அவள் உச்சியில் அவன் பாவக்கறையோடு பூசபட்ட அந்த இரத்த குங்குமம், அப்படியே வழிந்து அதன் ஒரு துளி அவள் நடு நெற்றிக்கு வர, அங்கே அழுத்தமாய் இதழ் பதித்து பொட்டு வைத்தவன், அப்படியே அவள் நெற்றியில் சாய்ந்து அவள் விழிகளை பார்த்து, “கன்க்ரேஜுலேஷன்ஸ் மிசஸ் ருதன்.” என்றான் மெல்லிய குரலில்.
அதில் அவள் கண்கள் இருட்டிக்கொண்டு வர, குருதி வாசனையும் நச்சு புகையும் சேர்ந்து சுவாச குழல் அடைத்து, அப்படியே மயங்கி அவன் மீது சாய்ந்தாள். அதில் அழகாய் இதழ் வளைத்து அப்படியே அவளை தூக்கி தன் கைகளில் ஏந்திக்கொண்டவன், அப்படியே அங்கிருந்து நகர, சரியாக கீழிருந்த நெருப்பு அதிகரித்து அவன் ஆடையை பிடிக்கும் நேரம் ஃபோர்சாய் வந்த தண்ணீர் அந்த நெருப்பை அணைத்தது. அது அப்படியே அவன் காலடியில் வழிந்து வந்து, அங்கிருந்த நெருப்பை பொசுக்கியபடியே அவன் முன் கரும்பாதையை உருவாக்க, அதில் தன்னவளை தூக்கிக்கொண்டு அழகாய் இறங்கி சென்றான் அந்த கருப்பு ராஜகுமாரன்.
இங்கே விக்ரமனும் அவரின் ஆட்களும்தான் மேடையில் வேகமாய் தண்ணீரை அடித்துக்கொண்டிருக்க, அங்கே பாதி எரிந்து கிடந்த அந்த ஐயரின் பிணமும் சேர்ந்து நனைந்தது.
“நம்ப ஆள கொன்னுட்டான் பாஸ்” என்று இவன் கூறி முடித்த நொடி, பளாரென்று அவனை அறைந்திருந்தார் ஆர்.கே.
அதில் அவன் கன்னத்தை அழுத்தி பிடித்து தலையை தாழ்த்த, “இத சொல்ல வெக்கமா இல்ல? அவன் சாகலன்னாலும் பரவால்ல, கல்யாணம் நிக்கணும்னு சொன்னனா இல்லையா?” என்று கத்தினார் ஆர்.கே.
அதில் தயக்கமாய் பார்வையை மட்டும் நிமிர்த்தியவன், “இல்ல பாஸ் நீங்க சொன்ன மாதிரி, ஸ்டேஜ் ஃபுல்லா சல்ஃபர கொட்டிருந்தேன். அதுவும் ப்ளான் பண்ண மாதிரிதா எரிஞ்சது. பட் அப்பையும்..” என்று தயக்கமாய் நிறுத்த, “நெருப்பு மேலயும் கல்யாணம் நிக்காம நடந்துச்சுன்னு சொல்றியா?” என்று கத்தினார் ஆர்.கே.
“ஆமா பாஸ்” என்று அவன் தலையை தாழ்த்த, பளாரென்று இன்னொரு கன்னத்திலும் அறைந்திருந்தார் ஆர்.கே. அதில் அவன் மறு கன்னத்தையும் அழுத்தி பிடித்து அமைதியாய் நிற்க, அவன் சட்டையை கொத்தாய் பிடித்து தன் பக்கம் இழுத்தவர், “எனக்கு தெரியாது. அவனோட உயிர் எனக்கு வேணும்.” என்று அழுத்தி கூறி சட்டையை விட்டார்.
அதில் அவனும் பார்வையை தாழ்த்தியபடியே சரியென்று தலையசைக்க, அவரோ அப்படியே திரும்பி அந்த மெத்தையை பார்த்தார். அங்கே அந்த மருத்துவமனை மெத்தையில் ட்ரிப்ஸ் ஏற, முகம் முழுக்க கட்டுடன் படுத்திருந்தான் அவரின் மகன் ராகுல்.
அவனின் இந்த நிலையை பார்க்க பார்க்க, அவரின் இரத்தம் வெகுவாய் கொதிக்க, கைகளை இறுக்கி மூடியவரின் கண்கள் கோவத்தில் சிவந்தது. “என் பையனோட இந்த நெலமைக்கு காரணமான, அவங்க ரெண்டு பேரையுமே சும்மா விடமாட்டேன்.” என்று பல்லை கடித்து அழுத்தி கூறினார்.
இங்கே அந்த மணமகன் அறைக்குள், அவளை பூவாய் ஏந்தி வந்தவன், அந்த மெத்தையில் மெல்ல அவளை கிடத்தினான். அத்தனை நெருக்கத்தில் அவன் முகம் அவள் முகத்தோடு உரச, அப்படியே அவள் முகத்தில் தெளித்திருந்த தன் இரத்தத்தை தன் மூக்கின் நுனியாலே அழகாய் துடைத்து சுத்தம் செய்தான். அதில் அவன் மூக்கு இரத்தம் பூசி சிவப்பாக, அதைவிட நச்சு புகையால் சிவந்திருந்த அந்த கிளியின் மூக்கில் மெல்லியதாய் முத்தமிட்டு மெல்ல கடித்தவன், அப்படியே நிமிர்ந்து அவள் மூடிய விழி பார்த்து, “நவ் யூ ஆர் கம்ப்ளீட்லி மைன் ப்ரின்சஸ்” என்றான் மெல்லிய குரலில்.
அதை படித்துக்கொண்டிருந்த அமீராவின் விழிகள் அகல விரிய, இங்கே அவன் விரல்கள் மெதுவாய் தன் ஷர்வானி பட்டன்களை கழற்றியது. அங்கே மார்பருகே பட்டன்களை மெதுவாய் கழற்றியவன், அதனுள்ளிருந்து அந்த மயில் நீல நிற துப்பட்டாவை மெல்ல வெளியில் எடுத்தான்.
அன்றிரவு இதே துப்பட்டாவை அவள் கழுத்திலிருந்து மெதுவாய் உருவியவன், இதேப்போல் தன் மார்பு பட்டன்களை கழற்றி, தன் நெஞ்சுக்குள் பத்திரமாய் வைத்து எடுத்து சென்றிருந்தான். அன்றிரவே அவன் வெளிநாடு கிளம்பியிருக்க, அவள் நினைவையும் வாசனையையும் ஒன்றாய் அவனுடனே எடுத்து சென்றிருந்தான்.
இப்போது அந்த வாசனையோடு அந்த துப்பட்டாவை தன் விரல்களுள் சுருட்டி, அவள் பன்னீர் முகத்தில் பூத்த வியர்வை மொட்டுக்களையும் அழகாய் தொட்டு அதனுள் கரைய வைத்தவன். அப்படியே அவள் இதழின் கீழ் பூத்திருந்த மொட்டுக்களையும் அழகாய் அதில் சேமித்து எடுத்துக்கொள்ள, இப்போது அந்த செவ்விதழின் குழியில் அவன் மோகம் மொத்தமும் குவிந்தது.
அதில் வழிந்து வரா தேனமுதை அவன் இதழ் அருந்த துடிக்க, மெதுவாய் அதை அடையும் நேரம் இடையில் விழுந்தது அவளின் துப்பட்டா. அந்த திரையோடே அவள் இதழில் அழுத்தி பதிந்தது அவன் இதழ்கள்.
இதேப்போல் தண்ணீருக்குள் திரையோடு இணைந்த அதே இதழின் பிம்பம் கண்முன் வர சட்டென்று விழித்து எழுந்து அமர்ந்தாள் அமீரா.
“ரிலேக்ஸ்” என்று அவளை படுக்க வைத்தார் பெண் மருத்துவர். அதில் பதற்றமாய் சுற்றி பார்த்தபடியே தலையணையில் சாய்ந்தவளின் இதயம் அத்தனை பலமாய் துடிக்க, “ஒன்னும் இல்ல. யூ ஆர் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்.” என்றார் மருத்துவர்.
அப்போது அவள் தோளில் ஒரு கரம் பதிய, திடுக்கிட்டு திரும்பினாள். விமலாதான் சிறு பதற்றமாய் அவள் கன்னம் பற்றி, “காயம் எதுவும் இல்லல்ல ம்மா?” என்று கேட்க, அவளோ அவசரமாய் சுற்றி அவனைதான் தேடினாள்.
“அவன் முக்கியமான வேலையா வெளிய போயிருக்காம்மா. நீ ஸ்ட்ரெயின் பண்ணாத.” என்றார் விமலா.
அதில் திரும்பி குழப்பமாய் அவரை பார்த்தவள், அடுத்து அவ்விடத்தை சுற்றி பார்க்க, தன்னுடைய மணப்பெண் அறை போலவே தெரியவில்லை. வித்தியாசமாய் இருக்க, மருத்துவரும் விமலாவும் மட்டுமே இவ்வறையில் இருந்தனர்.
“காயம் எதுவும் இருக்கா மேடம்?” என்று மருத்துவர் கேட்க, அவளோ மெதுவாய் இல்லை என்று தலையசைத்தாள்.
அதில் ஸ்டெத்தஸ்கோப்பை கழற்றியவர், “அப்ப ஒன்னும் பிரச்சன இல்ல, பாத்துக்கோங்க. நா கெளம்புறேன்.” என்றார் மருத்துவர்.
அதற்கு விமலாவும் நிம்மதி புன்னகையுடன், “தேங்க் யூ சோ மச் டாக்டர்.” என்று கூற, அவரும் புன்னகைத்தபடி தன் பெட்டியை மூடி எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
அப்போதும் அமீராவின் பார்வை அந்த அறையையே சுற்றி பார்க்க, அவள் கரத்தை பிடித்து அவளருகே அமர்ந்தார் விமலா. அதில் அவள் நிமிர்ந்து அவரை பார்க்க, அவரோ பெரும் வருந்தலாய் அவள் கரத்தை அழுத்தி பிடித்து, “ரொம்ப சாரிம்மா. இன்னிக்கு இப்பிடியெல்லா நடக்கும்னு நாங்க எதிர்பாக்கல.” என்றார்.
அதில் அவளோ வேகமாய் எழ முயற்சிக்க, “இல்ல இல்ல படு.” என்று அவளை படுக்க வைத்தவர், அப்படியே ஆழ்ந்த வருந்தலுக்கு சென்று, “எந்த ஒரு பொண்ணுக்கும் கல்யாணம் இங்குறது வாழ்க்கையோட ரொம்பவே முக்கியமான பகுதி. ஆனா விதி.” என்று பெருமூச்சுவிட, அவளுக்கோ அதையெல்லாம் தாண்டி வேறு ஒரு கேள்விதான் தொண்டையில் நின்றது.
ஆனால் எப்படி கேட்க என்று புரியாமல் அவள் தயக்கமாய் விழுங்கிக்கொண்டிருக்க, “என்ன ஆச்சும்மா? எதாவது வேணுமா?” என்று கேட்டார் விமலா.
“அ..அது அப்பா எங்..க?” என்று அத்தனை தயக்கமாய் வார்த்தையை கோர்த்தாள்.
“அவரு கீழதா இருக்காரு. வர சொல்லட்டுமா..” என்றபடி எழ போக, அவர் கரத்தை பிடித்தாள் அமீரா. அதில் அவர் மீண்டும் அமர்ந்து அவளை பார்க்க, “உங்ககிட்ட ஒன்னு.. கேக்கலாமா?” என்று அத்தனை தயக்கமாய் கேட்டாள்.
அதில் அவரும் புரியாது, “ம்ம்” என்று தலையசைக்க, அதில் அவளும் அத்தனை தயக்கத்தையும் விழுங்கியபடி, “இப்ப எனக்கு.. தாலி கட்டுனது..” என்று அவள் தயங்க, “என் மூத்த பையன் ருதன்.” என்றார் புரியாமல்.
அதில் சட்டென்று அதிர்ந்து விழி விரித்தவள், “அ..அப்போ அன்னிக்கு நீ..நீங்க ஃபோட்டோல காட்டுனது?” என்று தயங்கி கேட்க, “என் சின்ன பையன் விராஜ்.” என்றார் விமலா.
“அ..அப்றம் எப்..பிடி..” என்று அவள் தயங்க, சட்டென்று அதிர்வாய் புருவம் விரித்தார் விமலா. அவளோ தயக்கமாய் அப்படியே நிறுத்த, “அப்பிடின்னா உன் அப்பா உங்கிட்ட எதுவுமே சொல்லலையா?” என்று புரியா அதிர்வாய் கேட்டார் விமலா.
அதில் குழம்பிய அவள் விழியில் நீர் துளிர்க்க, இல்லை என்று மெல்ல தலையசைத்தாள். அதில் இவருக்கோ பெரும் அதிர்ச்சியாய் இருக்க, “அவகிட்ட சம்மதம் வாங்கணும்னு எந்த அவசியமும் இல்ல. எல்லா என் முடிவுதா.” என்ற அவரின் அழுத்தமான வார்த்தைகள் இப்போது கண்முன் வர புரியாது முகத்தை சுழித்தவர், “அதுக்காக கட்டிக்க போறவன் பேருக்கூடவா சொல்லாம இருப்பாரு?” என்று அவளை பார்க்க, அவளோ பொங்கி வந்த கண்ணீரை உள்ளிழுத்து பார்வையை தாழ்த்தி மறைத்தாள். எப்படி கூறுவாள் தன் தந்தை தன்னை அலட்சியமாய் எண்ணி இதை மறைத்திருந்தால் கூட அவள் மனம் விரக்தியோடு அமைதியாகியிருக்கும், ஆனால் அசிங்கத்தை சுமத்தி சந்தேகத்தோடு அல்லவா அனைத்தையும் மறைத்திருக்கிறார். அவளால் கதறி அழக்கூட முடியவில்லை இப்போது.
விமலாவோ நொந்த பெருமூச்சாய் அவளை பார்த்து, “உண்ம என்னன்னா, எங்க மூத்த பையனுக்கு கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்ல.” என்று கூற, அவளோ சட்டென்று நிமிர்ந்து வியப்பாய் விழி விரிக்க, “எத்தனையோ தெடவ கல்யாணத்த பத்தி பேசி பாத்தோம். பட் இப்பொதைக்கு கரியர்தா முக்கியம்னு ஸ்டிட்டா சொல்லிட்டான். அதா உன் அப்பா அவசரமா சம்மந்தம் பேசவும், நாங்க விராஜ்க்கு உன்ன பொண்ணு கேட்டு வந்தோம்.” என்றார்.
அதில் இவளுக்கோ குழப்ப முடிச்சுகள் அதிகரிக்க, “பட் உன் அப்பா எங்க மூத்த பையன் ருதன்தா வேணும்னு முடிவா சொல்லிட்டாரு. அதா கடைசியா ஒரு தெடவ அவன்கிட்ட பேசி பாக்கலாம்னு முடிவு பண்ணோம்.” என்று நடந்தவற்றை கூற ஆரம்பித்தார்.
அன்று மாலை அலுவலகம் முடிந்து ருதன் வீட்டிற்கு வரும் நேரம் ஹாலில் பதற்றமாய் நின்றிருந்த விமலா, “என்னங்க என்ன மட்டும் பேச சொல்றீங்க?” என்று கூற, “மொதல்ல நீ பக்குவமா பேசி பாரு. ஒத்து வரலன்னா நா போய் பேசுறேன்.” என்றார் விக்ரமன்.
அதில் தயக்கமாய் யோசித்த அவரும், “ம்ம் சரி. பட் ஒத்துப்பான்னு எனக்கு தோனல.” என்று கூறிக்கொண்டிருக்கும்போதே வீட்டிற்குள் நுழைந்தான் ருதன்.
அதில் சட்டென்று விமலாவின் பதற்றம் அதிகரிக்க, “போய் பேசிட்டு சொல்லு. நா ரூம்ல இருக்கேன்.” என்று கூறிவிட்டு அவசரமாய் நகர்ந்தார் விக்ரமன்.
இங்கே ருதனோ வழக்கம்போல் வந்ததும் வேகமாய் படிகள் ஏற போக, “ருதன் ஒரு நிமிஷம் ப்பா” என்றபடி அவசரமாய் வந்தார் விமலா.
அதில் அவன் நின்று திரும்பி, கேள்வியாய் புருவத்தை சுழிக்க, அவரோ தயக்கமாய் கையில் ஒரு புகைப்படத்தோடு வந்து நின்றார். அதில் புரிந்து முகத்தை இறுக்கி முன்னால் திரும்பியவன், “தேவல்லாம என் டைம வேஸ்ட் பண்ணாதீங்க.” என்றபடி வேகமாய் நகர போக, “இரு இரு. ரெண்டே நிமிஷம்.” என்றார் விமலா அவசரமாக.
அதில் அவனும் கடுப்பாய் நின்று அவரை பார்க்க, “ப்ளீஸ் ப்பா. இந்த ஒரு தெடவ என் பேச்ச கேளு. இந்த பொண்..” என்று கூற வர, சட்டென்று கரத்தை நீட்டி தடுத்தான் ருதன்.
அதில் அவர் திடுக்கிட்டு அப்படியே நிறுத்த, அவனோ அத்தனை அழுத்தமாய் அவரை பார்த்து, “நா ஏற்கனவே பல தெடவ சொல்லிட்டேன். இந்த பேச்ச எடுத்துட்டு எங்கிட்ட வராதீங்கன்னு. இந்த குப்பையெல்லா உங்க செல்ல பையனோட நிறுத்திக்கோங்க. எங்கிட்ட வேண்டா.” என்று அழுத்தி கூறிவிட்டு நகர்ந்தான்.
அடுத்த படியிலேயே நின்றுவிட்டவன், வேகமாய் திரும்பி கீழே பார்க்க, அவன் கரத்தை அழுத்தி பிடித்திருந்தார் விமலா. அதில் அவன் கோபமாய் நிமிர்ந்து அவரை பார்க்க, அவர் கண்கள் கலங்கியிருந்தது.
அதில் அவன் கடுப்பாய் பார்வையை திருப்பிக்கொள்ள, இவரோ விழியில் வலியையும் நீரையும் ஒன்றாய் சுமந்து கமறிய குரலில், “அவனோட நிறுத்திகோங்கன்னா என்ன அர்த்தம்? நீயும் என் புள்ளதான? ஒரு அம்மாக்கு இந்த உரிமக்கூட இல்லையா?” என்று கேட்க, அவனோ சட்டென்று தன் கரத்தை உருவிக்கொண்டு, “தேவல்லாம இங்க நின்னு ட்ராமா பண்ணிட்டிருக்காதீங்க.” என்று அவர் பக்கம் திரும்பாமலே கூறினான்.
அதில் சிறு விரக்தியாய் தன் கண்களை துடைத்துக்கொண்டவர், “சரி இனி உன்ன கம்பள் பண்ண மாட்டேன். ஆனா கடைசியா ஒரு தெடவ இந்த பொண்ணு ஃபோட்டோ மட்டும் பாரு.” என்று நீட்ட, “ச்ச்” என்று அத்தனை எரிச்சலாய் நெற்றியை தேய்த்தான்.
“ப்ளீஸ் ப்பா எனக்காக. இந்த பொண்ண பாத்துட்டு, புடிக்கலங்குறதுக்கு ஒரே ஒரு காரணம் சொல்லு, நா ஏத்துக்குறேன். அதுக்கு அப்றம் உன்ன டிஸ்டர்ப் பண்ணல.” என்றார் விமலா.
அதில் அவனும் கடுப்பாய் திரும்பி அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு நிமிர்ந்து அவரை பார்த்து, “சுத்தமா புடிக்கல. இதுவே பெரிய காரணம்.” என்று கூறிவிட்டு அவசரமாய் படிகள் ஏறினான்.
அதில் சட்டென்று இவர் முகம் வாடிவிட, சென்ற வேகத்தில் வேகமாய் பின்னால் இறங்கியவன், அதிர்வாய் அந்த புகைப்படத்தை உற்று பார்த்தான். அதில் நிமிர்ந்த விமலாவும் புரியாது அவனை பார்க்க, அவனோ வியப்பாய் புருவங்களை விரித்து, “இது..” என்று கேட்க வர, “உன் அப்பாவோட ஃப்ரண்ட் லிங்கா இருக்காருல்ல? அவரோட பொண்ணு. ரொம்ப அமைதியான..” என்று கூற வர, “எப்போ கல்யாணம்?” என்று கேட்டான் ருதன்.
அதில் அவர் ஒருநொடி திடுக்கிட்டு அதிர்ந்து, “என்ன?” என்று கேட்க, அவனோ நிமிர்ந்து அத்தனை அழுத்தமாய் அவரை பார்த்தான். அதன் அர்த்தம் முதல் முறையே தெளிவாகதான் கேட்டேன் என்பது.
அதை கேட்ட அமீராவிற்குமே அத்தனை வியப்பாய் இருக்க, அவள் தோளில் கரத்தை பதித்தார் விமலா. அதில் அவள் திடுக்கிட்டு அவரை பார்க்க, “மணமேடையில நடந்தத வெச்சு அவன தப்பா நெனச்சுராதம்மா. அவனும் உன் அப்பா மாதிரியே ரொம்ப பிடிவாதக்காரன்.” என்று கூற, அந்த வார்த்தையில் இவள் அஸ்த்திபாரமே அதிர்ந்தது. அப்பா மாதிரியா என்று.
“நெனச்சத அடஞ்சே பழக்கப்பட்டவன். அதனாலதா இப்பிடி நடந்துகிட்டான்.” என்று அவர் கூற, “இந்த கல்யாணம் நடந்தாகணும்.” என்ற அவனின் அழுத்தமான வார்த்தைகளும் அதன் பிறகு நடந்தவைகளும் கண்முன் வர, அவையெல்லாம் சாதாரணமாகவே தோன்றவில்லை. இப்போது நினைத்தாலும் உடல் நடுங்கியது அவளுக்கு.
“ருதன் உண்மையிலயே ரொம்ப நல்ல பையன்மா. அதிகமா பேசமாட்டான் அவ்ளோதா. மத்தபடி ஒரு விஷயம் புடிச்சிருச்சுன்னா, அதுக்காக உயிரையே குடுப்பான்.” என்று அவர் கூற, இவளுக்கோ அன்றிரவு அவன் தன் காரை தொட்டதற்காக அத்தனை உயிரை உருகுழைத்ததுதான் கண்முன் வந்து நின்றது.
அப்படியே இன்று அக்கினியை சுற்றி, “இந்த நிமிஷத்துல இருந்து நீ எனக்கு சொந்தம். உன்னோட எல்லாமே எனக்கு சொந்தம்.” என்ற அவனின் முதல் கட்டளை கண்முன் வர, அடுத்தடுத்து அனைத்து கட்டளைகளும் கண்முன் வந்து கடைசியாய், “அந்த மரணத்தாலக்கூட உன்ன எங்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. நா அந்த மரணத்தவிட மோசமானவன்.” என்பது வரை வேகமாய் கண்முன் வந்து குவிய, அவள் உடலெல்லாம் வியர்த்து, நடுங்கி ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது. முதலையிடம் தப்பி புலியிடம் வந்து மாட்டியுள்ளோம் என்று.
– நொடிகள் தொடரும்…