Chapter-28

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
165
0
16
www.amazon.com
சங்கர் சொன்னதை நினைத்து பார்த்து தனது வாழ்க்கையை தினேஷுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைத்த சுவாதி அவனது தோள்களில் சாய்ந்து கொள்ள, டிவியில் ஓடிக் கொண்டு இருந்த காதல் பாடலை கேட்டு நடந்ததை மறந்து காதல் மயக்கத்திற்கு சென்ற தினேஷ் தானும் அவளது தோள்களில் சாய்ந்து கொண்டான். அவர்கள் இருவரும் அவர்களுக்கான தனி உலகில் சஞ்சலித்து காதல் பறவைகளாக சிறகடித்து பறந்து கொண்டிருக்க, அப்போது டெலிவரிக்காக வந்திருந்த ஆட்களுடன் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் சங்கர். அங்கே ஹாலில் தினேஷும் ஸ்வாதியும் அமைதியாக அத்தனை நெருக்கமாக அப்படி அமர்ந்திருப்பதை பார்க்கவே அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. அதனால் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தான் அவன்.



இருப்பினும் வந்தவர்கள் எழுப்பிய சத்தத்தில் அவர்கள் இருவரும் பிரிந்தார்கள். வேகமாக எழுந்து நின்ற தினேஷ் “டைனிங் டேபிளை இங்க அப்படியே ஓரமா வச்சிடுங்க. என் ரூம் எங்க இருக்குன்னு காமிக்கிறேன். கையோட அங்க ஏசியை இன்ஸ்டால் பண்ணிடுங்க. நான் மொத்தமா எல்லாத்துக்கும் சேர்த்து சர்வீஸ் சார்ஜ் பே பண்ணிடடுறேன்.” என்று சொல்லிவிட்டு ஏசியுடன் வந்திருந்தவர்களை அழைத்துக் கொண்டு தங்களது ரூமிற்கு சென்றான்.



அது அப்பார்ட்மெண்ட் வீடு என்பதால் பெரும்பாலான வீடுகளில் எல்லா அறைகளிலும் ஏசி மாட்டப்படும் என்பதால் அதற்கான அனைத்தும் ஏற்கனவே தயாராக இருக்க, வந்தவர்கள் ஏசியை சுலபமாக மாட்டிவிட்டு டைனிங் டேபிளையும் ஓரமாக போட்டுக் கொடுத்துவிட்டு சென்றார்கள். தினேஷ் அதற்கான பணத்தை கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு தனது ரூமிற்கு சென்றுவிட, “காலையில சமச்ச பாத்திரம் எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு போயாச்சு. இப்ப போய் அதையெல்லாம் கழுவி வச்சிட்டு நைட்டுக்கு டின்னர் சமைக்கணும்.” என்று நினைத்த ஸ்வாதி நேராக கிச்சனுக்கு சென்றாள்.



அவளுக்கு முன்னேயே அங்கே தோசை ஊற்றுவதற்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் ஷங்கர். அதை கவனித்த சுவாதி “இன்னைக்கு நைட்டு தோசையா? காலையில வச்ச சாம்பார் கொஞ்சம் இருக்கு. அது கூட சட்னி அரைச்சுக்கலாம். மாவு பாக்கெட் எங்க கிடைக்கும்னு சொல்லுங்க நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்.” என்று சொல்ல, “வாட்ச்மேன் கிட்ட சொல்லிட்டேன். அவரே கொண்டு வந்து கொடுத்துப்பாரு. நீ எதுவும் பண்ண வேண்டாம். இப்ப தானே நீயும் தினேஷும் கொஞ்சம் நார்மல் ஆகிருக்கீங்க.. போய் அவர் கூட பேசிட்டு இரு. உங்களுக்குள்ள இருக்கிற இஷ்யூஸ முதல்ல சால்வ் பண்ணுங்க.

ஆபீஸ்ல இருந்து வந்து இவ்வளவு நேரம் ஆகுது. இன்னும் ரெஃபர்ஸ் கூட பண்ணல. நீ போ எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். ஒரு அரை மணி நேரம் கழிச்சு அவரை கூட்டிட்டு வா. தினேஷ் புதுசா வாங்கின டைனிங் டேபிள்ல உக்காந்து எல்லாரும் டின்னர் சாப்பிடலாம்.” என்று சிரித்த முகமாக சொன்னான் சங்கர். “நமக்கு என்ன வேணும்னு நம்ம சொல்லாமலயே இவருக்கு மட்டும் எல்லாமே கரெக்டா புரிஞ்சிருது. அதுதான் எப்படின்னு தெரியல. தேங்க்ஸ் சங்கர். நீங்க இப்படி எனக்கு பண்ற ஹெல்ப் எதையும் நான் மறக்க மாட்டேன். இது உங்களுக்கு சின்ன விஷயமா தெரியலாம். ஆனா எனக்கு ரொம்ப பெரிய விஷயம்.” என்று நினைத்த சுவாதி அவனை பார்த்து லேசாக ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு தனது ரூமிற்கு சென்றாள்.



அங்கே கட்டிலில் படித்துக் கொண்டு தினேஷ் தனது ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான். தனது ஹேண்ட் பேக்கை ஒரு ஓரமாக வைத்துவிட்டு தனக்கு தேவையான ஆடைகளுடன் குளிப்பதற்காக வெளியில் சென்று விட்டாள் சுவாதி. சில நிமிடங்களுக்கு பிறகு குளித்துவிட்டு வந்த சுவாதி அதுவரை கொண்டை போட்டு இருந்த தனது கூந்தலை அவிழ்த்துவிட்டு கண்ணாடியை பார்த்து தலைசிவி பின்னலிட்டாள். பின் தனது முகத்தில் இரண்டு மூன்று கிரீம்களை போட்டு அவளது டெய்லி ஸ்கின் கேரை செய்துவிட்டு நெற்றியில் ஒரு பொட்டை வைத்தாள். அவளுக்கு இப்போதும் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வர, “வேண்டாம், இப்ப வெச்சி பழகிட்டா அப்புறம் நமக்கே தெரியாம வெளிய போகும்போது நம்ம எப்பயாவது வச்சிட்டு போயிடுவோம். அப்புறம் இந்த சுடுமூஞ்சி வந்து ஏன் இப்படி பண்றேன்னு நம்மள கத்துவான். எதுக்கு.. தேவையா இதெல்லாம்?” என்று நினைத்து தனது எண்ணத்தை கை விட்ட சுவாதி “நம்ம காலைல காய போட்ட துணி என்னாச்சுன்னு தெரியலையே.. மழை வேற பேஞ்சிக்கிட்டே இருந்துச்சு.. சரியா காஞ்சிதோ இல்ல இன்னும் ஈரமா இருக்கோ என்னமோ!” என்று நினைத்து கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள்.



நல்ல வேளையாக மழை சாரல் அடித்தும் அவள் காய போட்டிருந்த துணிகள் அனைத்தும் ஓரளவிற்கு நன்றாக காய்ந்தே இருந்தது. அதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட சுவாதி அதை எடுத்துக் கொண்டு தனது அறைக்கு வந்தாள். அதில் தினேஷ் ஆபீஸுற்க்கு அணிந்து செல்லும் சட்டைகள் இருந்ததால் அதை எடுத்து தனியாக வைத்த சுவாத்தி மற்ற துணிகள் அனைத்தையும் மடித்து வைத்துவிட்டு அவனது சட்டைகளை தரையில் ஒரு பெட்சீட்டை போட்டு அயன் செய்ய தொடங்கினாள்.



தனது ஃபோனை பார்த்துக் கொண்டு இருந்த தினேஷ் அவ்வப்போது அவளையும் பார்க்க தான் செய்தான். தன்னுடன் அப்படி காலையில் கத்தி சண்டை போட்ட சுவாதி இப்போது அதையெல்லாம் மறந்துவிட்டு தனக்காக இதையெல்லாம் செய்வதால் சந்தோஷப்பட்டு “பரவால்ல.. இவளுக்கு என்ன தான் அப்பப்போ கோபம் வந்தாலும் அதை தாண்டி நம்ம மேல பாசம் நிறைய இருக்கு போல..!! நான் கூட இந்த சண்டை அப்படியே இன்னும் எத்தனை நாளுக்கு இழுத்துட்டு போகுதுன்னு பார்க்கலாம்னு நெனச்சேன். ஆனா இவ இவ்வளவு சீக்கிரம் மாறிட்டா.. இதுவும் நல்லா தான் இருக்கு. பொண்டாட்டி கூட சண்டை போடுறது, அப்புறம் சமாதானமாகிறது எல்லாம்!” என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டு அவளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து ஆன்லைனில் எதையோ ஆர்டர் செய்தான்.



அதுவும் சரியாக அரை மணி நேரத்தில் அவனது லொக்கேஷனுக்கு வந்துவிட, லிப்டில் கீழே சென்று அதை வாங்கிக் கொண்டு வந்த தினேஷ் அயன் செய்த துணிகளை அழகாக மடித்து எடுத்து வைத்துக் கொண்டிருந்த சுவாதியை கண்டான். இப்போது அவள் ஒரு பேபி பிங்க் நிற டி ஷர்ட்டும், ப்ளூ நிற பைஜாமாவும் போட்டு இருந்தாள்‌‌. இப்போதும் அப்படி ஒன்றும் அவள் தன்னை ஆடம்பரமாகவோ அழகாகவோ அலங்கரித்துக் கொள்ளவில்லை‌. இருப்பினும் அந்த எளிமை தோற்றத்தில் கூட அவள் இப்போது அவன் கண்களுக்கு அழகாக தெரிய, தன் கையில் இருந்த பார்சலை கட்டிலில் வைத்த தினேஷ் பீரோவில் மடித்த துணியை எடுத்து வைத்துக் கொண்டிருந்த சுவாதியை பின்னே இருந்து அணைத்தான்.



அதை எதிர்பார்த்து இருக்காதவள் துடுக்கிட்டு அவன் பக்கம் திரும்ப, அவளை தன்னுடன் சேர்த்து இறுக்கிக்கொண்ட தினேஷ் “இப்ப எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுற?” என்று கேட்க, “நான் பேசினாலே உங்களுக்கு தான் கடுப்பாகுமே.. இப்ப நீங்களா வந்து என் கிட்ட பேசுறீங்க. இப்பயாவது நான் பேசலாமா?‌‌ இல்ல இப்பயும் நான் என்ன சொன்னாலும் அத புரிஞ்சுக்காம கோவப்பட்டு என் கிட்ட கத்திட்டே இருப்பீங்களா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் சுவாதி. அவள் குரலில் சோகம் அப்பட்டமாக தெரிந்தது.



அவன் இப்போது நல்ல மூடில் இருந்ததால் தன் மீது இருந்த தவறும் அவனுக்கு ஓரளவிற்கு புரிந்தது. அதனால் பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என்று நினைத்து அவளை இறுக்கமாக கட்டி அணைத்து மெல்லிய குரலில் அவள் காதோரம் “சாரி டி. கொஞ்ச நாளாவே எனக்கு ஆபீஸ்ல வொர்க் பிரஷர் ஜாஸ்தி. என் கூடவே தானே இருக்க.. உனக்கு தெரியாதா? அந்த மேனேஜர் இன்னைக்கு கூட ப்ராஜெக்ட் சொன்ன டைமுக்குள்ள முடியலன்னா அதோட consequencesஐ நான் தான் ஃபேஸ் பண்ணனும்னு சொல்லி என்னை மிரட்டிட்டு போறான். அப்படி என் மண்டைக்குள்ள ஆயிரம் விஷயம் ஓடிட்டு இருக்கு.

அதை பத்தி எல்லாம் யோசிக்கிட்டே இருக்கும்போது, நீ வேற எனக்கு பிடிக்காத மாதிரியே எல்லாத்தையும் பண்ணிட்டு இருந்த. நீ காலையில சொன்ன மாதிரி நான் அத பொறுமையா கூட சொல்லி இருக்கலாம். ஆனா நான் அப்ப இருந்த மைண்ட் செட்டுக்கு எனக்கு அப்படி சொல்ல வரல. அதான் கோவமா பேசிட்டேன். இதுக்கு தான் ஒரே ஆபீஸ்ல ஒர்க் பண்றவங்க மேரேஜ் பண்ணிக்க கூடாதுன்னு ரூல்ஸ் போடுகிறாரகளோ என்னமோ! எனக்கு உன்னை ஆபீஸ்ல பார்த்து பழகுனதுனால இங்க டக்குனு நீ ஒரு தப்பு பண்ணும் போது, அங்க திட்ற மாதிரியே இங்கயும் திட்ட வந்துருது. நான் இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிறேன். ஓகேவா?” என்று கேட்டான்.

தொடரும்..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-28
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.