“கேன் யூ டேட் வித் மீ?” என்று அவள் தயக்கமாய் கேட்க, “பார்டன்?” என்று அவன் புருவத்தை நெளித்தான்.
“ஜஸ்ட் ஃபார் ஒன் டே?” என்று எதிர்பார்பாய் விழியில் கெஞ்சினாள்.
அதில் அந்த பேனாவை கையிலெடுத்தவன், “ரொம்ப அதிகம்.” என்று கூற, அதில் திடுக்கிட்டு வியந்து, “ஒ..ஒன் நைட்?” என்று வேகமாய் கேட்க, “தட்ஸ் பெட்டர்.” என்றபடி சைன் செய்து முடித்தான் ருதன்.
அதில் ஒரு நொடி வியந்து விழித்தவள், “சீரியஸ்லி?” என்று அத்தனை மகிழ்வாய் கேட்க, அவனோ அழுத்தமாய் அவளை முறைத்தான். அதன் அர்த்தம் இன்னொரு முறை சொல்ல வைக்காதே.
அதுவே அவளுக்கு ஆயிரம் மடங்கு மகிழ்வை கொடுக்க வேகமாய் எழுந்து, “தேங்க் யூ சோ மச்” என்று அவனை கட்டியணைக்க போக, சட்டென்று கரம் நீட்டி தடுத்தான்.
அதில் அவள் திடுக்கிட்டு அப்படியே நிறுத்த, “இந்த ப்ராஜக்ட் முடிஞ்சதுக்கு அப்றம்.” என்று அழுத்தி கூறினான்.
அதில் மொத்த உணர்வையும் உள்ளுக்குள் அடக்கி அப்படியே அமர்ந்தவள், “ஷ்யோர்.” என்றாள் மென்மையாக. ஏனோ அவன் சம்மதித்ததே அவளுக்கு அத்தனை மகிழ்வை கொடுத்திருக்க, உள்ளுக்குள் துள்ளி குதித்தாள் நேகா.
“நீங்க கெளம்பலாம்.” என்று கூறிவிட்டு அவன் லேப்டாப்புக்குள் மூழ்க, அவளும் மெதுவாய் எழுந்து நின்று, “பாய் மிஸ்டர் ருதன்.” என்று ஒருவித மயக்கமாய் கூறியபடியே பின்னால் நகர, அவனோ நிமிரக்கூட இல்லை.
அதுவுமே அவன் மீதான இவள் மயக்கத்தை அதிகரிக்க, எப்படியும் அந்த ஒரு இரவில் உன்னை முழுதாய் எனதாக்கிவிட்டால் பிறவி பலனை அடைந்துவிடுவேன் என்பதுப்போல் அப்படியே திரும்ப, கேபின் கதவை திறந்துவிட்டான் யோகி.
அதில் அவனையும் பார்த்து புன்னகைத்து, “தேங்க் யூ” என்று கூறிவிட்டு அவள் வெளியே செல்ல, தலையெழுத்து என்று முகத்தை சுழித்தான் யோகி.
“என்ன ஆச்சு?” என்று அமீரா கேட்க, அதில் சட்டென்று நிகழ் உலகிற்கு வந்தவன், “ஆ.ங் என்ன மேடம்?” என்றான் யோகி.
“இல்ல ரொம்ப நேரமா அமைதியா இருக்கீங்க?” என்று அவள் கேட்க, அதில்தான் சற்று மூச்சுவிட்டுக்கொண்டவன், நல்லவேளை இவளிடம் உளறவில்லை என்று நிம்மதியடைந்து, “ஒன்னும் இல்ல மேடம். நீங்க படிங்க. நா வெளிய இருக்கேன்.” என்றான்.
அதில் அவளும் சரியென்று தலையசைக்க, அவனும் தன்மையாய் தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அதில் அப்படியே அமர்ந்து அந்த டைரியை கையில் எடுத்தவள், விட்ட பக்கத்தை எடுத்து படிக்க ஆரம்பிக்க, அப்படியே கீழே அவளின் காலில் கசிந்த அந்த சுண்டு விரல் இரத்தம் காய்ந்துக்கொண்டிருந்தது.
அதேப்போல் தன் காலை அழுத்தி பிடித்து, “ஆ!” என்று அவள் துடிக்க, “ஒன்னும் இல்லம்மா கைய எடுங்க.” என்றார் பெண் மருத்துவர்.
“தொட்டா வலிக்குது டாக்டர்.” என்று இறுகிய குரலில் கூறினாள் அமீரா.
“எப்பிடி அடிப்பட்டுச்சு?” என்று மருத்துவர் கேட்க, அவளுக்கோ நேற்றிரவு அவர்கள் துரத்தியது, இவள் தடுக்கிவிட்டு விழுந்தது எல்லாம் நொடியில் கண்முன் வர, தயக்கமாய் நிமிர்ந்து தன் தந்தையை பார்த்தாள்.
அவருமே கை கட்டி நின்றபடி அவளையே முறைக்க, அதில் பதற்றமாய் திரும்பி மருத்துவரை பார்த்தவள், “தடுக்கி விழுந்துட்டேன் டாக்டர்.” என்றாள்.
அதில் அவரும் அந்த பாதத்தை பரிசோதித்தபடி, “எவ்வளவு நேரமா வலி இருக்கு?” என்று கேட்க, “நேத்து நைட்டு இருந்தது. இப்ப திரும்பவும் வலிக்குது.” என்றாள் இறுகிய குரலில்.
அதில் கரத்தை விலக்கிவிட்டு, “ஒன்னும் இல்ல சின்ன சுளுக்குதா. நா குடுக்குற ஆயின்மன்ட்ட போடுங்க செரியாகிரும்.” என்றார் மருத்துவர்.
“இன்னும் அஞ்சு நாள்ல அவளுக்கு கல்யாணம். அதுக்குள்ள சரியாகிரும்தான?” என்று இறுக்கமாய் கேட்டார் லிங்கா.
அதில் அவரை நிமிர்ந்து பாராமலே அமீராவின் கண்ணில் நீர் துளிர்க்க, “நாளைக்கே செரியாயிரும் டோன்ட் வரி. நா ஆயின்மன்ட் எழுதி குடுக்குறேன்.” என்றார் மருத்துவர்.
அதில் அவரும் சரியென்று அமைதியாக, மருத்துவரும் தேவையானதை எழுதி கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அவரை தொடர்ந்து லிங்காவும் வெளியில் சென்றுவிட, அமீராவோ வலியுடன் மெதுவாய் தன் பாதத்தை தன் பக்கம் இழுத்து அதை தொட்டு பார்க்க, சட்டென்று அவள் முன் வந்து நின்றார் அவளின் தந்தை.
அதில் அவள் திடுக்கிட்டு பயந்து நிமிர, அவரோ கேள்வியாய் குனிந்து அவள் பாதத்தை பிடிக்க, “ஸ்ஸ்” என்று இறுக்கி விழி மூடினாள்.
அதில் கரத்தை விலக்கியவர், “இந்த கால் செரியாகி ஒன்னும் ஆக போறதில்ல. உனக்கு தேவையானது உன் ரூமுக்கே வந்திரும். மண்டபத்துக்கு போற வரைக்கும் ரெஸ்ட் எடு.” என்றபடி எழுந்தார்.
அதில் அவளும் சரியென்று மெதுவாய் தலையசைக்க, “அப்றம்” என்றபடி அவளை பார்த்தவர், “மாப்ளைய பாக்கவோ பேசவோ முயற்சி பண்ணி, இந்த கல்யாணத்த கெடுக்குற ஐடியா எதாவது இருந்தா இங்கயே பொதச்சிரு.” என்றார் அழுத்தமாக.
அதில் அவள் நொந்த கண்ணீருடன் நிமிர்ந்து அவரை பார்க்க, அவரோ தன் பார்வையை அழுத்தி, “நீ நெனச்சாலும் அது முடியாது. மாப்ள வேல விஷயமா அப்ராட் போறாரு. கல்யாணத்தன்னிக்குதா இண்டியாவே வருவாரு.” என்று கூற, இவளுக்கோ பகீரென்றானது.
“மண்டபத்துக்கு போனதுக்கப்றமும் இதே மாதிரிதா ரூம்ல கெடக்கணும். எங்கையாவது நடமாடுறத பாத்தேன்..” என்று பல்லை கடித்தவர், “உறிச்சிருவேன்.” என்று அழுத்தி கூறிவிட்டே நகர்ந்தார்.
அவர் சென்றவுடனேயே அவள் கண்ணீர் பொழ பொழவென்று வெளியில் வந்திருக்க, அப்படியே கட்டில் சாய்வில் சாய்ந்து சத்தமில்லாமல் கதறி அழுதாள். என்ன செய்ய அவளால் முடிந்தது அழுவது மட்டும்தானே.
காதலித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்று தன் நிலைக்கு மீறி ஆசைப்பட்டது தவறுதான். ஒருவனை பார்த்து பிடித்து, புரிந்து, காதலித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தாள், அது நடக்காது என்றும் தெரியும். எனவே தன் தந்தை பார்த்த மாப்பிளையையாவது பார்த்து, பிடித்து, புரிந்து, காதலிக்க முயலலாம் என்றுதான் இதுவரை மனதை தேற்றியிருந்தாள்.
ஆனால் ஏன் அவள் விதி மட்டும் இவ்வளவு கொடியதோ தெரியவில்லை. அந்த ஒரு வாய்ப்பும் இப்போது இல்லாமல் போக, ஒருவனின் புகைப்படத்தை தவிர வேறு எதுவுமே தெரியாமல் தன் மீதி வாழ்க்கை மொத்தத்தையும் எப்படி அவனிடம் ஒப்படைப்பது? எதை நம்பி அவனுடன் உடல் உள்ளம் அனைத்தையும் பகிர்வது? என்றெல்லாம் நினைக்க நினைக்க அழுகைதான் வந்தது அவளுக்கு.
இப்படி அழுகையிலேயே அந்த ஐந்து நாட்கள் கடந்திருக்க, இன்று இரவு மண்டபத்திலும் அதேப்போல் ஒரு சிறை. அதான் மணப்பெண் அறை. அதில்தான் அடைந்து கிடந்தாள் அமீரா.
விடிந்தால் திருமணம். ஆனால் அதை பற்றிய எந்த ஒரு உணர்வும் முகத்தில் இல்லாமல், அழுகையெல்லாம் வற்றிப்போய் உயிறற்ற ஜடம்போல் அமர்ந்திருந்தாள். அவள் கரங்களில் மெஹந்தி போடப்பட்டுக் கொண்டிருக்க, அவள் கை முழுக்க அத்தனை அழகாய் போட்டுவிட்டுக் கொண்டிருந்தாள் அவளின் தோழி. ஆனால் அதையெல்லாம் இரசிக்க என்ன உணரும் நிலையில்கூட அவள் இல்லை. அவள் மனம் முழுக்க அடுத்து வாழ போகும் சிறை எவ்வளவு கொடியதாக இருக்குமோ என்ற பயத்திலேயே பலமாய் அடித்துக்கொண்டது.
“மீரா!” என்ற குரலில் திடுக்கிட்டு அவள் தெளிய, “முடிஞ்சது பாரு.” என்றாள் புன்னகையுடன்.
அதற்கு அவளும் குனிந்து பார்த்துவிட்டு, “ம்ம் தேங்க்ஸ்.” என்று உயிரே இல்லாமல் கூற, “என்ன தேங்க்ஸ்? மாப்ளையோட பேர இதுல ஒளிச்சு வெச்சிருக்கேன். நீதா கண்டுபுடிக்கணும்.” என்றாள் அவள்.
அதில் புருவத்தை சுழித்தவள், புரியாது தன் கரத்தை உயர்த்தி பார்க்க, அத்தனை நுணுக்கங்களில் அவன் பெயர் எதுவென்று சுத்தமாய் தெரியவில்லை.
அதில் அவள் புரியாது தேட முயல, “இப்பிடி நீயே தெனறுனா எப்பிடி? நீ கண்டுபுடிச்சாதான மாப்பிளைகிட்ட கேப்ப?” என்று அவள் கூற, அதில் இவளின் இதழில் ஒரு விரக்தி புன்னகை.
அவள்தான் அப்படியொருவனை கண்ணில்கூட இன்னும் பார்க்கவில்லையே. நாளை தன்னை முழுதாய் சொந்தமாக்க போகிறவன் இன்று எங்கிருக்கிறான் என்று அவளுக்கே தெரியவில்லை.
அவளுக்கு சொந்தமானவனோ இங்கே ஒரு இருட்டான அறையில் தன் கருப்பு கோட்டை மெதுவாய் கழற்றி வீசிவிட்டு முன்னேற, அவன் முன் உடலில் ஒட்டு துணிக்கூட இல்லாது மெத்தையில் கிடந்தாள் நேகா.
– நொடிகள் தொடரும்…