தாபம் 34

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 34: மன்னிப்பு கேட்ட வருண்

சாரதா, ரித்திகாவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருப்பது பற்றி சந்தோஷுடம் சொல்ல, அதை கேட்ட சந்தோஷ்; தான் ரித்திகாவின் பெற்றோர்களை அழைத்து கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருவதாக சொன்னான். ரித்திகாவின் பெற்றோர்களிடம் சந்தோஷ், அவளுடைய உடல் நிலையை பற்றி சொல்ல, அதை கேட்ட இருவரும் பதற்றம் அடைந்தனர்.

ரேவதி லஞ்ச் பீரியட் தொடங்கியதில் இருந்தே பல முறை ரித்திகாவுக்கு கால் செய்து விட்டாள். ஆனால் ரித்திகா அதை எடுக்காததால் ஏற்கனவே அவளை நினைத்து அதிக கவலையில் இருந்தாள். இப்போது சந்தோஷ் வந்து சொன்னதை கேட்டவுடன்; ரேவதிக்கும், சுதாகருக்கும் ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது.

உடனே சிறிதும் தாமதிக்காமல் ஒரு ஆட்டோவை பிடித்து ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர். வரும் வழி எல்லாம் சுதாகரும், ரேவதியும், ரித்திகாவுக்கு எதுவும் ஆக கூடாது என்று கடவுளை பிரார்த்தித்த படியே வந்து கொண்டு இருந்தனர். ரித்திகா எவ்வளவு அடம் பிடித்து இருந்தாலும், அவளை வற்புறுத்தி வீட்டிலேயே இருக்க வைத்திருக்க வேண்டும். அவள் பேச்சை கேட்டு அவளை வேலைக்கு அனுப்பியது தங்கள் தவறு தான் என்று அவர்கள் இருவரும் தங்களை தாங்களே குறை கூறி கொண்டு இருந்தனர்.

அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த சந்தோஷ், தன்னால் முடிந்த வரை அவர்களுடன் பேசி அவர்களை ஆறுதல் படுத்தி கொண்டு இருந்தான். இப்படியே சில நிமிட பயணத்திற்கு பின் அவர்கள் வந்த ஆட்டோ நாராயணன் மருத்துவமனையின் வாசலில் வந்து நின்றது. அந்த பெரிய மருத்துவமனையை பார்த்தவுடன், இங்கு கொண்டு வந்து சேர்க்கும் அளவிற்கு ரித்திகாவின் உடல் நிலை அவ்வளவு மோசமாக இருக்கிறது போல என்று நினைத்த ரித்திகாவின் பெற்றோர்கள் தங்கள் மகளை நினைத்து மிகவும் பயந்தனர்.

இது நாராயணன் குரூப்பிற்கு சொந்தமான மருத்துவமனை என்பதால் தான் ரித்திகாவை இங்கே கொண்டு வந்து அட்மிட் செய்து இருப்பார்கள் என்று சந்தோஷ் அவர்களிடம் விளக்கினான். பின் ரிசப்ஷனில் அவர்கள் ரித்திகாவை எங்கே அட்மிட் செய்து இருக்கிறார்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டு வேகமாக அங்கே நடந்து சென்றனர்.

அவர்கள் ரித்திகா அட்மிட் செய்ய பட்டு இருந்த ரூமின் அருகே வரும் போது டாக்டரிடம் மூன்று ஆண்கள் பேசி கொண்டு இருப்பதை கண்டனர். அவர்களின் அருகே ஒரு சிறுவனும் நின்று கொண்டு இருந்தான். ஆனால் அவர்களுடைய முதுகு பகுதி மட்டும் தான் இவர்களுக்கு தெரிந்தது. அதனால் அங்கே இருப்பவர்கள் யார் என்று இவர்களால் பார்க்க முடியவில்லை.

அவர்கள் மூவரும் அந்த ரூமின் அருகே வர, “எக்ஸ்க்யூஸ் மீ" என்ற சந்தோஷ் இன் குரல் அங்கே டாக்டருடன் பேசி கொண்டு இருந்த மூவரின் கவனத்தையும் இவர்கள் பக்கம் திருப்பியது. ரித்திகாவின் ஜாதகத்தையே தெரிந்து வைத்து இருந்த வருணுக்கும், சிவாவிற்கும், ரித்திகாவின் பெற்றோர்களை அடையாளம் கண்டு பிடிக்க சிரமமாக இல்லை. அங்கே இருந்த கௌத்தம் தான் அவர்கள் மூவரும் யார் என்று தெரியாமல் அவர்களை பார்த்து கொண்டு இருந்தான்.

கௌத்தமிற்க்கு சிரமம் கொடுக்காத சந்தோஷ்; தன்னையும், தன்னுடன் வந்த ரித்திகாவின் பெற்றோர்களையும் அவர்களிடம் அறிமுக படுத்தியவன், ரித்திகாவை பற்றி விசாரித்தான். அது வரை வருணிடம் ரித்திகாவை பற்றி சொன்னதை எல்லாம் மீண்டும் அவளுடைய பெற்றோர்களிடமும் சொல்ல தொடங்கினார் டாக்டர்.

டாக்டர்: உங்க பொண்ணுக்கு அடிக்கடி இப்படி காய்ச்சல் வருமா?

சுதாகர்: இல்ல டாக்டர், அவ நல்லா தான் இருந்தா.

ரேவதி: சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாக, “அவளுக்கு அடிக்கடி எல்லாம் காய்ச்சல் வந்தது இல்ல. ஆனா ஒரு தடவை டைபாய்டு வந்துச்சு. அப்ப ரொம்ப சீரியஸா இருந்தா. ரொம்ப கஷ்ட பட்டு தான் டாக்டர் அவள காப்பாத்துணோம்," என்றாள்.

டாக்டர்: இப்ப அவங்களுக்கு திருப்பியும் டைபாய்டு தான் வந்து இருக்கு. அவங்க ஏற்கனவே ரொம்ப வீக்கா இருந்து இருக்காங்க. இப்போ டைபாய்டு வேற வரவும் அத அவங்க உடம்பால தாங்க முடியல. அதனால தான் மயக்கம் போட்டு விழுந்து இருக்காங்க.

அவங்க நிலை கொஞ்சம் சீரியஸ் தான். ஆனா கவலைப்பட தேவையில்ல. ட்ரீட்மெண்ட் பண்ணி இருக்கோம். அவங்க சீக்கிரம் சரி ஆயிடுவாங்க. இப்போதைக்கு முதல்ல அவங்களுக்கு இருக்கிற காய்ச்சல் குறையனும். அது குறைஞ்சுருச்சுன்னா அப்புறம் அவங்க உடல் நிலை மேம்பட ட்ரீட்மென்ட் குடுக்கலாம்.

ரேவதி: ஓகே டாக்டர். நாங்க இப்ப ரித்திகாவை பார்க்க முடியுமா...?

டாக்டர்: ட்ரிப்ஸ் போயிட்டு இருக்கு. அவங்க இன்னும் மயக்கத்தில தான் இருக்காங்க. அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்ச உடனே நீங்க போய் பாருங்க.

சுதாகர்: ஓகே டாக்டர்.

அவர்களுடன் பேசி விட்டு அந்த டாக்டர் சென்று விட்டார். அப்போது சரியாக அங்கே சாரதா வந்தாள். பின் ரித்திகாவின் பெற்றோர்களுடன் சிறிது நேரம் ஆறுதலாக பேசி விட்டு சந்தோஷ் இடம் ரித்திகாவை பற்றி டாக்டர் சொன்னதை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டாள் சாரதா. சுதாகரும், ரேவதியும், அங்கே ஓரமாக போட பட்டு இருந்த சேரில் அமர்ந்தவர்கள், தங்கள் ஒரே மகளை நினைத்து வேதனையில் கண்ணீர் விட்டு கொண்டு இருந்தனர்.

அவர்களின் அருகே சென்று அமர்ந்த கௌத்தம், அவர்களிடம் தன்னை அறிமுக படுத்தி கொண்டவன்; ரித்திகா மயக்கம் போட்டு கீழே விழுந்ததில் இருந்து சித்தார்த்தை சமாதானப்படுத்தி வருண், அவளை இங்கே அட்மிட் செய்தது வரை அனைத்தையும் தெளிவாக சொன்னான். ஆனால் வருண் யாரென்று மட்டும் அவன் அவர்களிடம் சொல்லவில்லை.

அங்கு அமைதியாக நின்று கொண்டு இருந்த சிவாவும், வருணும், கௌத்தம் அவர்களிடம் பேசி கொண்டு இருப்பதை எல்லாம் கவனித்து கொண்டு தான் இருந்தனர். இப்போது இவன் ஏன் தேவை இல்லாமல் வருணின் முன் இதை எல்லாம் ரித்திகாவின் பெற்றோர்களிடம் சொல்லி கொண்டு இருக்கிறான் என்று நினைத்த சிவா, வருணின் முகத்தில் கோபத்தின் சாயல் ஏதாவது தெரிகிறதா என்று உற்று பார்த்தான்.

சிறிது நேரத்திற்கு முன் தன் மகனுக்காக அழுது கொண்டு இருந்த வருணின் முகம் இப்போது மிகவும் சாதாரணமாக இருந்தது. அவனுடைய முகத்தை பார்த்து எதையும் சிவா-வால் கண்டு பிடிக்க முடியவில்லை. வருண் இப்போது என்ன யோசித்து கொண்டு இருப்பான் என்று சிவா யோசித்து கொண்டு இருக்கும் போது வருண், ரித்திகாவின் பெற்றோர்களின் அருகே சென்றான்.

எப்போதும் ரித்திகாவை தவறாக நினைத்து, அவளை குறை கூறி கொண்டே இருக்கும் வருண், இப்போது அவளுடைய பெற்றோர்களிடம் என்ன பேச போகிறானோ என்று நினைத்து பயந்து அவனை பார்த்து கொண்டு இருந்தான் சிவா. அங்கே நின்று கொண்டு இருந்த கௌத்தமோ வருண் ஏதாவது தேவை இல்லாமல் பேசினால் அவனுக்கு சரியாக பதில் அடி கொடுக்க வேண்டும் என்று ரெடியாக இருந்தான்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் வருணின் குரல் சாந்தமாக வெளி வந்தது. மரியாதையுடன் ரித்திகாவின் பெற்றோர்களை பார்த்தான் வருண். தன்னுடைய பெயரை மட்டும் சொல்லி தன்னுடைய குடும்ப பெயரை அவர்களிடம் இருந்து மறைத்து தன்னை அறிமுக படுத்தி கொண்ட வருண் பேச தொங்கினான்.

வருண்: “நான் சித்தார்த்தோட அப்பா. சித்தார்த்திற்க்காக நான் உங்க கிட்ட சாரி கேட்டுக்கிறேன். சித்தார்த் பொதுவாவே அவன் வயசுல இருக்கிற மத்த பசங்க மாதிரி நார்மலா இருக்க மாட்டான். என் wife ஜான்வி இரண்டு வருஷத்திற்கு முன்னாடி ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க. அந்த ஆக்சிடெண்ட்ல சித்தார்த்தும் அவ கூட இருந்தான்.

அப்பல இருந்து அவன் யாரை பார்த்தாலும் பயப்படுவான். யார் கிட்டயும் முகம் கொடுத்து சரியா பேச மாட்டான். But ஏன்னு தெரியல ஈஸியா அவன் உங்க பொண்ணு கிட்ட ஃபிரண்ட் ஆயிட்டான். அவனை பொறுத்த வரைக்கும் ரித்திகா அவனோட டீச்சர் கிடையாது. அவங்க ரெண்டு பேரும் close friends-ஆ இருக்காங்க.

சோ உங்க பொண்ணு மேல இருக்கிற பாசத்துல அவங்க மயங்கி விழுந்த உடனே என்ன பண்றதுன்னு தெரியாம அப்படி எல்லாம் பண்ணிட்டான். நான் என்ன காரணம் சொன்னாலும் அவன் பண்ணது தப்பு தான். அதுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன், சாரி.” என்றான்.

அவன் பேசியதை கேட்ட கௌத்தமும், சிவாவும், தங்கள் முன் நின்று கொண்டு இருப்பது வருண் தானா என்று நம்ப முடியாமல் வியந்து பார்த்து கொண்டு இருந்தனர். இப்போது வருண், நாராயணன் குரூப்ஸ் இன் தலைவனாக இல்லாமல் சித்தார்த்தின் அப்பாவாக தன்னை போலவே இருக்கும் இன்னொரு பெற்றோரிடம் பேசி இருக்கிரான் என்று தான் சிவா -க்கு தோன்றியது.

வருண் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ரித்திகாவின் பெற்றோர்களின் மனதை தொட்டது. தங்களுடைய மகளுக்காக ஒரு சிறு குழந்தையின் மீது போய் கோபப்படும் அளவிற்கு அவர்கள் மெச்சூரிட்டி இல்லாத ஆட்கள் கிடையாது என்பதால் சித்தார்த்தையும், வருணையும், அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

சுதாகர்: “மிஸ்டர் வருண், நாங்க ரெண்டு பேருமே ஸ்கூல்ல வேலை பண்ணவங்க தான். குழந்தைங்க எப்படி இருப்பாங்கன்னு எங்களுக்கு தெரியும். சித்தார்த் எங்க பொண்ணு மேல எவ்ளோ பாசம் வச்சு இருந்த அப்படி பண்ணி இருப்பான்னு எங்களால புரிஞ்சுக்க முடியுது. அந்த சின்ன பையனுக்கு குத்தம் சொல்றதுக்கு இல்ல.

ரித்திகாவுக்கு உங்க பையன் ரொம்ப பிடிக்கும். உங்க பையன பத்தி எங்க கிட்ட நிறைய சொல்லி இருக்கா. அவ அப்படி தான். எந்த குழந்தைங்க கிட்டயும் டீச்சர் மாதிரியே நடந்துக்க மாட்டா. ஈசியா ஃபிரண்ட் ஆகிடுவா. அதனால எல்லா குழந்தைகளுக்கும் அவளை பிடிக்கும். இதுல நீங்க மன்னிப்பு கேக்குறதுக்கு எதுவும் இல்ல. அவள அப்படியே விடாம நீங்க இங்க கூட்டிட்டு வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கீங்க. அதுக்கு நாங்க தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும். ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் வருண்." என்றார்.

ஏதோ ஒரு வேகத்தில் முன் இவர்களிடம் பேச வந்து பேசி விட்டான். ஆனால் சுதாகர் பேசிய பின் அவனுக்கு அவரிடம் என்ன பதில் பேச வேண்டும் என்று தெரியவில்லை. அதனால் பதிலுக்கு ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு அங்கே இருந்து நகர்ந்தான் வருண்.

அது வரை சிவாவின் கையை பிடித்து கொண்டு அவர்கள் பேசுவதை கவனித்து கொண்டு இருந்த சித்தார்த், ரித்திகாவின் பெற்றோர்களின் அருகே சென்றான்.

ரேவதியின் அருகே வந்த சித்தார்த், அவளுடைய புடவையை பிடித்தபடி நின்று கொண்டு அவளுடைய முகத்தை உற்று பார்த்தான். ரித்திகா அச்சு அசலாக ரேவதியை போலவே இருந்ததால் ரேவதியை பார்த்தவுடனே அவளின் முகத்தில் ரித்திகாவின் சாயல் இருப்பதை கவனித்தான். அவனுடைய பிஞ்சு முகம் அழுது அழுது சிவந்திருந்தது. அவனுடைய நெற்றியில் வைக்கப்பட்டிருந்த திருநீர் ஒரு பக்கமாக பாதி அழிந்து இன்னொரு பக்கம் இழுத்த படி இருந்தது.

ஏனோ தெரியவில்லை சித்தார்த்தை பார்த்தவுடனே ரேவதிக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது. அவன் இருந்த நிலையை பார்த்தாலே ரித்திகாவை நினைத்து அவன் எவ்வளவு கவலை பட்டு இருக்கிறான் என்று ரேவதியால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த குழந்தைகளின் பாசம் தான் எவ்வளவு கள்ளம், கபடம் அற்றது என்று நினைத்த ரேவதி, சித்தார்த்தை தூக்கி தன் மடியில் அமர்த்தி வைத்து கொண்டாள்.

அதை கவனித்த சிவா, வேறு பக்கம் திரும்பி எதையோ பார்த்து கொண்டு இருந்த வருணை அழைத்து சித்தார்த்தையும், ரேவதியையும், காண்பித்தான். வருணிற்கு அந்த காட்சி பேரதிர்ச்சியாக இருந்தது. சித்தார்த் தன்னுடைய வீட்டிலேயே தன்னுடன் இருக்கும் அவனுடைய சொந்த குடும்பத்தினர் இடமே இன்னும் நெருங்கி பழகி இருக்காத நிலையில்.. இன்று தான் பார்த்த ஒருவரிடம் எப்படி அவன் இப்படி ஒட்டி கொண்டு இருக்கிறான் என்று அவனுக்கு புரியவில்லை.

இந்த காட்சியை மட்டும் அவன் நேரில் பார்க்காமல் இருந்தால் இப்படி நடந்தது என்று யாராவது அவனிடம் சத்தியம் செய்து சொல்லி இருந்தால் கூட அவன் நம்பி இருக்க மாட்டான். ரித்திகா, சித்தார்த்தின் வாழ்க்கையில் வந்ததில் இருந்து அவனிடம் நிறைய மாற்றங்கள் இருப்பதை அவன் இந்த கனம் உணர்ந்தான். ஆனால் இது நல்லதுக்கா, இல்லை கெட்டதுக்கா, என்று தான் அவனுக்கு புரியவில்லை.

- நேசம் தொடரும்.

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 34
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.