Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 28

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 28

by Thenaruvi Tamil Novels

 அத்தியாயம் 28 

மூன்று நாட்களுக்கு பிறகு…

தான் குணமடைந்த உடன் மூன்று நாட்களுக்கு முன்பு ஆகாஷுடன் வெளியில் கிளம்பி சென்று இருந்த அர்ஜுன் இன்னும் வீடு திரும்பி இருக்கவில்லை. 

அவனுடன் சென்றவர்கள் பற்றியோ, அவன் எங்கே இருக்கிறான் என்பது பற்றியோ வீட்டில் உள்ள யாருக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இவர்களால் அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

அதனால் அனைவரும் பதட்டத்துடன் ஆகாஷ் மற்றும் அர்ஜுன் இருவரும் நல்லபடியாக திரும்பி வந்து விட வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தார்கள். 

அர்ஜுனின் அறையில் உள்ள சோஃபாவில் அமர்ந்திருந்த தேன்மொழி,

ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.

அவள் மடியில் படுத்திருந்த ஆருத்ரா, 

“மம்மி.. டாடி ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்ப தானே நார்மலானாரு…

நான் உங்க கூடவும் அவர் கூடையும் சேர்ந்து எங்கையாவது ட்ரிப் போலாமான்னு பிளான் பண்ணேன். 

அத பத்தி அவர் கிட்ட பேசலாம்னு நினைக்கிறதுக்குள்ள அவர் மறுபடியும் எங்கேயோ கிளம்பி போயிட்டாரு. 

டாடி இங்கிருந்து போய் 3 டேஸ் ஆகுது. 

இன்னும் ஏன் அவர் திரும்பி வரல? 

அவர் எப்ப வருவாரு.. உங்க கிட்ட ஏதாவது சொன்னாரா? 

டாடி உங்களுக்கு கால் பண்ணா, அவர என் கிட்ட பேச சொல்லுங்க..

நான் அவரை சீக்கிரம் வீட்டுக்கு வர சொல்றேன்.” என்று சுருங்கிய முகத்துடன் சொன்னாள்‌.

தன் தந்தையை பிரிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டதால் அந்த குழந்தை ஏக்கத்தில் தவிப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. 

அவளுடைய அப்பா அவளது சிறு வயதிலேயே இறந்துவிட்டார். 

அப்போதெல்லாம் இதே போல அவளும் தன் அம்மாவிடம்,

“அப்பா எங்கம்மா போனாரு? 

அவர் எப்ப வருவாரு? நான் அவரை ரொம்ப மிஸ் பண்றேன். 

ப்ளீஸ் எனக்காக அவர சீக்கிரம் வர சொல்லுங்க..!!” என்று சொல்லி அழுவாள். 

உடனே விஜயா கண்ணீருடன் “உங்க அப்பா நம்ப எல்லாரையும் விட்டுட்டு சாமி கிட்ட போயிட்டாரு

மா.

இனிமே அவர் திரும்பி வர மாட்டாரு. 

இந்த வாழ்க்கையை அவர் இல்லாம நம்ம வாழைப்பழகிக்கணும். 

உனக்கு அம்மா நான் இருக்கேன்.

உன்னையும், தம்பியையும் நான் பார்த்துக்கிறேன்.” என்று சொல்லி அவளை அணைத்துக் கொள்வாள். 

அதை இப்போது நினைத்து பார்த்த தேன்மொழியின் கண்கள் கலங்கியது. 

ஆனால் தன் மடியில் ஆருத்ரா படுத்திருந்ததால் அவள் அழுவதை இவள் பார்த்து வருத்தப்படக் கூடாது என்று நினைத்து, உடனே அவளுக்கு தெரியாமல் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். 

தான் கேட்ட கேள்விக்கு தன் அம்மா பதில் சொல்லாததால் மீண்டும் ஆருத்ரா அவள் முகத்தை திரும்பிப் பார்த்து, 

“என்ன மம்மி ஏன் சைலன்ட்டா இருக்கீங்க..??

டாடி எப்ப வருவாருன்னு உங்களுக்கும் தெரியாதா?” என்று உடைந்த குரலில் கேட்க, 

அவள் விட்டால் அழுது விடுவேன் என்ற நிலையில் பேசும்போது இவளுக்கு அவளை என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை. 

“அவர் எங்க போனாருன்னு எனக்கே தெரியாது பாப்பா. 

இதுல அவர் எப்ப வருவாருன்னு நான் உன் கிட்ட என்ன சொல்றது? 

ஏன் அர்ஜூன் இப்படி எல்லாம் பண்றீங்க? 

உங்களுக்கு என்ன பத்தின கவலை எல்லாம் இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும். 

ஆனா நீங்க உங்க குழந்தைகள பத்தி கூட யோசிக்க மாட்டீங்களா? 

இந்த வீட்ல உடம்பு சரியில்லாத வயசானவங்க எல்லாம் இருக்காங்க. 

திடீர்னு உங்களை காணோமேன்னு எல்லாரும் உங்களை நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்காங்க..

இத பத்தி எல்லாம் கொஞ்சம் கூட யோசிச்சு பாக்க மாட்டீங்களா நீங்க? 

ஆகாஷையும் உங்க கூட கூட்டிட்டு போய்ட்டீங்க..

உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சுன்னு இப்ப வரைக்கும் யாருக்கும் தெரியல..

இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாவே இல்ல..

ஒருவேளை நிஜமாவே நான் உங்களை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருந்தா, 

நீங்க இப்படி சொல்லாம கொள்ளாம எங்கயோ காணாம போயிட்டா என்னால எப்படி நீங்க எல்லாம் இருக்க முடியும்? 

நான் உங்களை மிஸ் பண்ண மாட்டேனா…??” என்று தனக்குள் எங்கேயோ இருக்கும் அர்ஜுனுடன் பேசிக் கொண்டு இருந்த தேன்மொழிக்கு ஆருத்ரா கேட்ட கேள்வி ஞாபகம் வர, 

“உங்க அப்பா கண்டிப்பா இன்னைக்கு திரும்ப வந்துருவாரு.

நீ ஃபீல் பண்ணாத! 

பட் அவர் வந்த உடனே நீ என் சார்பாகவும் அவர் கிட்ட சொல்லாம போனதுக்காக சண்டை போடணும் ஓகேவா?” என்று கேட்டாள்.

கட்டிலில் அமர்ந்து அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டு இருந்த சித்தார்த் ஆருத்ரா அவளுக்கு பதில் சொல்வதற்குள் ‌ முந்திக் கொண்டு,

“வேற யாரும் டாடி கிட்ட எதுவும் கேட்கறாங்களோ இல்லையோ..

நான் கண்டிப்பா அவர் கூட சண்டை போடுவேன் மம்மி. 

எப்படி அவர் நம்ம எல்லார் கிட்டயும் சொல்லாம இப்படி நம்மள ஃபீல் பண்ணி வச்சுட்டு இங்க இருந்து போகலாம்?

அவருக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல.” என்றான். 

அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழிக்கு அப்படியே சித்தார்த்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாராட்ட வேண்டும் போல இருந்தது. 

இருப்பினும் ஆருத்ரா தன் மடியில் படுத்திருந்ததால் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்த தேன்மொழி,

“யாரு சாமி நீ! அப்படியே என் மனசுல இருந்ததை கரெக்ட்டா சொல்ற..

உங்க அப்பா சரியான சிடு மூஞ்சி. 

அந்த டென்ஷன் பார்ட்டி கிட்ட நான் ‌ஏதாவது பேசினா உடனே அவன் காண்டாகி என்னை கடிச்சு குதறிடுவான். 

நீதான் டா அவனுக்கு கரெக்டான ஆளு..!!

இதைத் தான் அப்பனுக்கு பையன் தப்பாம பிறக்கிறதுன்னு சொல்லுவாங்க போல..!!” என்று நினைத்து மகிழ்ந்தாள். 

ஆனால் உள்ளுக்குள் அவளுக்கும் அர்ஜூனுக்கு என்ன ஆனது?

என்று யோசிக்கும்போது கொஞ்சம் பயமாக தான் இருந்தது.

இப்போது தான் சில நொடிகளுக்கு முன் ‌“நல்லவேளை நான் உங்களை லவ் பண்ணல. 

ஒருவேள எனக்கு உங்க மேல பீன்ஸ் இருந்துச்சுன்னா,

நீங்க திடீர்னு இப்படி காணாம போனா எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்து இருக்கும் தெரியுமா?” 

என்று யோசித்துக் கொண்டிருந்த தேன்மொழி இப்போது தன்னையும் அறியாமல் அவனை நினைத்து வருத்தப்பட்டாள். 

அவள் இங்கே வந்ததில் இருந்து அர்ஜுன் கோமாவில் இருந்ததால், 

அவள் தனக்கு அமைதியும் மனநிம்மதியும் வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் இந்த அறையில் தான் தனது பெரும்பாலான நேரத்தை செலவிடுவாள். 

அப்போது வெகு நேரமாக பல நாட்களாக அர்ஜுனின் முகத்தை அவளுக்கு பார்த்து பழகி இருந்தது. 

அவள் கழுத்தில் தொங்கும் தாலி வேறு ஏற்கனவே அவன் சொல்லிவிட்டு சென்றதைப் போல, 

அவன் அவளது கணவன் என்று அவளுக்கு நொடிக்கு நூறு முறை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது. 

அதனால் அவனைப் பற்றி யோசித்து அவனை அவள் மனதால் தேடாமல் இருக்க முடியவில்லை. 

பின் சாப்பிடும் நேரம் ஆகிவிட்டதை கவனித்த தேன்மொழி, 

“சரி வாங்க நம்ம போய் சாப்பிடலாம்.

உங்க அப்பா வரும்போது வரட்டும்.” என்று சொல்லி ஆருத்ராவை எழுப்பி அமர வைத்து சித்தார்த்தின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். 

“நீங்க தான் டாடி இன்னைக்கு வந்திருவாருன்னு சொன்னீங்க இல்ல மம்மி..

அப்புறம் என்ன? நான் அவருக்காக வெயிட் பண்றேன். 

டாடி வந்தா தான் நான் சாப்பிடுவேன்.” என்று ஆருத்ரா அடம் பிடிக்க, 

“அப்படி எல்லாம் சொல்லக் கூடாது ஆரு. 

நான் உங்க டாடி இன்னைக்கி வந்துருவாருன்னு மட்டும் தான் சொன்னேன்..

எப்ப வருவாருன்னு சொல்லல இல்ல.. 

இப்ப தான் ஆப்டர்நூன் ‌ ஆகுது. 

உங்க டாடி நைட்டு கூட வருவாரு. 

அதுக்காக நீ நைட் வரைக்கும் சாப்பிடாம இருப்பியா?

மொதல்ல வந்து சாப்பிடு.”  என்ற தேன்மொழி அவளை சமாதானப்படுத்தியபடி எப்படியோ டைனிங் ஏரியா வரை அழைத்து சென்று விட்டாள். 

அப்போதும் ஆருத்ரா “இல்ல வேண்டாம். நான் டாடிய பாக்காம சாப்பிட மாட்டேன்.” என்று தொடர்ந்து அதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.

அப்போது தனது குழந்தைகளின் பால் பாட்டிலை எடுத்துக் கொண்டு அங்கே அதை வாஷ் செய்வதற்காக அங்கே வந்த ஜனனி, 

சித்தார்த் மற்றும் ஆருத்ராவுடன் தேன்மொழி தனியாக நின்று அவர்களை சாப்பிட வைப்பதற்காக போராடிக் கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு, 

“தேன்மொழி அண்ணி நெஜமாவே ரொம்ப நல்லவங்க. 

நாங்க செஞ்ச வேலைக்கு அவங்க எங்க மேல இப்ப வரைக்கும் எவ்வளவு கோவமா இருக்காங்கன்னு எனக்கு நல்லா தெரியும்.

ஆனா அவங்க அர்ஜுன் அண்ணா உட்பட அதுக்காக எங்க எல்லார் மேலையும் கோவமா இருந்தா கூட,

சித்தார்த்தையும் ஆருத்ராவையும் அவங்க சொந்த குழந்தைங்க மாதிரி நல்லா பாத்துக்குறாங்க.

இவங்க இப்படி இருக்கணும்னு தான் நாங்க எதிர்பார்த்தோம். 

இதை அண்ணா பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாரு. 

ஆனா அவர் எங்க போனாருன்னு தெரியலையே..

அவர் சீக்கிரம் வந்துட்டா நல்லா இருக்கும்.” என்று நினைத்தபடி அவர்கள் அருகில் சென்றாள்.

ஜனனியை பார்த்தவுடன் ஆருத்ரா ஓடிச் சென்று அவள் கால்களை கட்டிபிடித்து,

“எனக்கு இப்பவே டாடிய பாக்கணும்! 

ப்ளீஸ் அத்தை நீங்களாவது  என்ன அவர் கிட்ட கூட்டிட்டு போங்க..

இல்லைனா நான் வர சொன்னேன்னு சொல்லி அவரை இங்க வர சொல்லுங்க.” என்று சொல்ல, 

“அண்ணா சீக்கிரம் வந்துருவாரு. அதுக்காக நீ சாப்பிடுறதுக்கெல்லாம் இப்படி அடம் பிடிக்கலாமா? 

இரு அவர் வந்த உடனே நீ நான் இப்படி எல்லாம் அடம் பண்னேன்னு அவர் கிட்ட சொல்லி வைக்கிறேன்.” என்றாள் ஜனனி.

உடனே ஆருத்ரா தன் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, அப்போது வெளியில் மெயின் கேட்டில் செக்யூரிட்டி டீமில் உள்ள ஒருவன் பரபரப்பாக உள்ளே ஓடி வந்தான். 

அவனைப் பார்த்தவுடன் பதட்டமடைந்த தேன்மொழி,

“என்ன இவன் இப்படி ஓடி வர்றான்?

ஒருவேளை அர்ஜூனை பத்தி ஏதாவது சொல்லப்போறானா? 

ஐயோ கடவுளே அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே..!!” என்று நினைத்து பயத்துடன் அவனைப் பார்க்க,

அவன் அவர்கள் அருகில் வந்து பொதுவாக அனைவரையும் பார்த்து,

“அர்ஜுன் சார் வந்துட்டாரு. 

கார்டன் ஏரியா பக்கம் போயிருக்காரு. 

நீங்க எல்லாரும் அவர நினைச்சு பயத்துல இருப்பீங்கன்னு தெரியும்.

அதான் அவர் வந்ததை முதல்ல வீட்ல இருக்குறவங்க கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.

நான் போய் அவரை வெல்கம் பண்றதுக்காக என்ட்ரன்ஸ்ல நிற்கிறேன் மேடம்.” என்ற அந்த காவலாளி உடனே வெளியில் சென்று விட்டான். 

தன் அப்பா கார்டன் ஏரியாவில் இருப்பதால் “நான் போய் அவர பாக்குறேன்.” என்ற ஆருத்ரா வேகமாக அங்கே இருந்து ஓட,

சித்தார்த்தும் உடனே “நானும் போறேன்.” என்றான்.‌ 

அவர்களை பிடித்து தடுத்த ஜனனி “அங்க தான் சியா அண்ணியோட கல்லறை இருக்கு.

இப்ப தேவை இல்லாம இவங்க அதை பார்த்துட்டு அது என்ன ஏதுன்னு அண்ணா கிட்ட கேட்டா அவர் ரொம்ப எமோஷனல் ஆயிடுவாரு.” என்று நினைத்து,

அவளையும் சித்தார்த்தையும் பார்த்து “நீங்க யாரும் எங்கேயும் போக வேண்டாம். 

இவ்வளவு நேரம் அண்ணா எப்ப வீட்டுக்கு வருவார் என்று தானே கேட்டுட்டு இருந்தீங்க..

அதான் அவர் வந்துட்டாரே..

நீங்க போய் பாட்டி கிட்டயும், தாத்தா கிட்டயும் டாடி வந்ததை சொல்லிட்டு வாங்க. 

அதுக்குள்ள அவர் இங்க வந்துருவாரு.” என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டாள். 

“என் பேபிஸ் ரெண்டு பேரும் அழுதுட்டு இருந்தாங்க. 

அண்ணா வர்றத்துக்குள்ள நான் போய் அவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னு பாத்துட்டு வந்துடறேன் அண்ணி.

அவர் உள்ள வந்த உடனே எனக்கு இன்டர்காம்ல கால் பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டு ஜனனி சென்றுவிட, 

மூன்று நாட்களுக்கு பிறகு அர்ஜுனை பார்க்கும் ஆர்வத்தில் வாசலை எட்டிப் பார்த்தாள் தேன்மொழி.

– மீண்டும் வருவாள்.. ❤️

You may also like

Leave a Comment

About Me

Featured