Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 199

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 199

by Thenaruvi Tamil Novels
11 views

அத்தியாயம் 199

ஜனனி தன் மீது வைத்திருக்கும் காதலை பயன்படுத்தி சந்தோஷ் தொடர்ந்து ஏதேதோ பேசி அவளை ஏமாற்றிக் கொண்டே இருந்ததால் எரிச்சல் அடைந்த அர்ஜுன் தன் கையில் இருந்த துப்பாக்கியால் அவனை நோக்கி சுட்டான். “சந்தோஷ்!” என்று தனது அடித் தொண்டையில் இருந்து கத்திய ஜனனி அவன் அருகில் செல்ல முயற்சி செய்தாள்.

ஆனால் பிரிட்டோ அவளது கையை விடாமல் இறுக்கமாக பிடித்து இருந்ததால் அவளால் அவன் அருகில் செல்ல முடியவில்லை. அர்ஜுன் தன்னை கொலை வெறியில் பார்த்துக் கொண்டு இருப்பதை வைத்தே ஒரு கட்டத்திற்கு மேல் கண்டிப்பாக அவன் தன்னை நோக்கி சுடுவான் என்று ஏற்கனவே யூகித்து வைத்து இருந்த சந்தோஷ் அப்படியே தரையில் அமர்ந்து விட்டான்.

அதனால் அவனது நெற்றி பொட்டை பதம் பார்க்க சென்ற அர்ஜுனனின் புல்லட் அவனைத் தாண்டி பயணிக்க, இப்போது புல்லட் தன் பக்கம் வருவதை உணர்ந்த அவனுக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த சுனில் அர்ஜுன் அவனை எச்சரிக்கும் விதமாக “சுனில் கேர்ஃபுல்!” என்று கத்துவதற்கு முன்பாக விலகி சைடில் சென்று விட்டான்.

அதனால் அர்ஜுனனின் புல்லட் அவர்களுக்கு எதிரில் இருந்த ப்ளே ஸ்டேஷன் ஒன்றின் மீது பட்டு வெடித்தது. யார் என்ன சொன்னாலும் சந்தோஷம் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்து இருந்த ஜனனி அர்ஜுனுக்கு அவன் மீது இருக்கும் சந்தேகத்தை விளக்கி எப்படியாவது அவனுடன் இங்கே இருந்து எங்கேயாவது கண் காணாத ஒரு இடத்திற்கு சென்று தனது குழந்தைகளுடன் சந்தோஷமாக தன் வாழ்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று இவ்வளவு நேரம் நினைத்திருந்தாள்.

ஆனால் அவள் பேசிக் கொண்டு இருக்கும்போதே அர்ஜுன் கோபப்பட்டு சந்தோஷை சுட்டுக் கொல்ல முயற்சி செய்யும் அளவிற்கு செல்வான் என அவள் துளியும் எதிர்பார்த்து இருக்கவில்லை. அதனால் கோபத்தில் சிவந்த கண்களுடன் அர்ஜுனை முறைத்து பார்த்த ஜனனி “நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைன்னா! இந்நேரம் என் சந்தோசுக்கு ஏதாவது ஆகி இருந்தா நான் என்ன பண்ணுவேன்? உங்களுக்கு எப்படி அவனை கொல்றதுக்கு தைரியம் வந்துச்சு? நான் சொல்றத நல்லா கேட்டுக்கோங்க.. நீங்க மட்டும் அவன ஏதாச்சு பண்ணிங்கனா, என் குழந்தைங்க ரெண்டு பேருக்கும் பாய்சன் குடுத்துட்டு நானும் பாய்சன் குடிச்சு செத்துப் போயிடுவேன் சொல்லிட்டேன்… I swear anna I will do this!” என்று ஆத்திரம் பொங்க கத்தி சொன்னாள்.

அவளுக்கு இப்போதே அர்ஜுன் அருகில் சென்று அவன் சட்டையை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டு கத்த வேண்டும் போல இருந்தது. அதனால் அர்ஜுனை பார்த்தவாறு தன் கைகளை வேகமாக உதறிய ஜனனி “இப்ப என் கையை விட போறியா இல்லையா?” என்று அலறினாள். தன் கணவனுக்காக அவள் பத்ரகாளியாக மாறி ஆவேசம் பொங்க அப்படி கத்தியதில் ஒரு நொடி பிரிட்டோ ஆடிப் போய் விட்டான்.

ஜனனிக்கு சந்தோஷ் மீது எந்த அளவிற்கு காதல் இருக்கிறது என அவனுக்கும் தெரியும் தான். ஆனால் அர்ஜுனின் ஃபேமிலியை பொறுத்த வரை யார் யாருக்கு எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் கூட, பிரசாத் உட்பட அர்ஜுனனின் வார்த்தைக்கு யாரும் மறுப்பேச்சே பேச மாட்டார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு அவன் மீது இருக்கும் பயம் மட்டுமல்ல மரியாதையும் தான்.‌

தங்களது சாம்ராஜ்யத்தை காத்து நிற்கும் குலசாமியாகவே அவர்கள் அனைவரும் அர்ஜூனை பார்த்தார்கள். ஆனால் ஜனனி இன்று அவனையே சந்தோஷிற்காக எதிர்க்க தயாராக இருந்தாள். ஜனனிடம் தெரிந்த ஆபாசத்தை கண்ட பிரிட்டோ ஷாக்காகி அவளையே அசைவின்றி பார்த்துக் கொண்டு நிற்க, அந்த கேப்பில் அவனது பிடி கொஞ்சம் தளர்ந்ததால் அவன் கையை உதறிவிட்டு அர்ஜுனை நோக்கி வேகமாக சென்ற ஜனனி “உங்களுக்கு என் சந்தோஷ கொல்லனும்னா  முதல்ல என்ன சொல்லுங்க அண்ணா.  என் கண்ணு முன்னாடி என்னால என் புருஷன் சாகுறத பாக்க முடியாது.” என்றாள்.

அவளது கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்டியது. ஆனால் அதற்கு நேர் மாறாக அவளது சிவந்த கண்கள் அவளுடைய கோபத்தை வெளிப்படுத்தியது.. கண்டிப்பாக தனது ரத்தம் இப்படித் தான் நடந்து கொள்ளும். ஜனனி சந்தோஷிற்காக வந்து நிற்பாள் என்று ஏற்கனவே எதிர்பார்த்து இருந்த அர்ஜுன் “உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா இல்லையா ஜனனி?” என்று பொறுமையாக கேட்டான்.

அதற்கு பதில் சொல்லாமல் அவனது துப்பாக்கியை தனது நெற்றிப்போட்டியில் வைத்த ஜனனி துளியும் பயம் இல்லாமல் அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து, “சிம்பிள் அண்ணா.. உங்களுக்கு சந்தோஷ கொல்லனும்னா கொஞ்சம் கூட யோசிக்காம அதுக்கு முன்னாடி நீங்க என்ன கொல்லுங்க!” என்று சொன்னதையே மீண்டும் சொன்னாள்.

“உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா ஜனனி?” என்று பிரிட்டோ கோபமாக கேட்க, “ஐயோ ஜனனி அக்கா ஏன் இப்படி பண்றீங்க? நீங்க இப்படி முட்டாளா இருக்கறதுனால தான் இந்த சந்தோஷ் இத்தனை நாளா உங்க கூடவே இருந்து உங்களை ஏமாத்திட்டு இருந்து இருக்கான்!” என்று சுனில் தன் பங்கிற்கு ஆற்றாமையுடன் சொன்னான்.

ஆனால் அப்போதும் பிடிவாதமாக அர்ஜுனின் துப்பாக்கியை தன் கைகளால் இறுக்கிப் பிடித்த ஜனனி தானாக ட்ரிகரில் தன் கையை வைத்துக் கொண்டு “நீங்க என் ஹஸ்பண்டை விடுவீங்களா மாட்டீங்களா அண்ணா?” என்று தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதைப் போல தன் முடிவில் உறுதியாக இருந்தாள்.

அங்கே நடந்த கலவரத்தில் தூங்கிக் கொண்டு இருந்த அவளது குழந்தைகள் இருவரும் போட்டி போட்டு அழ தொடங்கினார்கள். ஓரக்‌ கண்ணால் அவர்களைப் பார்த்த ஜனனிக்கு தன் உயிரே போவதைப் போல இருந்தது. அவளது இதயம் பல துண்டுகளாக உடைந்தது. கண்டிப்பாக அவள் இன்னும் இந்த உலகம் அழியாத அந்த இரண்டு பிஞ்சு குழந்தைகளை விட்டுவிட்டு இறக்க விரும்பவில்லை. ஆனால் அதற்காக அவளால் சந்தோஷையும் விட்டுவிட முடியாதே! அதனால் என்ன ஆனாலும் தனக்குப் பிறகு‌ தான் அவனது உயிர் போக வேண்டும் என்று அவள் உறுதியாக இருந்தாள்.

நடக்கும் அனைத்தையும் பார்த்து நக்கலாக ஜனனிக்கு பின்னே நின்று சிரித்துக் கொண்டு இருந்த சந்தோஷ் அனைவரும் மாறி மாறி பேசுவதால் தானும் தன் பங்கிற்கு performance செய்ய வேண்டும் என நினைத்து பேச தொடங்கினான்.‌ “ஏன்  ஜனனி இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க? சீஃப்க்கு என் மேல இருக்கிற கோபத்துக்கு நீ எதுக்காக பலியாகணும்? அவர் என்னை கொல்ல நினைச்சா கொல்லட்டும்.‌ எனக்கு நீயும் நம்ம குழந்தைகளும் தான் முக்கியம். நம்ம குழந்தைகளுக்கு அவங்க அம்மா ரொம்ப முக்கியம். ப்ளீஸ் ஜனனி நகர்ந்து போ!

இன்னிக்கி எல்லாமே ஒரு முடிவுக்கு வரட்டும். சீஃப் என்ன செய்யணும்னு நினைக்கிறாரோ அதை அவர் செய்யட்டும். அவர் கையாள சாகிறதுல எனக்கு சந்தோசம் தான். கண்டிப்பா பியூச்சர்ல என்ன விட பெட்டரா உனக்கு இன்னொருத்தன் கிடைப்பான். போகப்போக நீ என்னை மறந்திடு ஜனனி.” என்று அநியாயத்திற்கு டயலாக் பேசிய சந்தோஷ் வராத கண்ணீரை வரவழைத்து அழுது அவள் முன்னே சீன் போட்டான்.

“ப்ளீஸ் சந்தோஷ் நீ அழாத! நான் அண்ணா கிட்ட பேசுறேன். நான் உயிரோட இருக்கிற வரைக்கும் உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்.” என்று ஜனனி சந்தோஷ் பக்கம் திரும்பி சொல்லிக் கொண்டு இருக்கும்போது அவள் கையைப் பிடித்து அவளை தன் பக்கம் இழுத்த அர்ஜுன் அவளது கண்களை நேருக்கு நேராக பார்த்து “இந்த நன்றி கெட்ட நாய‌ உனக்கு எத்தனை வருஷமா தெரியும்? மேக்ஸிமம் ஒரு பத்து வருஷம்? But we are sane blood ஜனனி.. நானும் ஆகாஷும் எத்தனையோ தடவ சின்ன வயசுல இருந்து எது எதுக்காகவோ சண்டை போட்டு ஒருத்தர ஒருத்தர் வெறித்தனமா அடிச்சுகிட்டு இருந்திருக்கோம்..

பட் நீ பொறந்ததுக்கப்புறம் எல்லாமே மாறிடுச்சு.‌ நான் உனக்கு அண்ணாவா இல்லை.. அப்பாவா இருந்து என் கண்ணுக்குள்ள வச்சு உன்ன பாத்துக்கிட்டேன்.‌ டாடி பிசினஸ் ரிலேட்டட் டிரிப்ஸ் போகும்போது உன்ன தனியா விட கூடாதுன்னு ஒரு ஷேடோ மாதிரி உன்ன ப்ரொடெக்ட் பண்ண எப்பயும் நான் பின்னாடியே இருந்துருக்கேன்.‌

அப்படியெல்லாம் உன்னை பார்த்து பார்த்து வளர்த்த உன் அண்ணா நான் கேட்கிறேன்.. உனக்கு கெட்டது செய்யணும். உன்ன கஷ்டபடுத்தனும்னு நான் நெனப்பனா? இந்த நாயை எனக்கு பிடிக்கலன்னா.. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றது தெரிஞ்சப்பவே இவன நான் கொன்னு பொதச்சிருப்பேன். நான் இவன் மேல கோவமா இருந்தா, இத்தனை வருஷமா இவன் உயிரோட இருந்து இருப்பானா? இப்ப இவன கொல்ற அளவுக்கு நான் வெளியில இருக்கேனா, அந்த அளவுக்கு இவன் என்ன பண்ணிருப்பான்னு யோசிக்க மாட்டியா நீ? உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா இல்லையா? வாயை திறந்து சொல்லு ஜனனி.. என்னால உன்ன கஷ்டப்படுத்த முடியுமா?” என்று ஜனனியின் தோள்களை பிடித்து உலுக்கியவாறு தனது பற்களை கடித்துக் கொண்டு ஆவேசமாக கோபத்தில் கேட்டான்.

அவன் பேசப்பேச ஒரு நொடி தனது குழந்தை பருவத்திற்கே சென்று வந்த ஜனனி கண்ணீருடன் இல்லை என்பதைப் போல தலையாட்டி விட்டு உதடுகள் துடிக்க, “நீங்க எப்பவுமே எனக்கு ஒரு நல்ல அண்ணாவா இருந்திருக்கீங்க. உங்க தங்கச்சியா எனக்கு எப்பவுமே உங்க மேல நம்பிக்கையையும் மரியாதையும் நிறைய இருக்கு அண்ணா. நீங்க என்னை  என்ன பண்ண சொன்னாலும் நான் கண்ண மூடிட்டு பண்ணுவேன்!” என்றாள்.

அவளது தோள்களில் கை போட்டு அவளை தன் பக்கம் இழுத்த அர்ஜுன் “நீ எனக்காக எதுவும் செய்ய வேண்டாம் ஜனனி. நீ என்னை நம்பி நான் சொல்றத பொறுமையா கேட்டா போதும்! இதோ உன் புருஷன்ற பேர்ல நம்ம ஃபேமிலிகுள்ள வந்தானே இந்த சந்தோஷ்.. இவனோட பிளானே நம்ம ஃபேமிலிகுள்ள வந்து அப்பப்ப ப்ராப்ளம் பண்ணி நம்மள பிரிக்க ட்ரை பண்றது..

சான்ஸ் கிடைக்கும்போது எல்லாம் எதுலயாவது நம்மளை மாட்டி விடுறதுன்னு ஏதாவது பண்ணி நம்ம கூடயே இருந்து நமக்கு குழி பறிக்கிறது தான். அது எல்லாத்தையும் கூட நான் மன்னிச்சிடுவேன். ஆனா என்.. என் சியா செத்ததுக்கும் இவன் தான் காரணம்.

அப்புறம் என் தேன்மொழி அவளையும் என் கிட்ட இருந்து இவன் பிரிக்க பார்த்திருக்கான். அன்னைக்கு தேன்மொழி மேல கரண்ட் கம்பம் விழ பாத்துச்சில்ல அந்தப் பிளானே இவனோடது தான். பாவம் அதுல சோனியா அத்தை மாட்டிக்கிட்டாங்க. இதே மாதிரி ஒவ்வொரு தடவையும் தேன் மொழியையும் என்னையும் டார்கெட் பண்ணி இவன் நிறைய பண்ணி இருக்கான்.

இவன் இதையெல்லாம் பண்றது இல்லாம சுனிலையும் இவன் கூட பார்ட்னர் பண்ண ட்ரை பண்ணி இருக்கான். நல்லவேளை நம்ம சுனில் இவன் அளவுக்கு கேவலமானவனா இல்ல. அதான் இப்படி ஒன்னு நடக்குதுன்னு தெரிஞ்ச உடனே டைரக்டா வந்து என் கிட்ட சொல்லிட்டான்.

சுனில் சொன்னதை வச்சு கொஞ்சம் கொஞ்சமா இது எல்லாத்துக்கும் பின்னாடியும் யார் இருக்காங்கன்னு நாங்க டிராக் பண்ணதுல தான் எல்லா வேலையையும் கூடயே இருந்து பாக்குறது இந்த நாய் தான் நாங்க கண்டுபிடிச்சோம்.” என்றான்.‌

மீண்டும் வருவாள் 💕

You may also like

Leave a Comment

About Me

Featured