Chapter 105

Bhavani Varun

Member
Jan 23, 2025
118
0
16
ராஜ்மோகன் மற்றும் அனு அனைவர் முன்னிலையிலும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கவும், வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசன் ஏற்றுக் கொண்டனர். பின்பு சரவணனிடமும் விக்ரமிடமும் வந்து அனு பேசவும் அவர்கள் நிலைமையை புரிந்து கொண்டு, “எங்களுக்கு இது ரொம்ப பெரிய குழப்பமா இருந்துது நீங்க நேர்ல வந்து உண்மைய சொல்லணும்னு நினைச்சதே எங்களுக்கு போதுமானது தான் சார்” என்று விக்ரம் கூறினான்.

“இப்பவே ரொம்ப லேட் பண்ணிட்டேன்னு எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்குப்பா… ஆனா, நான் வந்து உண்மைய சொல்லணும் அப்படிங்கிறத இவளுக்கு ஆப்ரேஷன் பண்ணி முடிக்கும் போதே நான் யோசிச்சு வெச்சிருந்தேன்…. ஆனா அதுக்கு அப்புறம் இவ ரெக்கவர் ஆகுறதுக்கு பல மாசம் ஆயிருச்சு அதெல்லாம் முடிச்சு உங்க கிட்ட வந்து பேசணும்னு நான் நினைச்சுட்டு இருந்தேன்”….

“இந்த மாதிரி பூஜை இருக்குன்னு அனு சொன்னா… சரி இது தான் சந்தர்ப்பம்னு நானும் வந்து உங்க கிட்ட சொல்லிட்டேன்…. இப்ப எனக்கு உண்மையிலேயே மனசு நிம்மதியா இருக்கு… நீங்க என்ன கம்பிளைன்ட் வேணாலும் என் மேல கொடுங்க நான் அது எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண தயாரா தான் வந்து இப்ப உங்க கிட்ட உண்மைய சொல்லுறேன்” என்று ராஜ்மோகன் கூறினார்.

“கம்ப்ளைன்ட் எல்லாம் வேணாம் சார்… அனு உடம்ப பார்த்துக்கோங்க அது போதும் எங்களுக்கு வேற எதுவும் வேண்டாம்” என்று விக்ரம் அவனுடைய பெருந்தன்மையை காட்டினான். ஆனால் அபிலாஷுக்கு தான் என்னவோ மனம் ஏற்க மறுத்தது. அது அவனுடைய முகத்திலேயே தெரிந்தது அனைவரும் அதை ஆமோதிக்கும் போது வேறு வழியின்றி அபிலாஷும் அமைதியாக இருந்தான்.

இன்று, பழைய நினைவுகளில் இருந்து மீண்டு, “சரி கவிதாவோட கல்யாண விஷயங்கள் எல்லாம் என்ன ஆச்சு??” என்று சரவணன் கேட்க, “விநாயகர் பூஜை முடிஞ்சதுக்கு அப்புறமா பொங்கல் வெச்சுட்டு கல்யாணம் புடவை வாங்குறது தாலி வாங்குறதுன்னு எல்லாத்துக்கும் தேதி குறிச்சிருக்காங்க…. அதுலிருந்து ஒரு மாசத்துல கல்யாணம் டா… ஆல்ரெடி நிறைய கேப் விட்டோம் அது போக இப்ப இருக்குற நேரத்தயும் கல்யாணத்துக்காக பயன்படுத்திக்கிட்டு அப்போ சீக்கிரமாவே வெச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்க” என்று விக்ரம் கூறினான்.

“அந்த பெண்ணும் பாவம் டா உங்களுக்காக யோசிச்சு இவ்வளவு நாள் காத்துகிட்டு இருந்தா” என்று சரவணன் கூறவும், “அந்த ஒரு காரணத்துக்காக தான் டா நான் அடம் பிடிச்சு அம்மா அப்பாவை கூட்டிட்டு போனேன்” என்று விக்ரம் கூறினான்.

“சரி இதெல்லாம் விடு நான் சொன்னது ஞாபகம் வெச்சுக்கோ அப்பப்போ போய் சனாவ பார்த்துட்டு வா” என்று சரவணன் கூறவும், “கண்டிப்பா அத நான் பண்றேன்” என்று விக்ரம் உறுதி அளித்தான்.

விகாஷும் ஊரிலிருந்து வருவதற்கு முன்னே இங்கு நடந்த கலவரம் அனைத்தும் அவன் அறிந்த ஒன்றே. ஆனால் சனந்தாவுக்கு எதுவும் நினைவில் இல்லை என்பதால் பல குழப்பங்கள் பெருகின. ஒரு நாள் அவளுடைய பழைய நினைவுகள் ஞாபகத்திற்கு வரவும் விகாஷை அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்று அனைத்தும் கூறிவிட்டு வந்தாள் அதுவும் விக்ரம் ஊரில் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டே.

அவள் உடன் பிறந்தவனாயிற்றே, அவன் வந்த நாளிலிருந்து இப்பொழுது வரை அவள் சரியாக பேசுவதும் இல்லை சாப்பிடுவதும் இல்லை உறங்குவதும் இல்லை என்பதை அறிந்து கொண்டு தான் இருந்தான். பல முறை சனந்தாவிடம் பேச முயற்சி செய்தாலும் அவள் ஒர் இரு வார்த்தைக்கு மேல் பேசாமல் அவளின் வேலையை காரணம் காட்டியோ அல்லது அவளின் உடல் சோர்வை காரணம் காட்டியே கழித்து விடுவாள்.

கௌதமும் அப்படித் தான் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து வாட்டி ஆவது அவளுக்கு ஃபோன் செய்து எங்கே இருக்கிறாள் என்ன செய்கிறாள் ஏது என்று தெரிந்து கொண்டே தான் இருப்பான். அவர்களுடன் வளர்ந்தவன் ஆயிற்றே மேலும் நண்பனும் கூட அவள் இவ்வாறு மனநிலையில் இருக்கும் பொழுது அவளை கண்காணிப்பது அவனுக்கு பெரும் பொறுப்பு தான். அதற்கு ஏற்ப அவளுக்கு ஜி.பி.எஸ் பொருத்திய காரும் பைக்கும் தான் வாங்கி கொடுத்தனர்.

இவை அனைத்தும் அவளின் பாதுகாப்புக்காக தான் செய்கிறார்கள் என்பதை அவள் அறிந்து அதை பற்றி எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அனைவரும் வேலையை முடித்து வந்திருக்கவும் சனந்தா உறங்கிக் கொண்டிருந்தாள்.

“சனா சாப்பிட்டாளா??” என்று சந்திரசேகர் கேட்க, “அவ சாப்ட்டாங்க டயர்டா இருக்குன்னு சொல்லி போய் படுத்துட்டா” என்று லக்ஷ்மி கூறினார்.

சரி என்று அனைவரும் உணவு அருந்திவிட்டு பிரகாஷ் மற்றும் கௌதம் அவர்களுடைய வீட்டிற்கு புறப்படவும், “ஏன் அண்ணா இங்கேயே தங்கிடக்கூடாதா… நைட் ஆகுதே” என்று லக்ஷ்மி கேட்க, “நான் பாதி நாளுக்கு மேல இங்க தான மா தங்குறேன்…. அப்பப்ப ஆவது போயிட்டு வீட்டு சுத்தப் படுத்திட்டு வர வேணாமா” என்று பிரகாஷ் கேலியாக கூறவும் அனைவரும் சிரித்து விட்டனர்.

“நானாவது பரவாயில்லை அப்பப்போ போறேன் வரேன்… இவன் எல்லாம் எப்பயுமே வர மாட்டேங்கிறான்” என்று பிரகாஷ் கௌதமை பார்த்து கூறவும், “இது நம்ம சின்ன வயசுல பேசுனது தானே அண்ணா… எப்ப வீடு கட்டினாலும் கௌதமுக்கு இங்கு தனியா ஒரு ரூம் உண்டுன்னு சொல்லி… அப்ப அவனுக்கு இதுவும் அவன் வீடு தானே” என்று லக்ஷ்மி ஆதங்கத்துடன் பேச, “ஆமா மா நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் மா” என்று பிரகாஷ் கூறினார்.

“சரிடா நம்ம ஒரு வாட்டி நேர்ல போயிட்டு முறையா கல்யாண தேதி எல்லாம் குறிச்சுட்டு வந்துடலாமா என்ன சொல்ற??” என்று சந்திரசேகர் கேட்கவும், “சரி அப்படியே பண்ணிரலாம் எப்ப போலாம்னு மட்டும் சொல்லுங்க” என்று பிரகாஷ் கூறவும், “சரி ஒரு நாள் பார்த்துட்டு அடுத்த வாரத்தில போயிட்டு வந்துருவோமா அண்ணா??” என்று லக்ஷ்மி கேட்க, பிரகாஷும் ஆமோதித்தார்.

“கௌதம் உனக்கு லீவ் எப்படிடா??” என்று சந்திரசேகர் கேட்க, “அது…. கண்டிப்பாக அடுத்த வாரம் லீவு எடுக்க முடியாதுன்னு தான் நினைக்கிறேன்… போகுற மாதிரி இருக்கும்” என்று கௌதம் கூறவும், “நீ பர்மிஷன் கேட்க முடியும்ல” என்று விகாஷ் ஆலோசனை கூறவும், “அதுவும் சரிதான் நான் வள்ளி கிட்ட பேசி பார்க்கிறேன் அவங்கள இங்க வர சொல்லி” என்று லக்ஷ்மி கூறினார்.

“அம்மா அதுவும் இல்லாம அடுத்த வாரம் சனா ஃபுல்லா வேலை இருக்கு வீட்டுக்கு வரவே லேட் ஆகும்னு சொல்லிட்டு இருந்தா” என்று விகாஷ் கூறவும்,

“ஆமா அது தான் டா… ஆனா, அதுக்காக இதெல்லாம் தள்ளி போட முடியாதுல… அவ இல்லனா பரவாயில்ல…. அடுத்து பொங்கலுக்கு, ஷாப்பிங் அதுக்கெல்லாம் அவள நம்ம முன்னாடியே சொல்லிக்கலாம் லீவ் போட சொல்லி” என்று லக்ஷ்மி கூறினார்.

“அதுவே இங்க ஃபிக்ஸ் பண்ணா அவளும் வருவா… கொஞ்சம் நேரம் தானேன்னு சொல்லுவோம்” என்று விகாஷ் கூறவும், “அதுவும் சரி தான் நான் பேசிட்டு அப்புறம் முடிவு பண்ணலாம்” என்று லக்ஷ்மி கூறினார்.

“சரிம்மா எல்லாம் பேசிட்டு சொல்லுங்க” என்று பிரகாஷ் மற்றும் கௌதம் விடைப்பெற்றனர். அனைவரும் உறங்க செல்ல விகாஷும் அவனுடைய அறைக்கு செல்லும் போது சனந்தாவின் அறையில் இன்னும் விளக்கு எரியவதை பார்த்து அவன் கதவை தட்டி திறந்து கொண்டு உள்ளே செல்லவும் அவள் பெட் மீது இல்லை பால்கனியில் அமர்ந்து தலை சாய்த்து கொண்டிருந்தாள் கண்களில் கண்ணீருடன்.

அதை பார்க்க விகாஷுக்கு பாவமாக இருந்தது. விகாஷ் சென்று சனந்தாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவள் தலையில் கை வைக்கவும் சனந்தா சட்டென்று அவனை பார்த்து, “இன்னும் தூங்கலையா??” என்று கேட்க, “அத நான் கேக்கணும்… நாங்க இப்ப தான் வீட்டுக்கு வந்தோம்” என்று விகாஷ் கூறினான்.

சனந்தா அவளது கைபேசியில் விக்ரமின் புகைப்படத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அருகில் விகாஷ் அமரவும் அவனிடம் துங்கலயா என்று கேள்வி கேட்டுக் கொண்டே, சட்டென்று அவள் ஃபோனை லாக் செய்தாள். அதற்குள் விகாஷ் அவளது ஃபோனில் விக்ரம் மற்றும் சனந்தாவின் செல்ஃபி புகைப்படத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள் என்பதை பார்த்துவிட்டான்.

“சனா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்… இன்னிக்கும் வேலை இருக்கு இல்ல நேரம் ஆகுது தூங்க போன்னு தட்டிக் கழிக்காத” என்று விகாஷ் கூறவும், சனா அமைதியாக தலையை மட்டும் அசைத்தாள். “நீ தினமும் இங்க தானே உட்கார்ந்து அழுதுகிட்டு இருப்ப??” என்று விகாஷ் கேட்க, அவளின் மௌனமே அவனுக்கு பதில் அளித்தது.

“சரி அதெல்லாம் விடு நீயே உன்னை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்திக்கிற… அதுக்கு நீ அத்தான் கிட்ட பேசலாம்ல….. நீ ஒரு வாட்டி பேசி பாரு அதுக்கு அப்புறமா என்ன முடிவு எடுக்குறியோ அது உன் இஷ்டம்” என்று விகாஷ் கூறவும் இன்னமும் அவளிடம் மௌனமே இருந்தது.

“ஏன் சனா எங்களுக்கு எல்லாம் எதுவும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா சொல்லு…. ஒரு வாரத்தில எத்தனை வாட்டி அந்த கார் மியூசியம் போயிட்டு வர…. அந்த கார் மியூசியம்ல என்ட்ரி டிக்கெட் முதற்க் கொண்டு எல்லாத்தையும் நீ பத்திரமா சேர்த்து வெச்சிருக்க”….

“இதெல்லாம் யாருக்காக பண்ற…. அந்த கோயிலுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வாட்டி போற…. இது போக அத்தானோட பர்த்டேக்கு விஷ் பண்ணல… ஆனா, அவருக்கு கிஃப்ட் மட்டும் வாங்கி வெச்சிருக்க…. அது மட்டுமா வாங்கி வெச்சிருக்க நீ….. சொல்லு…. இதெல்லாம் ஏன் பண்ற சனா???... அவர் கிட்ட நீ பேசக்கூட மாட்டேங்குற அப்புறம் எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்க???” என்று விகாஷ் கேட்க, சனந்தா அழுது கொண்டு மட்டுமே இருந்தாள்.

அதை பார்க்க பாவமாக இருக்கவும் விகாஷ் அவளை அணைத்து கொண்டு முதுகில் வருடி விடவும் சனந்தா அழுது தீர்த்து விட்டாள். “ஏன் சனா இப்படி இருக்க…. கொஞ்சம் அவருக்கு இடம் கொடு அவர் பேசட்டும் உன்கிட்ட…. அதுக்கு அப்புறமா நீ என்ன வேணாலும் முடிவு பண்ணு அந்த முடிவுல யாருமே தலையிட மாட்டாங்க என்னை நம்பு சனா” என்று விகாஷ் கூறவும், சனந்தா அவளை விலகிக் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

“என்னால அவர நினைக்காம இருக்கவே முடியல விக்கி…. எங்க பார்த்தாலும் அவரோட ஞாபகம் தான் வருது….. எனக்கு அந்தக் கோயில ஒவ்வொரு முறை தாண்டும் போதும் எனக்கு அவ்வளவு வலிக்குது…. அவர கூட்டிட்டு போனப்ப இருந்த சந்தோஷம் இப்போ இல்லன்ற கோவம் எனக்கு நிறைய இருக்கு”….

“அதே மாதிரி அந்த மியூசியம் போனப்போ எவ்வளவு சந்தோஷமா இருந்தேனோ அதுக்கு பதிலா இப்ப அவ்வளவு வலியோட தான் இப்ப இருக்கேன் அதுவே எனக்கு கோவமா தான் இருக்கு…. இதெல்லாம் போக எனக்கு என்னை பார்த்தாலே அவர் ஞாபகம் தான் இருக்கு…. என்னால இது கடந்து வரவே முடியல”…..

“முதல்ல இதுக்கு எல்லாம் என்னை சமாதானப்படுத்தணும் அப்ப தான் அவர் என்ன சொல்றாரு என்றதே நான் காது கொடுத்து கேட்க முடியும்…. நான் பாட்டுக்கு இவ்ளோ குழப்பத்தை வெச்சுக்கிட்டு அவர் என்ன பேச வராருன்னே கேட்க முடியாம போயிடுச்சுன்னா அவரை நான் இழந்துருவேனோன்னு பயம் எனக்கு நிறைய இருக்கு விக்கி” என்று சனந்தா கூறி அழுது தீர்த்தாள்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 105
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.