Chpater 14

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
“மச்சான் சாப்பிட நிப்பாட்டவ டா?” என்று சரவணன் கேட்க, “இல்ல டா வேணா… அவள பாரு மயங்கிட்டாளா இல்ல தூங்கிட்டாளான்னு கூட தெரியல… நீ ஊருக்கு போயிடு… அங்க கூட ஏதாவது சாப்பிட்டுக்கலாம்” என்று விக்ரம் கூறவும், சரி என்று சரவணன் கூறினான்.

“என்ன இருக்கும் எதனால இவ எப்படி ஆயிட்டா?” என்று விக்ரம் கேட்க, “எனக்கு மட்டும் என்ன டா தெரியும், சனா முழிச்சா தான் கேக்கணும்…. ஆனா, எனக்கு என்னன்னா அவளுக்கே தெரியுமா தெரியாதான்னு தெரியல” என்று சரவணன் கூறினான்.

சனந்தா லேசாக அசையாவும், “ப்ச்… சரி சரி எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்… இப்ப பேசாத அவ பாரு டிஸ்டர்ப் ஆகுறா” என்று விக்ரம் கூற, சரவணன் அவனை கண்ணாடி வழியாக பார்த்து புன்னகைத்தான்.

விக்ரம் தோளில் ஒரு குழந்தை போல் சாய்ந்து கொண்டு அவனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு உறங்கி கொண்டு இருந்தாள் சனந்தா. உறக்கத்திலும் அவளின் நடுக்கம் குறையவே இல்லை அதை விக்ரமால் நன்றாக உணர முடிந்தது.

என்ன தான் அவள் மீது கோபத்தை காட்டினாலும் அவளின் ஸ்பரிசம் அவனை ஆட்கொள்ள தான் செய்தது. அவனையும் மீறி அவளை ரசித்துக் கொண்டு இருந்தான் விக்ரம்.

“என் முகத்துல கோபம், அழுக, சிரிப்பு இது எல்லாத்தையும் பார்க்க முடியுது… ஆனா, இவளோட முகத்துல எதுவுமே என்னால படிக்கவே முடியலையே…. நான் கோவப்படுறேன் அதுக்கு கூட ஒரு உணர்வையும் அவ முகத்துல காட்ட மாட்டேங்குறா…. சரவணன் அவ்ளோ நல்லா பேசுறான் அதுக்கும் கொஞ்சமா தான் சிரிக்கிறா…. காலைல ரம்யாவை பார்க்கும் போது தான் கொஞ்சம் நல்ல சிரிச்சா… ஒரு வேள ரொம்ப நாள் பழக்கம் இருந்தா தான் இவ க்ளோஸா இருப்பா போல” என்று சனந்தாவை ஆராய்ந்து கொண்டே வந்தான் விக்ரம்.

“டேய் போதும் டா ஊர் வர போது விக்கி….. எவ்வளவு நேரம் அவளையே பார்த்துட்டு வருவ” என்று சரவணன் கேலியாக கூற, விக்ரம் சரவணனை முறைத்து, “உனக்கென்ன பா நீ இதெல்லாம் பேசுவ தான்… ஆனா, என்னால தான் இவ மேல இருக்கிற ஆசையும் சொல்ல முடியாம கோபத்தையும் கட்டுப்படுத்த முடியாம காட்டிகிட்டு ரொம்ப அவஸ்தயா இருக்கு” என்று விக்ரம் ஆதங்கத்துடன் கூறினான்.

“சரி சரி ஆஃபீஸ் வந்துருச்சு அவளை எழுப்ப பாரு” என்று சரவணன் கூறி வண்டியை பார்க் செய்தான். விக்ரம் மெதுவாக சனந்தாவின் கை மீது தட்ட அவள் எந்த அசைவையும் காட்டாமல் இருக்க சனந்தாவின் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றான்.

வண்டியின் சத்தம் கேட்கவும் அபிலாஷ் மற்றும் கவிதா வெளியே வந்தனர். “என்னடா ஆச்சு… இன்னிக்கும் மயக்கம் போட்டு விழுந்துட்டாளா?” என்று அபிலாஷ் கேட்க, “தெரியல டா என்ன நடந்ததுன்னு அவன் முழிச்சா தான் கேக்கணும்” என்று சரவணன் கூறினான்.

விக்ரம் தோள் மீது படுத்து கொண்டு விக்ரமின் கையை பிடித்து கொண்டிருக்கும் சனந்தாவைப் பார்க்க கவிதாவுக்கு பொறாமை எட்டி பார்த்தது. “இருங்க அண்ணா நான் எழுப்புறேன்” என்று கவிதா போக, “இல்ல வேண்டாம் மா நான் பார்த்துக்குறேன்” என்று சரவணன் கூறி சனந்தாவின் கன்னத்தில் மெதுவாக தட்டவும் சனந்தா மெதுவாக கண்விழித்து பார்த்தாள்.

“ஊருக்கு வந்துட்டோம்…. ஒன்னும் இல்ல சரியா” என்று சரவணன் கூற, மெதுவாக விக்ரமின் தோளிலிருந்து தலையை அசைத்தாள் சனந்தா. எதையோ உணர்ந்தவள் போல் மெதுவாக அவள் பக்கத்தில் திரும்பி பார்க்க விக்ரம் அமர்ந்திருந்தான். ஆயிரம் தான் அவன் கோபப்பட்டாலும் அவளுக்கு ஏனோ அவன் மீது வெறுப்போ கோபமோ இல்லவே இல்லை… மேலும் அவனை இவ்வளவு நெருக்கத்தில் பார்க்கவும் சனந்தாவுக்கு முதலில் ஈர்த்தது அவனுடைய கண்கள் தான்.

சிறிது நேரம் அவனுடைய கண்களையே சனந்தா பார்த்துக் கொண்டிருக்க, அதை கலைக்கும் விதமாக, “லக்கேஜ் எடுத்து வெக்குறோம் நீ மெதுவா இறங்கு” என்று சரவணன் கூறவும் சனந்தா அவளை மீட்டுக் கொண்டு இறங்க முயன்றாள்.

சனந்தா மெதுவாக எழுந்து இறங்க முயலவும் அவளது கை விக்ரமின் கையில் இருப்பதை உணர்ந்து மெதுவாக விடுவிக்க போக, விக்ரம் ஏனோ அவளது கையை ஒரு முறை இறுக்கி பிடித்து அவளைப் பார்க்க அவளோ சட்டென்று விக்ரமை அதிர்ச்சியாக பார்த்தாள்.

விக்ரம் அவளை முதல் முதலில் ஊட்டியில் பார்த்தது பின்பு பார்டியில் பார்த்தது என அனைத்து நிகழ்வுகளும் அலை மோதியது…. அதனால் ஒரு நொடி அவளின் கையை இறுக்கி பிடித்து பின்பு மெதுவாக கையை விட்டு, “பார்த்து இறங்கு” என்று கூறினான்.

சனந்தா எதுவும் பேசாமல் தலையை மட்டும் அசைத்தாள். இவை அனைத்தும் என்ன தான் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாலும் கவிதா பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

சனந்தாவிற்கு மார்க்கெட்டில் நடந்ததும் இப்பொழுது விக்ரம் செய்வது என அனைத்தையும் யோசித்துக் கொண்டு மெதுவாக ஆஃபீஸ்க்குள் செல்ல, “சனா, இப்ப ஓகேவா இல்ல டாக்டர் கிட்ட போலாமா?” என்று சரவணன் கேட்க, “நான் ஓகே தான்…. ஆனா,... எனக்கு... எனக்கு பசிக்குது… சாப்பிடணும்” என்று சிறு பிள்ளை போல் சனந்தா கூறினாள்.

சரவணன் சனந்தா கூறியதில் புன்னகைத்து, “சைடுல தொட்டி இருக்கும் போய் கை கழுவிட்டு வா கவிதா சாப்பாடு கொண்டு வந்து இருக்கா சாப்பிட்டு வீட்டுக்கு போலாம்” என்று கூறவும் சரி என்று சனந்தா கை கால் முகத்தை கழுவ சென்றாள்.

சனந்தா முதலில் தொட்டியில் இருந்து தண்ணியை எடுத்து அவள் கையை கழுவுவதற்கு முன் விக்ரம் அவளது கையை பிடித்திருந்தது நினைத்து அவள் கையை பார்த்துக் கொண்டு இருக்க, ம்க்கும்!!! என்று விக்ரம் அவனது தொண்டையை செருமிக் கொள்ள, “ப்ச்…. சனா என்ன பண்ணிட்டு இருக்க…. நீ அவரோட கையை புடிச்சிட்டு இருந்ததை ரசிச்சது போதும்… இப்ப பாரு பின்னால அவரே வேற வந்து நிற்குறாரு…. இந்த எம்பரெஸ்மெண்ட் தேவை தான் உனக்கு” என்று சனந்தா அவளையே கடிந்து கொண்டு கை கால் முகத்தை கழுவி விக்ரமை பாராமல் உள்ளே சென்றாள்.

விக்ரம் சனந்தாவின் செய்கையை கண்டு புன்னகைத்து அவனும் கைகளை கழுவிக் கொண்டு உள்ளே சென்றான். கவிதா கொண்டு வந்திருந்த உணவை அனைவருக்கும் பரிமாற அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.

“சரி இப்ப எதுவும் பேச வேணாம் கவிதா இருக்கா” என்று விக்ரம் சரவணனிடம் கூற, சரவணன் ஆமோதித்து சனந்தாவை பார்த்து அப்புறமாக பேசலாம் என்று சைகையில் கூறுனான். அதை புரிந்து கொண்டு சனந்தாவும் தலையை அசைத்தாள்.

“இந்த லக்கேஜ் எல்லாம் எங்க கொண்டு போகணும் வீட்டுக்கா எல்லாமே??” என்று சரவணன் கேட்க, “இல்ல அதுல தனித் தனி கவர் இருக்கும் பாருங்க…. ஒரு பெரிய கவர் வீட்டுக்கு கொண்டு போகனும்… இன்னொன்னு பசங்களுக்காக வாங்கினேன்… கொஞ்சம் ஸ்டடி மெட்டிரியல்ஸ் அதெல்லாம் எங்க வெக்கணுமோ அங்க வெச்சிடுங்க” என்று சனந்தா கூறினாள்.

“என்னோட பேக் எங்க சரவணா?” என்று சனந்தா கேட்க, “இந்தா இங்க இருக்கு” என்று சரவணன் எடுத்து கொடுத்தான். சனந்தாவின் பேக்கில் ஒரு பிரவுன் பேப்பர் பாக்கெட்டை எடுத்து கவிதாவிடம் நீட்டினாள். “எனக்கா… என்னது இது??” என்று கவிதா ஆச்சரியமாக கேட்க, “ம்ம்…. உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியல… ஆனா, நேத்து நீங்க இந்த க்ளிப் அண்ட் பேண்ட் போட்டிருந்தீங்க…. அதே மாதிரி பார்த்தேன் உங்க ஞாபகம் வந்தது அதனால வாங்கிட்டு வந்தேன்… உங்களுக்கு பிடிச்சு இருந்தா எடுத்துக்கோங்க… இல்லனா பரவாயில்ல” என்று சனந்தா கூறினாள்.

கவிதா ஆர்வத்துடன் பேப்பர் கவரைப் பிரித்து பார்த்து, “ரொம்ப அழகா இருக்கு ரொம்ப நன்றி” என்று கவிதா முகமெல்லாம் புன்னகையுடன் கூறினாள். “உண்மையிலேயை உங்களுக்கு புடிச்சிருக்கா…. இல்ல எனக்காக சொல்றீங்களா கவிதா??” என்ற சனந்தா கேட்க, “அய்யோ இல்ல இல்ல ரொம்ப பிடிச்சிருக்கு… ரொம்ப நன்றி…” என்று கவிதா மனதார கூறினாள். “என்ன நீங்க சனான்னே கூப்பிடலாம்” என்று சனந்தா கூறவும் கவிதா புன்னகைத்து சரி என்று தலையை அசைத்தாள்.

“உனக்கு ரூம் எல்லாம் க்ளீன் பண்ணவனுங்க இவனுங்க…. லக்கேஜ் எல்லாம் ஏத்தி இறக்கி உன்னை செட்டில் பண்ண வெச்சு… உனக்கு பேச்சு துணைக்கும் இருந்தது நான்…. எங்களுக்கு எல்லாம் எதுவுமே வாங்கிட்டு வரல… ஆனா, கவிதாக்கு மட்டும் வாங்கிட்டு வந்து இருக்க” என்று சரவணன் குறை கூறவும், சனந்தா புன்னகையுடன், “உங்களுக்கும் க்ளிப் வேணா வாங்கி கொடுக்கவா அடுத்த வாட்டி” என்று சனந்தா கேலியாக கேட்டாள்.

“எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் தான்” என்று சரவணன் கூறவும் அனைவரும் சிரித்தனர். “ம்ம்… இந்தாங்க உங்களுக்கு தான் இது” என்று சனந்தா கொடுக்க, சரவணன் அதை பார்த்து நிஜமாவா!!! என்று கேட்டான்.

“ஆமா இதுல சரவணன்னு இருக்கு… உங்க பேரு தானே அது… அப்ப உங்களுக்கு தான்…. அண்ட் ஃபாரஸ்ட் சர்வீஸ் சிம்பலும் இருக்கும்” என்று சனந்தா கூற, சரவணன் அதை பார்த்து, “ரொம்ப அழகா இருக்கு தேங்க்யூ சனா!!” என்று கூறினான்.

“ஏன்டா உனக்கு வந்த உடனே கூச்சமே இல்லாம தேங்கயூன்னு சொல்லிட்டு வாங்கிகிட்டல அப்ப நாங்க ரெண்டு பேர் மட்டும் என்ன” என்று அபிலாஷ் கேட்க, சனந்தா தயக்கத்துடன் கையில் பிரேஸ்லெட்டை வைத்துக் கொண்டு, “நீங்க இத வாங்குவீங்களான்னு தெரியல… ஆனா, நான் கவனிச்ச வரைக்கும் நீங்க மூணு பேரும் க்ளோஸ் ஃபிரண்ட்ஸா இருக்கீங்க… ஒருத்தருக்கு மட்டும் வாங்கிட்டு மீதி ரெண்டு பேருக்கு வாங்கலன்னா எனக்கும் ஒரு மாதிரி இருக்கும்… அதான் நான் உங்களுக்கும் வாங்கினேன்…. ஆனா, என்கிட்ட இருந்து நீங்க… வா… வாங்கி…. வாங்கிப்பீங்களான்னு தெரியல டாக்டர்” என்று சனந்தா தயக்கத்துடன் கூறினாள்.

அபிலாஷ் சனந்தாவை ஏதும் பேசி காயப்படுத்திடுவானோ என்று சரவணன் குறுக்கிட்டு, “அதெல்லாம் அவன் வாங்கிப்பான் நீ குடு என்கிட்ட” என்று சரவணன் சனந்தாவின் கையில் இருந்த பிரேஸ்லெட்டை வாங்கிக் கொண்டு அபிலாஷிடம் கொடுத்தான். அந்த பிரேஸ்லெட்டில் டாக்டர் என்று எழுதி டாக்டரின் சிம்பிள் இருக்கவும், அபிலாஷுக்கு அது பிடித்திருந்தாலும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

சனந்தா சற்று எதிர் பார்ப்போடு அபிலாஷை பார்க்க அவனும் அமைதியாக இருக்க, சரவணன் அபிலாஷிடம் சைகையில் ஏதாவது சொல்லு என்று கூறவும், தேங்க்ஸ்!! என்று அபிலாஷ் கூறவும், சனந்தா புன்னகைத்தாள்.

சனந்தா தயக்கத்தில் கைகளை பிசைந்துக் கொண்டு மற்றொரு பிரேஸ்லெட்டை வைத்திருக்க சரவணன் அதை வாங்கிக் கொண்டு விக்ரமிடம் கொடுத்தான். விக்ரம் அதில் பார்க்க அவனுடைய பெயரும் அவனின் கிராமத்தின் பெயரும் சேர்ந்து எழுதி இருந்தது. அதனுடன் ஃபாரஸ்ட் சர்வீஸ் சிம்பலும் இருந்தது.

“இதுக்கும் அவர் எங்க திட்டுவாரோ என்னை” என்று பயத்தில் சனந்தா சரவணனிடம், “ஸ்டடி மெட்டீரியல்ஸ் எல்லாம் எங்க வைப்பீங்க” என்று பேச்சை மாற்றும் விதமாக கேட்க, “ஆஃபீஸ்ல இருக்கும் மீதி எல்லாமே என் வீட்டுல அப்படி இல்லன்னா விக்ரம் வீட்டில வெச்சிருப்போம்” என்று கூறினான்.

“சரி ஓகே வீட்டுக்கு கிளம்பலாம் இதெல்லாம் எடுத்து வைக்கணும்… ஒரு மூணு மணி போல ஆத்து கிட்ட ஒரு வேலை இருக்கு… கிளம்பலாம் வா விக்கி” என்று சரவணன் கூற, “விக்கி உன் வண்டி இங்க தான் இருக்கு கொண்டு போ” என்று அபிலாஷ் கூறினான்.

“நல்லதா போச்சு… இவ்வளவு லக்கேஜ கைலயே தூக்கிட்டு போகனுமான்னு நினைச்சேன்…. நல்ல வேள விக்கி வண்டி இருக்கு….. சரி ஓகே யாரு வண்டியில வர்றீங்க உங்க ரெண்டு பேருல?” என்று சரவணன் சனந்தாவையும் கவிதாவையும் பார்த்து கேட்க, சனந்தா அமைதியாக இருக்கவும், கவிதா, “நான் வரேன்” என்று கூறினாள்.

கவிதா, அவள் கொண்டு வந்த சாப்பாடு டிபன் பாக்ஸை எடுத்து வைத்துக் கொள்ளவும் சரவணன், சனந்தா வாங்கி வந்த பொருட்களின் பையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றனர். விக்ரம் அபிலாஷிடம் காலையில் சனந்தா மற்றும் ரம்யாவுடன் நடந்த உரையாடலை பற்றி கூறினான், பின் மார்க்கெட்டில் நடந்ததையும் சேர்த்து கூறினான்.

“அப்போ உண்மையிலேயே அவளுக்கு எல்லாம் மறந்து தான் போச்சு போல டா” என்று அபிலாஷ் கூற, “அப்படித் தான் இருக்கு…. ஆனா, இவளுக்கு எல்லாம் ஞாபகம் வந்தா தான் உண்மை என்னன்னு தெரியவரும்” என்று விக்ரம் கூறினான்.

“காலையில நீங்க கிளம்பினதுக்கு அப்புறம் அப்பா கூட வந்து சனந்தாவ பத்தி நல்லதா தான் பேசிட்டு போனாரு…. இதெல்லாம் பண்றா அப்படின்னு அவ வேலை பத்தி எல்லாம் பேசிட்டு போனாரு…. அப்படிலாம் இருக்கிற பொண்ணு எப்படி தப்பு பண்ணுவான்னு எனக்கே ஒரு நிமிஷம் தோணுதுடா…. இருந்தாலும் உண்மை என்னன்னு தெரியாம எதுவும் முடிவு பண்ண முடியாது” என்று அபிலாஷ் கூறவும், விக்ரம் ஆமோதித்து தலையை அசைத்தான்.


கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chpater 14
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.