Chapter 113

Bhavani Varun

Member
Jan 23, 2025
118
0
16
கௌதம் கவிதாவின் நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிந்தது. சனந்தாவின் கைபேசி ஒலிக்கவும் அவள் மெதுவாக நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தாள். அது சூர்யாவிடம் ஃபோன் இருந்து வந்திருந்தது, அதனால் சனந்தா சென்றவுடன் விக்ரமும் அவளை பின்தொடர்ந்து சென்றான் அவள் அறியாமல்.

பின் சனந்தா ஏதோ முக்கியமாகவும் சீரியஸாகவும் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்த விக்ரம் அவளுக்கு ஒரு ஐந்தடி தூரத்திலேயே மெதுவாக நடந்து சென்றான் அவளின் பின்னால்.

“இல்ல இல்ல சூர்யா நான் என்ன சொல்றத முதல்ல நீங்க கேளுங்க ப்ளீஸ்” என்று சனந்தா கூறவும், “இல்ல சனா என்னுடைய விருப்பத்தை நான் சொல்லிடுறேன் அதுக்கப்புறம் நீ என்ன பதில் சொன்னாலும் நான் கேட்க ரெடி… நான் என்னன்னு சொல்லாமலேயே நீ எப்படி….” என்று சூர்யா பேசுவதற்குள்,

“இல்ல சூர்யா நீங்க உங்க விருப்பத்தை என்கிட்ட சொல்லவே சொல்லாதீங்கன்னு தான் நான் உங்க கிட்ட சொல்ல முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்….. ப்ளீஸ் சொல்லாதீங்க…. என் லைஃப்ல இதுவரைக்கும் எனக்கு அவர் மட்டும் தான் ப்ரொபோஸ் பண்ணி இருக்காரு எனக்கு அதுக்கப்புறம் வேற யார் கிட்டயுமே அந்த வார்த்தைகளை கேட்க விருப்பம் இல்ல…. கேட்கவும் மாட்டேன் என் வாழ் நாள்ல அதனால தான் நான் முதல்லயே தடுத்துட்டேன்… நீங்க உங்க விருப்பத்தை என்கிட்ட சொல்லாதீங்க ப்ளீஸ்” என்று சனந்தா கூறினாள்.

அதைக் கேட்கவும் விக்ரமுக்கு என்ன பேசுகிறாள் என்பது நன்றாகவே புரிந்தது. ஒரு புறம் சூர்யா அவளிடம் அவனுடைய விருப்பத்தை கூறுவதை நினைத்து கோவமாக இருந்தாலும் மறுபுறம் அவளுடைய விக்ரம் கூறியது தான்… அவளுக்கு வேற யாரும் அந்த வார்த்தைகளை கூறவும் கூடாது என்பதில் அவள் தெளிவாக இருப்பதே அவனுக்கு இறக்கை கட்டி பறப்பது போல் உணர்ந்தான்.

“என்ன சனா இப்படி சொல்லிட்ட…. எப்படியும் ரொம்ப நாள் ஆயிருச்சுல அதெல்லாம் மறந்திருப்பேன்னு நினைச்சேன்” என்று சூர்யா தயக்கத்துடன் பேச,

“ஒரு வருஷம் ஆயிடுச்சு தான் சூர்யா இல்லன்னு நான் சொல்லல…. ஆனா இந்த ஒரு வருஷத்துல தான் அவர் கூட இருந்த நாட்களை விட இந்த நாட்கள்ல தான் நான் நிறைய அவர பத்தி யோசிச்சு இருக்கேன்… இன்னும் சொல்லப் போனா அவர பத்தி நிறைய தெரிஞ்சுகிட்டேன்… அவருக்கு கோபம் வரும்னு எனக்கு தெரியும்… ஆனா, அந்த கோவம் என் முன்னாடி ஒன்னுமே இல்லாம போயிடும்ன்றது கூட நான் தெரிஞ்சுகிட்டேன்”….

“அவருக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்??? என்னை எந்த அளவுக்கு அவர் நேசிக்கிறாரு??? எந்த அளவுக்கு அவருக்கு நான் முக்கியம் என்றது எல்லாமே எனக்கு இந்த ஒரு வருஷத்துல தான் தெரிஞ்சுது சூர்யா” என்று சனந்தா கூறவும், விக்ரமுக்கு சனந்தாவை அள்ளிக் கொண்டு அவனுடைய காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை மனதில் அடக்கி வைத்துக் கொண்டு அவள் என்ன பேசுகிறாள் என்பதை கேட்பதிலேயே இருந்தான்.

சனந்தாவின் கால்கள் அவளை அறியாமலேயே நடந்து கொண்டே போனது. “புரியுது சனா இதுக்கு மேல நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணா அது எனக்கும் அசிங்கம் தான்…. அட்லீஸ்ட் பி.ஹச்.டி முடிக்கிற வரைக்கும் நான் இதை சொல்லாம இருக்கணும்னு தான் நினைச்சேன்…. ஆனா, என்னவோ தெரியல எனக்கு உன்கிட்ட பேசணும்னு தோணுச்சுனு தான் நான் ஃபோன் பண்ணேன்… ரொம்ப சாரி உன்னை கஷ்டப்படுத்திருந்தா” என்று சூர்யா கூறவும், “ம்ம்… நீங்க எப்பவுமே எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட் தான் அதுல மாற்றமே இல்லை” என்று மட்டும் சனந்தா கூறி ஃபோனை வைத்தாள்.

அவள் பேசிக் கொண்டே கால்கள் தன்னாலேயே விக்ரம் வீட்டின் மாடியில் வந்து நின்று கொண்டிருந்ததை அப்பொழுது தான் உணர்ந்தாள். சனந்தா ஃபோன் பேசி முடித்து வைத்த பின் தான் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அறியவும் சனந்தா அவளுக்குள் கொட்டிக் கொண்டு, “என்னுடைய கால் கூட இந்த ஊருக்கு வந்தா தானா இங்க வந்து நிக்குது பாரு” என்று நினைத்துக் கொண்டு, அவள் எப்பொழுதும் இரவில் வந்து நின்று அங்கே ரசிப்பது வழக்கம் அல்லவா அதே போல் நின்று ரசித்து கொண்டு இருக்கவும்… விக்ரம் இதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவளிடம் சென்று பின் இருந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

ஒரு நிமிஷம் திகைத்து சனந்தா ஆஆ!!!! என்று கத்தவும் விக்ரம் அவள் காதில் சென்று, “நான் தான் பூனை குட்டி” என்று கூறினான். அவனது நெருக்கமும் அவனது தீண்டலும் அவனது குரலும் அதுவும் காதோரம் உரசிய மீசை, இவை அனைத்தும் அவளுக்கு பாரத்தை உண்டாக்க கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது.

அவள் விக்ரமின் பக்கம் திரும்பி அவனை இறுக்கமாக அணைத்து கொண்டு, அழுது அழுது தீர்த்தாள். அவள் அழுது கொண்டிருந்த நேரம் விக்ரம் எதுவும் பேசாமல் அவளது முதுகை வருடி கொடுத்துக் கொண்டு பூனைக்குட்டி என்று மட்டுமே கூறினான். அதற்கும் அவளிடம் எந்த பதிலும் இல்லாமல் அழுது தீர்த்தாள்.

“இவ்வளவு நேரம் அழுதா உடம்புக்கு ஆகாதுடா நாளைக்கு கல்யாணம் வேற இருக்குல்ல சிரிச்ச முகத்தோட இருக்கணுமா இல்லையா இப்படி இருந்தா எப்படி??” என்று விக்ரம் கூறவும், சுமார் பத்து நிமிடங்களாக அவனை இறுக்கி அணைத்துக் கொண்டு அழுது மட்டுமே இருந்தாள் சனந்தா.

அவள் அழுததால் விம்ம ஆரம்பிக்கவும் விக்ரம் சனந்தாவை விலக்கிவிட்டு, “உனக்கு தண்ணி கொண்டு வரேன்” என்று விக்ரம் போகவும் சனந்தா விக்ரமின் கையை பிடித்து மறுப்பாக தலை அசைத்து, “எனக்கு…. எது… எதுவும் வேண்டாம்” என்றும் சனந்தா கூறவும் சரி என்று சனந்தாவை அழைத்துக் கொண்டு அவர்கள் எப்பொழுதும் வழக்கமாக உட்காரும் இடத்தில் கீழே சுவற்றில் சாய்ந்து கொண்டு அமர்ந்து கொண்டனர்.

இதற்கிடையில் விக்ரம் சரவணனுக்கு தான் சனந்தாவிடம் பேசுவதாகவும் மாடியில் இருப்பதாகவும் கூறிவிட்டு யாரும் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதையும் தெரிவித்துவிட்டான். சரவணனோ இதை அனைவருக்கும் தெரிவிக்கவும் இந்த கல்யாணதினால் இன்னொரு சந்தோஷமான விஷயமும் நடந்தால் எங்களுக்கு அதுவே சந்தோஷம் தான் என்று வள்ளியும் லக்ஷ்மியும் கூறினர்.

சனந்தா அவளை சமாதானப்படுத்தியும் ஆசுவாசப்படுத்தி கொண்டு பின்னர் விக்ரமை பார்த்து அவனின் கன்னங்களை வருடி, “ஏன் இப்படி டல்லாயிட்டீங்க??” என்று அக்கறையுடன் கேட்க, இம்முறை கண்ணீர் விக்ரமின் கண்களில்.

“இவ்வளவு நேரம் நான் அழுதது போதாதா இப்ப நீங்களா” என்று சனந்தா கேட்க, “நீ என்னை திட்டுவ, அப்படி இல்லன்னா ஏன் இப்படி பண்ணனாவது வந்து கேட்ப அது தான் உன்னோட முதல் பேச்சா என்கிட்ட இருக்கும்னு நினைச்சேன் சனந்தா… ஆனா, நீ அதெல்லாம் எதுவுமே இல்லாம என்னை பத்தி கேக்குற டா…. எனக்கு அது எப்படி இருக்கு தெரியுமா…. உன்னை போய் கஷ்டப்படுத்திட்டேனேன்னு உடைஞ்சு அழுகணும் போல தான் இருக்கு” என்று விக்ரம் கூறினான்.

அவளது கோபம் வெறுப்பு இத்தனை நாட்கள் பேசாமல் இருந்ததுக்கான காரணம் எதையும் அவள் பொருட்படுத்தாமல் தான் எப்படி இருக்கிறேன் என்பதே அவளின் முதல் கேள்வியாக இருந்ததால் விக்ரமுக்கு அளவில்லா மகிழ்ச்சி தான்.

“எப்படி இருந்தாலும் நான் உங்க பூனைக்குட்டி தான் விக்ரம் அதுல மாற்றமே கிடையாது” என்று சனந்தா கூறவும், விக்ரம் அவளை அள்ளி எடுத்து அவன் மடியில் உட்கார வைத்துக் கொண்டு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“இவ்வளவு ஆசை வெச்சிருக்கல பூனைக்குட்டி… அப்போ ஏன் என்கிட்ட பேசவே இல்ல??” என்று விக்ரம் மிகவும் வருத்தத்துடன் கேட்டான்.

சனந்தா விக்ரமின் இரு கன்னங்களை அவளின் இரு கைகளையும் வைத்து பிடித்து, “அதுக்கு என்கிட்ட பதில் இல்லப்பா… ஏன் நான் அப்படி இருந்தன்னு கூட எனக்கு தெரியல…. ஆனா, விகாஷ் சொன்னது உண்மை தான் எனக்கு என்னை எப்படி சமாதானப்படுத்திக்கனும்னு தெரியல…. நீங்க வந்து பேசினாலே நான் சரியாயிருவேன்னு சொன்னான்… இப்ப அந்த மாதிரி தான் நடந்திருக்கு…. உங்கள பார்த்ததே போதும் நான் கொஞ்சம் கொஞ்சமா சரியாக ஆரம்பிச்சேன்” என்று சனந்தா கூறினாள்.

“அது உண்மை தான் டா நான் ரொம்ப டல்லா இருந்தாலும் கூட உன்னை பார்த்தாலே அந்த குழப்பம் எல்லாமே எனக்கு சரியான மாதிரி தோணும்… இப்போ நீயும் அப்படித் தான் இருக்க… என்னை பார்த்ததுமே நீ சரியாக ஆரம்பிச்சுட்டேன்னு தெரிஞ்ச உடனே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா’ என்று விக்ரம் கூறினான்.

“ஆமா நீங்க எப்படி இங்க வந்தீங்க??” என்று சனந்தா அப்பொழுது தான் அவள் உணர்ந்து கேட்க, “உனக்கு ஃபோன் வந்ததுன்னு நீ கிளம்பிட்ட… அதுல சூர்யான்னு வேற பேர நான் பார்த்துட்டேன்… அப்புறம் அதுக்கு மேல நான் எப்படி உன்னை தனியா விடுவேன் அதான் வந்தேன்…. ஆனா, பார்த்தா இங்க வேற ஏதோ நடக்குதே” என்று விக்ரம் போலியாக முறைத்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்ளவும், “இது மட்டும் இன்னும் நீங்க மாத்திக்கவே இல்லல” என்று சனந்தா கேட்கவும், “பேச்ச மாத்தாத டி” என்று விக்ரம் முகத்தை திருப்பிக் கொண்டே கூறினான்.

“பேச்செல்லாம் நான் ஒன்னும் மாத்தல….. அன்னிக்கும் அப்படித் தான் சூர்யாவை பார்த்து மூஞ்சி அப்படி மாறிடுச்சு…. கார்ல போகும் போது சூர்யா ஃபோன் பண்ணதுமே மூஞ்சு மாறிடுச்சு” என்று சனந்தா கூறிக் கொண்டு இருக்கவும், “அப்ப எல்லாம் உனக்கு தெரிஞ்சி தான் நீ வேணும்னு என்னை வெறுப்பேத்துனியா” என்று விக்ரம் கேட்க, “நான் எல்லாம் வெறுப்பேத்தவே வேணாம் சும்மா பேசினாலே போதுமே உங்களுக்கு” என்று சனந்தா கூறினாள்.

“அதெல்லாம் இருக்கட்டும் அவன் கிட்ட என்ன சொன்ன…. “அந்த வார்த்தை அவர் மட்டும் தான் சொல்லணும்னு” சொன்ன எந்த வார்த்தை சனந்தா” என்று விக்ரம் எதுவும் புரியாதது போல் கேட்கவும், “எல்லாம் ஒட்டு கேட்டு வந்தீங்களா??” என்று சனந்தா அதிர்ச்சியாக கேட்க, “ஒட்டு கேட்டேனோ இட்டு கேட்டேனோ மொத்தத்துல கேட்டனா இல்லையா பதில் சொல்லுடி” என்று விக்ரம் கேட்கவும், “அது என்னோட அவர் மட்டும் தான் சொல்லணும் அது அவர் சொல்லுவாரு உங்களுக்கு என்ன கவலை” என்று சனந்தா கூறினாள்.

“உங்களோட அவர் யாருங்க??” என்று விக்ரம் கேட்க, சனந்தா விக்ரமின் கண்ணின் ஓரம் இருக்கும் மச்சத்தில் முத்தமிட்டு அவன் கன்னங்களை ஆட்டிவிட்டு, “இது தான் என்னோட அவரு” என்று புன்னகையுடன் கூறினாள் சனந்தா.

“பூனைக்குட்டி நீ என்ன பண்றன்னு தெரியுதா…. இவ்வளவு நாள் கழிச்சு நம்ம ரெண்டு பேரும் பேசுறோம் அதுவும் நீ என் மேல உக்காந்துட்டு இருக்க…. இப்ப இந்த மாதிரி எல்லாம் பண்ணா என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது டி… அதை புரிஞ்சுக்கோ” என்று விக்ரம் கூறவும், அவன் கூறிய தோணியில் சனந்தா சிரித்து விட்டு அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல


எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: Bhavani Varun
Article Title: Chapter 113
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.