,

அவளும் மூச்சு வாங்க படபடவென அடித்துக் கொள்ளும் இதயத்துடன் அவனைப் பார்த்தாள். 

அவள் கண்களில் தனக்கு என்ன ஆனதோ? என்று அவள் யோசித்ததால் ஏற்பட்ட தவிப்பை அர்ஜுனால் தெளிவாக பார்க்க முடிந்தது. 

அது அவன் மனதிற்குள் அவள் மீது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வை ஏற்படுத்தியது.  

அவன் முகத்தை வாஞ்சையுடன் தனது நடுங்கிய விரல்களால் தொட்டு பார்த்த தேன்மொழி, 

“என்ன ஆச்சு உங்களுக்கு? 

ஏன் இப்படி இருக்கீங்க? 

இங்கே இருந்து போகும் போது நல்லா தானே இருந்தீங்க…!!

யார் கூடயாவது சண்டை போட்டுட்டு வரீங்களா?” என்று அடுக்கடிகாக கேள்விகள் கேட்டாள். 

ஆனால் அதை பேசி முடிப்பதற்குள் இருந்த பதட்டத்தில் அவளது வார்த்தைகள் தந்தி அடித்தது. 

உடனே அவள் கையை பிடித்து இழுத்து அவளை தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு இறுக்கமாக அணைத்துக் கொண்ட அர்ஜுன்,

“இனிமே நான் உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன்.” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தான்.‌ 

அதை எதிர்பார்த்து இருக்காத தேன்மொழி தன் தலையை மட்டும் தூக்கி விழிகள் விரிய அவனைப் பார்த்தாள். 

அவளது முட்டை கண்கள் இரண்டிலும் தன் உருவத்தை கண்ட அர்ஜுனுக்கு திருப்தியாக இருந்தது. 

அதனால் அவன் லேசாக அவளைப் பார்த்து புன்னகைக்க, 

“சும்மாவே எனக்கு இவரை பார்த்தா படபடன்னு வரும். 

இப்ப என்ன இவர் என்ன எல்லார் முன்னாடியும் இப்படி ஹக் பண்ணிட்டு நிக்கிறாரு…

என் ஹார்ட் வேற ஹை ஸ்பீடுல போற ராக்கெட் மாதிரி வோகமா துடிக்குதே..

இவர் என்ன ஓட்டிட்டு நிக்கிறதுனால அத இவர் கண்டுபிடிச்சிடுவாரோ?” என்று நினைத்த தேன்மொழி 

அவன் கவனத்தை ‌திசை திருப்புவதற்காக “நான் உங்களுக்கு என்ன ஆச்சுன்னு கேட்டேன்.

நீங்க இன்னும் எனக்கு ஆன்சர் பண்ணல.” என்றாள். 

எந்த தைரியத்தில் அவள் அவனிடம் இப்படியெல்லாம் அனைவரின் முன்னிலையிலும் நிற்க வைத்து கேள்வி கேட்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. 

ஒருவேளை அது அவன் கட்டாத தாலி அவளுக்கு கொடுத்த அதிகாரமாக இருக்கலாம்.‌

அவள் அப்படி கேட்டவுடன் அர்ஜுன் சியாவின் கல்லறையில் தலைமுழுகி விட்டு வந்த அவனது கடந்த கால ஞாபகங்கள் மீண்டும் அவன் மண்டைக்குள் புகுந்து அவன் மூளையை குடைந்தது. 

இருப்பினும் தன் முன்னே இருந்த தேன்மொழியின் குட்டி முகத்தை பார்த்தவுடன் அவனுக்கு அதை எல்லாம் இப்போது நினைத்து வருந்த தோன்றவில்லை. 

உடனே தன் இரு கைகளாலும் அவள் கன்னங்களை ஏந்தி தன் கண்களை அவளது கண்களோடு கலக்க விட்டு, 

“நடந்து முடிஞ்ச எத பத்தியும் நான் பேச விரும்பல ஹனி. 

எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. 

Both mentally and physically I am exhausted. 

எல்லாத்தையும் தலை முழுக்கீட்டு புதுசா பொறக்குற மாதிரி நினைச்சு முதல்ல தலைக்கு குளிக்கணும்னு தோணுது. 

நீ எனக்கு ஹெல்ப் பண்றியா?”  என்று அவளிடம் கெஞ்சும் குரலில் கேட்டான் அர்ஜுன். 

அவன் இங்கே இருந்து செல்வதற்கு முன் அவளிடம் பேசியதை போல இப்போது அவன் அவளை அதிகாரம் செய்யவில்லை. 

ஆனால் திடீரென்று அவன் தன்னை குளிக்க ஹெல்ப் செய்ய சொன்னதால் ஆடிப்போன தேன்மொழி, 

“நானா.. நான் எப்படி உங்களுக்கு ஹெல்ப் பண்றது?” என்று திக்கி திணறி கேட்டாள். 

அவனிடம் “என்னால முடியாது. ஏன் இந்த வீட்ல வேற யாருமே இல்லையா? 

வேற யாரையாவது உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லுங்க.” என்று அவளுக்கு சொல்ல இதழ்கள் துடித்தது. 

ஆனால் சொன்னால் எங்கே அவன் தன் மீது கோபப்படுவானோ என்று நினைத்து அவள் அமைதியாக இருக்க, 

“நான் கிளம்பும்போது சொன்னதை அதுக்குள்ள மறந்துட்டியா? 

நீதான் என் வைஃப். என் கையில அடிபட்டு இருக்கு…

பாக்குறீல தெரியலையா? 

இப்படியே என்னால எப்படி குளிக்க முடியும்?” என்று அவன் அவளிடம் கேட்டான். 

அவர்கள் இருவரும் அருகருகில் நெருக்கமாக நின்று கொண்டிருந்ததால் அவன் பேசும்போது அவன் இதழ்கள் அசைவதையும், 

அவனது சூடான மூச்சுக்காற்று தன் மீது படுவதையும் கண்டு அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

கண்டிப்பாக அவளால் அவனை குளிக்க வைக்க முடியாது.

அதை நேரடியாக சொல்லி அவனை நிராகரிக்கவும் அவளுக்கு பயமாக இருந்ததால், 

“எனக்கு அதெல்லாம் தெரியாது. 

வேற யாரையாவது ‌ கூப்பிட்டு உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லுங்க.

நீங்க கோமாவுல இருக்கும்போது கூட மெடிக்கல் டீம்ல இருக்கிறவங்க‌ தான் உங்களுக்கு டவல் பாத் பண்ணாங்க. 

அவங்க இன்னும் இங்க தான் இருக்காங்க.

நான் அவங்கள வேணா வந்து உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்றேன்.” என்ற தேன்மொழி அவன் கைகளை எடுத்துவிட்டு விலகி செல்ல முயன்றாள்.

இனி ஒரு நொடி கூட அவளை விட்டு பிரிந்து இருக்கக் கூடாது  என்று ஏற்கனவே முடிவு எடுத்திருந்த அர்ஜுன், 

அவள் போக்கிற்கு விடாமல் அவளை தன்னுடன் சேர்த்து இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு,

“நான் என் மேலே ரொம்ப பொசுசிவ்.

பையனாவே இருந்தா கூட, எவனும் என்ன பார்க்கிறது எனக்கு பிடிக்காது. 

நான் கோமாவுல இருந்தப்ப வேற வழி இல்லாம என்ன மீறி எனக்கே தெரியாம அப்படி எல்லாம் நடந்துருச்சு..

பட் இனிமே அப்படி நடக்கிறத எல்லாம் என்னால அலோ பண்ண முடியாது.. 

உன்ன தவிர என்ன ஃபுல்லா பாக்குறதுக்கு வேற யாருக்கும் ரைட்ஸ் இல்ல. 

நான் நம்ம ரூம்ல வெயிட் பண்றேன். 

நீ சீக்கிரம் வா.” என்ற அர்ஜுன் அவளை விட்டுவிட்டு தனது அறையை நோக்கி நடக்க தொடங்கினான்.

அவனது குடும்பத்தினர்கள் அனைவரும் அங்கே தான் இதுவரை நின்று நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். 

ஆருத்ராவும், சித்தார்த்தும், மகிழனும் கூட அங்கே தான் இருந்தார்கள். 

பெரியவர்கள் அனைவரும் அர்ஜுனிற்க்கு என்ன ஆனதோ! என்று நினைத்து பதறி அடித்துக் கொண்டு அங்கே ஓடி வந்திருந்தார்கள்.

ஆனால் இப்போது அவன் தேன்மொழியுடன் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருந்ததை பார்த்தவுடன், 

“இப்ப அர்ஜுன் தேன்மொழி கூட இருக்குறதுக்கு தான் ஆசைப்படறான். 

எப்படியோ அவன் நார்மல் ஆகிட்டான். 

அதுவே நமக்கு போதும்.

இனிமே அவன அவனே பாத்துக்குவான்.

தேன்மொழியும் அவனும் தனியா இருக்கட்டும். 

நம்ம போய் அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.” என்று நினைத்து சத்தம் இல்லாமல் மீண்டும் தங்களது அறையை நோக்கி நடக்க தொடங்கினார்கள். 

ஆனால் ஆருத்ரா ஜனனியின் கையை விட்டுவிட்டு “நான் டாடி கிட்ட போறேன்.” என்று வேகமாக செல்ல, 

உடனே தாவி ஓடிச் சென்று அவளை பிடித்து தடுத்து நிறுத்திய ஜனனி,

“அங்க பாரு.. உங்க டாடிக்கு உடம்பு சரியில்ல. 

டாக்டர் முதல்ல அவரை செக் பண்ணட்டும். 

மம்மி அவர் கூட இருந்து அவர பாத்துப்பாங்க. 

அவர் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். நீங்க போய் முதல்ல சாப்பிடுங்க. 

ஈவினிங் நம்ம டாடிய பார்க்கலாம்.

இப்ப நீ போய் அவங்கள டிஸ்டர்ப் பண்ணா டாடி உன் மேல கூப்பிடவாரு.” என்று சொல்லி அவளை பயமுறுத்தினாள். 

அர்ஜுனின் கோபம் பற்றி அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். 

இருப்பினும் அவன் ஆருத்ராவிடம் அப்படி எல்லாம் என்றும் கோபப்பட்டது இல்லை. 

இருந்தாலும் அவன் கோபப்படுவான் என்று சொன்னதற்கே அவளுக்கு கொஞ்சம் பயமாக இருந்ததால், 

இப்ப என்ன செய்றது? என்று கேட்பதைப் போல அவள் தன் அண்ணன் சித்தாரத்தை பார்த்தாள். 

அவனுக்கும் ஜனனி சொன்னது தான் சரி என்று பட்டது. 

அதனால் “எனக்கு பசிக்குது ருத்ரா.‌ 

நீ வா, முதல்ல நம்ம போய் சாப்பிடலாம். 

டாடி ரெஸ்ட் எடுக்கட்டும்.

அத்தை சொன்ன மாதிரி ஈவினிங் நம்ம போய் அவரை பார்க்கலாம்.” என்ற சித்தார்த் அவளை அழைத்துக் கொண்டு டைனிங் ஏரியாவிற்கு சென்றான். 

பெருமூச்சு விட்ட ஜனனி கிளாராவை பார்த்து,

“எப்படியும் நீங்களும் சரியா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. 

முதல்ல போய் சாப்பிட்டு அப்பறமா உங்க ரூமுக்கு போங்க. 

அப்படியே இவங்க ரெண்டு பேரும் ஒழுங்கா சாப்பிடுறாங்களான்னு பார்த்துக்கோங்க..!!

அண்ணாவுக்கும், அண்ணிக்கும் அவங்க ரூமுக்கே சாப்பாடு அனுப்பிடுங்க.” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள். 

இப்படி அனைவரும் ஆளுக்கு ஒரு திசையில் சென்று விட்டதால் அங்கே தனியாக நடு ஹாலில் நின்று கொண்டு இருந்த தேன்மொழி, 

“அய்யோ.. என்ன எல்லாரும் என்ன தனியா விட்டுட்டு ஆளுக்கு ஒரு பக்கம் போயிட்டாங்க..!!

இப்ப நான் எங்க போறது? 

அர்ஜுன் சொன்ன மாதிரி நான் அவர் ரூமுக்கு போய் அவருக்கு குளிக்க ஹெல்ப் பண்ணனுமா?” என்று யோசித்து பயத்தில் நடுங்கும் உடலோடு அங்கேயே நின்று கொண்டிருந்தாள். 

அந்த வீட்டின் ஒரு மூலையில் நின்று நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த மகேஷின் குட்டி இதயம் குட்டி குட்டியாக உடைந்தது. 

அர்ஜுன் அத்தனை நெருக்கமாக தேன்மொழியுடன் நின்றதை பார்க்கும்போதே அவன் இதயம் கனத்தது. 

அதைவிட அவனை கஷ்டப்படுத்திய விஷயம் என்னவென்றால், தேன்மொழி அவனை மறுத்து எதுவும் செய்யாதது தான்.

அதனால் “அப்போ நீ மாறிட்டியா தேன்மொழி? 

இந்த வாழ்க்கையை அர்ஜுன் சார் கூட சேர்ந்து வாழணும்னு நீ முடிவு பண்ணிட்டியா? 

அதான் அவர் கூட அப்படி குளோசா நின்னு பேசிட்டு இருந்தியா?” என்று அவளைப் பார்த்து தனக்குள் கேட்டுக் கொண்டான். 

அதை அவளிடம் நேரடியாக கேட்கவோ, அவளுக்காக தன் மனதில் திடீரென்று துளிர்விட்டு ஆரம்ப நிலையில் இருக்கும் காதலைப் பற்றி அவளிடம் சொல்லவோ சத்தியமாக செத்தாலும் அவனுக்கு இந்த ஜென்மத்தில் தைரியம் வராது. 

அது அவனுக்கும் நன்றாக தெரியும் என்பதால், தன் மனதிற்குள் சோக கீதம் வாசித்தவாறு தேன்மொழியின் கண்களில் படாமல் அங்கிருந்து நகர்ந்தான் மகேஷ். 

தங்களது அறைக்கு செல்ல பயந்து கொண்டு தேன்மொழி ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, 

அவளைத் தேடிக் கொண்டு அங்கே வந்த மகேஷின் அம்மா, 

“அர்ஜுன் தம்பி உன்னை கூப்பிடுறாரு மா..

சுடு தண்ணி போட்டு ரெடியா இருக்குன்னு உன்‌ கிட்ட சொல்ல சொன்னாரு.

நீ சீக்கிரம் போ, அவர் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு.” என்று அவளிடம் சொன்னாள். 

அதனால் உள்ளுக்குள் தனக்கு உதறல் எடுத்தாலும் வெளியில் தன்னை சாதாரணமாக வைத்துக் கொண்ட தேன்மொழி தன் பயத்தை மறைத்துவிட்டு,

“ம்ம்.. ஓகே மா..

நான் போய் அவர பாக்குறேன். 

நீங்க.. நீங்க.. போங்க.‌.!!” என்று சொல்லிவிட்டு ஏதோ அடி பிரதட்சணம் செய்வதைப்போல மெல்ல அடி மேல் அடி வைத்து தங்களது அறையை நோக்கி சென்றாள். 

– மீண்டும் வருவாள்.. ❤️

(என்னை பிரதிலிப்பியில் ஃபாலோ செய்து சப்போர்ட் செய்யுங்கள்.)

You may also like

Leave a Comment

About Me

Featured