அத்தியாயம் 21
அனைவரும் ஆளுக்கு ஒரு திசையாக சென்று தேன்மொழியை தேடிக் கொண்டு இருந்தார்கள்.
கூட்டத்தோடு கூட்டமாக லிண்டா, கிளாரா, பிரிட்டோ, மகேஷ் என அனைவரும் கூட மற்றவர்களுடன் சேர்ந்து தேன்மொழியை தேடிக் கொண்டு இருந்தார்கள்.
அது இரவு நேரம் என்பதால் சில இடங்களில் இருட்டாக இருக்க,
கையில் டார்ச் லைட்டை வைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்ற மகேஷ் தேன்மொழி தேடிக் கொண்டு இருந்தான்.
அப்போது அவனுக்கு லேசாக அவளுடைய கால் கொலுசின் சத்தம் கேட்பதைப் போல இருக்க,
அவளை பெயர் சொல்லி அழைக்கலாம் என்று நினைத்த மகேஷ் “வேண்டாம் வேண்டாம்.
அவங்களே அர்ஜுன் சாரை பார்த்து பயந்து போய் தான் எங்கயோ ஒளிஞ்சி இருக்காங்க.
நம்ம போய் அவங்கள பேர் சொல்லி கூப்பிட்டா, அலர்ட் ஆகி எங்கேயாவது மறுபடியும் போய் மறைஞ்சுக்குவாங்க.” என்று நினைத்து மெல்ல நடந்து சென்று அனைத்து இடங்களிலும் அவளை தேடினான்.
அப்போது தேன்மொழி பெரிய பெரிய தண்ணீர் தொட்டிகளுக்கு நடுவில் பயத்துடன் அமர்ந்து இருப்பதை கண்ட மகேஷ் மேல அவள் அருகில் சென்று அவளுடைய தோள்களில் கை வைத்தான்.
உடனே பயந்து போய் திடுக்கிட்டு திரும்பிய தேன்மொழியிடம் “பயப்படாதீங்க.. பயப்படாதீங்க மேடம்.. நான் தான் மகேஷ்!” என்று அவன் சொன்னவுடன் எழுந்து நின்று தாவி அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் அவள்.
அவளுடைய உடல் பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தது. பொதுவாகவே அவளுக்கு இருட்டு என்றால் பயம்.
இப்போது அர்ஜுன் தான் சியாவை கொலை செய்து இருக்கிறான் என்று தெரிந்த பிறகு,
“இங்கே இருக்கிற எல்லாரும் என்னமோ அர்ஜுன் அவரோட பொண்டாட்டிய ரொம்ப லவ் பண்ணதா சொல்றாங்க.
அப்புறம் எதுக்கு அவரே அவர் பொண்டாட்டிய கொல்லணும்?
அவங்களுக்கு நடுவுல என்ன பிரச்சனையோ தெரியல..
இந்த பாலா போன ஃபேமிலில இருக்கிறவங்க தேவையில்லாம என்ன கொண்டு வந்து இந்த பிரச்சனைக்குள்ள மாட்டி விட்டுட்டாங்க.
இத்தனை நாளா நிம்மதியா இருக்க முடியலேன்னா கூட, இந்த ஆளு கோமாவுல இருந்ததுனால எந்த பிரச்சனையும் இல்லாம நான் பாட்டுக்கு இருந்தேன்.
இப்ப அவன பாத்தாலே பயமா இருக்கு.
அந்த பொண்ணை கொன்ன மாதிரி, நானும் அவள மாதிரியே இருக்கேன்னு அவன் என்னையும் கொன்னுட்டா என்ன பண்றது?” என்று எல்லாம் ஏதேதோ யோசித்து அவள் பயத்தின் உச்சத்திற்கே சென்று இருந்தாள்.
அவன் கையில் இருந்த மொபைல் ஃபோன் பிளாஷ் லைட் வெளிச்சத்தில் அவளுடைய வியர்வை பூத்து இருந்த முகத்தை பார்த்த மகேஷ் அவளது இறுக்கமான திடீர் அணைப்பால் ஒரு நொடி தடுமாறித்தான் போனான்.
அவள் கண்களில் இருந்து அருவி போல கொட்டிய கண்ணீர் அவனது சட்டையை நினைக்க,
“ப்ளீஸ் என்ன புடிச்சிட்டு போய் அவர் கிட்ட விட்டுடாதீங்க.
அந்த சியாவை கொன்ன மாதிரி அவர் என்னையும் கொன்னுடுவாரு.
அட்லீஸ்ட் நான் உயிரோட இருந்தால் ஆவது என்னைக்காவது ஒரு நாள் என் ஃபேமிலில இருக்கிறவங்கள பார்க்க முடியும் என்ற நம்பிக்கையோட இருப்பேன்.
இவர் என்ன கொன்னுட்டா என்னோட சேர்ந்து அந்த நம்பிக்கையும் செத்துப் போயிடும்.
அவருக்காக அவருக்காகன்னு சொல்லி இந்த குடும்பத்தில இருக்கிறவங்க எல்லாரும் என்ன நல்லா அவர்கிட்ட மாட்டி விட்டுட்டாங்க.
நீங்களாவது என்ன அவர் கிட்ட இருந்து காப்பாத்துங்க மகேஷ் ப்ளீஸ்!
நான் அவர் கிட்ட போக மாட்டேன்.
எனக்கு அவரைப் பார்த்தாலே பயமா இருக்கு.
நான் எங்க அம்மா கிட்ட போகணும்.
என்னை எப்படியாவது இந்தியால கொண்டு போய் விட்ருங்க உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன்..!!” என்று குழந்தை போல அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அழுது கதறி கெஞ்சினாள்.
அவளை அப்படி பார்க்க அவனுக்கு பாவமாக இருக்க, உண்மையில் அவளது கதறலில் அவன் இதயம் அவளுக்காக உருகியது.
அதனால் அவள் கேட்பதைப் போல தான் அவளுக்கு ஏதேனும் உதவி செய்தால் தன்னுடைய நிலைமை என்னவாகும் என்றெல்லாம் கூட யோசிக்காமல் ஒரு நொடி அவன் மனம்,
“பாவம் இந்த பொண்ணு.. இங்க வந்து ரொம்ப கஷ்டப்படுறா.
அர்ஜுன் சார் ரொம்ப நல்லவரு தான்.
சியா மேடமை அவர் ரொம்ப லவ் பண்ணாரு.
ஆனா எல்லாருமே அவர் தான் அவங்கள கொன்னுட்டாருன்னு சொன்னாங்க.
அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு நம்ப நினைச்சுக்கிட்டாலும், அட்லீஸ்ட் சியா மேடமை அவர் கொன்னதுக்காவது ஏதோ ஒரு ரீசன் இருக்கும்.
ஆனா பாவம் இந்த தேன்மொழி என்ன பண்ணா?
நடந்தது எல்லாமே தெரிஞ்சதுக்கு அப்புறம், இவ பயப்படுறதிலயும் ஒரு நியாயம் இருக்கே..
இங்க நடக்கிற எதுக்கும் இவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஒரு அப்பாவி சின்ன பொண்ணை கூட்டிட்டு வந்து கல்யாணம் என்ற பேர்ல அர்ஜுன் சார் கூட சேர்ந்து வாழ சொன்னா, அவளால எப்படி முடியும்?
பேசாம இவ கேக்குற மாதிரி ஏதாவது பண்ணி இவளை இங்க இருந்து தப்பிக்க வெச்சிடலாமா?” என்று அவளுக்காக யோசித்தது.
ஆனால் அவன் முழுதாக அப்படி யோசித்து முடிப்பதற்குள் அங்கே பிரிட்டோ உடன் ஓடி வந்த கிளாரா,
“நல்லவேளை மகேஷ் நீ இவங்களை இங்க இருந்து போக விடல.
அர்ஜுன் சார் இவங்கள பாக்காம ட்ரீட்மென்ட் பண்ணிக்க மாட்டேன்னு அடம் பிடிச்சுட்டு இருக்காரு.
நீ அவங்கள என் கிட்ட விட்ரு. நான் பாத்துக்குறேன்.”
என்று சொல்லி தேன்மொழியின் கையைப் பிடித்து மகேஷிடம் இருந்து அவளை பிரித்து தன்னுடன் இழுத்துச் சென்றாள்.
அன்று தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்து கிளாரா தன்னை பிரித்து இங்கே கடத்தி வந்ததைப் போல, இப்போது என்னவோ தனது நீண்ட நாள் காதலனிடம் இருந்து தன்னை பிரித்து செல்வதைப் போல கலங்கிய கண்களுடன் மகேஷை பார்த்த தேன்மொழி,
“மகேஷ்… மகேஷ்… ப்ளீஸ் என்ன காப்பாத்து…
நான் இங்க இருந்து போகணும்.
என்னால இங்கயே இருந்து சாக முடியாது.
எனக்குன்னு ஒரு ஃபேமிலி இருக்கு. நான் அவங்க கிட்ட போகணும்.
எனக்கு இங்க இருக்க பிடிக்கல. என்னை நீயாவது புரிஞ்சுக்கோ ப்ளீஸ்…
மகேஷ்… ப்ளீஸ் ஹெல்ப் மீ மகேஷ்…!!” என்று அவனை திரும்பிப் பார்த்து அவன் பெயரை சொல்லி தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தாள்.
அதனால் அங்கேயே கலங்கிய கண்களுடன் நின்ற மகேஷ் அவள் தன் கண்களை விட்டு மறைந்த பிறகு,
ஏனோ தன் உயிரே தன்னை விட்டு பிரிந்து செல்வதைப்போல உணர்ந்தான்.
அவனுக்கு ஏன் இப்படி ஒரு விசித்திரமான உணர்வு ஏற்படுகிறது என்று அவனுக்கே தெரியவில்லை.
அது புரியாமல் அவன் அங்கேயே இருக்க, அவன் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் கன்னங்களை நினைத்தது.
அதில் நிதானம் பெற்று தன் கண்ணீரை துடைத்துக் கொண்ட மகேஷ்,
“என்ன நடக்குது இங்க? நான் எதுக்கு தேவை இல்லாம இந்த பொண்ணுக்காக கண்ணீர் சிந்தணும்?
அவ அர்ஜுன் சாரோட வைஃப்.
அவளே நினைச்சாலும் இனிமே அத யாராலையும் மாத்த முடியாது.
இது அவளை விட எனக்கு நல்லா தெரியும்.
அப்படி தெரிஞ்சு இருந்தும், நான் ஏன் அவளுக்காக இவ்வளவு யோசிக்கிறேன்?
ஏன்..??
என்னால அவள காப்பாத்த முடிஞ்சா நல்லா இருக்கும்னு எனக்கு ஏன் தோணுது..??
அவ ஆசைப்படுற மாதிரி அவளை இங்க இருந்து கூட்டிட்டு போய் அவ குடும்பத்துக்கு கூட சேர்த்து வைக்கணும்னு எனக்கு ஏன் தோணுது?
அவளோட கண்ணீர் என்ன ஏன் ஏதோ பண்ணுது?
இப்பயே போய் அவ கண்ண தொடச்சி விட்டு உனக்காக நான் இருக்கேன்னு ஏன் சொல்லணும்னு எனக்கு தோணுது?
ஏன்…??
ஐயோ கடவுளே…!!
ஏன் இந்த தேவை இல்லாத பிரச்சனைக்குள்ள வாலண்டியரா போய் என்ன சிக்க வைக்கிற?” என்று தனக்குள் கேள்வி கேட்டு கொண்டவனுக்கு தன் தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.
அதனால் அப்படியே தன் தலையின் மீது கை வைத்து ஒரு ஓரமாக தரையில் அமர்ந்து விட்டான் மகேஷ்.
அவனையும் மீறி தேன் மொழியை நினைத்து அவன் கண்களில் இருந்து தொடர்ந்து கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது.
அவளுக்கான அவன் மனதிற்குள் இருக்கும் இந்த விசித்திரமான ஃபீலிங்ஸ்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தன்னுடனே போராடிக் கொண்டு இருந்தான் மகேஷ்.
தேன்மொழி ஒரு பக்கம் கிளாராவும் மற்றொரு பக்கம் பிரிட்டோவும் பிடித்து தரதரவென இழுத்து கொண்டு அர்ஜுனின் அறைக்கு சென்றார்கள்.
அங்கே கட்டிலில் படுத்திருந்த அர்ஜுனிற்கு மருத்துவர்கள் டிரீட்மென்ட் கொடுக்க முயற்சி செய்ய அவர்களிடம் “நான் முதல்ல சியாவை பாக்கணும்.
அவ கிட்ட பேசணும். என்னால மறுபடியும் அவளை இழக்க முடியாது.
அவளை இங்க வர சொல்லுங்க..!!” என்று சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.
கிளாராவும், பிரிட்டோவும் அப்போது தேன்மொழியை உள்ளே வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல,
“நான் வர மாட்டேன் என்ன விடுங்க…
ஏய்.. என்ன விடு டி..!!
நான் என் வீட்டுக்கு போகணும்.
எங்க அம்மாவையும் தம்பியையும் பாக்கணும்.
என்ன விடுங்க.. நான் போகணும்.. எனக்கு இந்த ஆள பாக்க புடிக்கல.” என்று அவள் தொடர்ந்து அழுது கதறிக் கொண்டே இருந்தாள்.
ஏற்கனவே பலவீனமாக இருந்த அர்ஜுன் இன்னும் அவளை அந்த நிலையில் கண்டு மனதளவில் பாதிக்கப்பட்டு கலங்கிய கண்களுடன்,
“நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன் டி.
ஏன் என்ன பார்த்து இப்படி பயப்படுற?
நான் தெரியாம பண்ண தப்புக்கு எனக்கு இவ்வளவு பெரிய பனிஷ்மென்ட் கொடுக்காத.
என்ன மன்னிச்சிடு டி.. ப்ளீஸ்…
என்ன விட்டு போகணும்னு நினைக்காத.
இங்க வா.. என் கிட்ட வா…!!
உன்னை நான் எவ்வளவு லவ் பண்றேன்னு ப்ரூவ் பண்ண எனக்கு ஒரு சான்ஸ் குடு.” என்று கட்டிலில் படுத்திருந்தவன், தன் இரு கைகளையும் அவளை நோக்கி நீட்டியபடி அவளை தன்னிடம் வரச் சொல்லி கெஞ்சினான்.
“இல்ல நான் வர மாட்டேன்…
என்னை இங்க இருந்து போக விடு.
நான் சியா இல்ல. அவங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது.
உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இவங்க கிட்ட என்ன விட சொல்லு..
நான் இங்க இருந்து போகணும்.” என்று அவள் சொல்ல,
அர்ஜுனின் கண்களில் இருந்து தொடர்ந்து கண்ணீர் வர, தேன் மொழியை பார்த்து எமோஷனல் ஆகி மூச்சுவிட சிரமப்பட தொடங்கினான்.
அதனால் உடனே சுதாரித்துக் கொண்ட ஆகாஷ்,
“நீங்க இவங்கள இங்க இருந்து கூட்டிட்டு போங்க.
முதல்ல அண்ணா நார்மல் ஆகட்டும்.
எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.” என்று சொல்லி தேன்மொழியை கிளாரா மற்றும் பிரிட்டோ உடன் வெளியே அனுப்பி வைத்தான்.
– மீண்டும் வருவாள்.. ❤️
(என்னை பிரதிலிப்பியில் ஃபாலோ செய்து சப்போர்ட் செய்யுங்கள்.)