Chapter 112

Bhavani Varun

Member
Jan 23, 2025
118
0
16
சனந்தா மாடியில் இயற்கையை ரசித்துக் கொண்டு மேல் இருந்து கீழே அவள் தங்கி இருந்த அறையை நோக்கி பார்க்கவும் விக்ரம் அப்பொழுது தான் வந்து முகம் கை கால் கழுவி துடைத்துக் கொண்டிருக்க, சட்டென்று எதையோ உணர்ந்தவன் போல் மேலே பார்க்கவும் அங்கே சனந்தாவும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சனந்தா இங்கு வந்த முதல் நாள் இப்படித் தான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் அன்று பார்வைக்கான அர்த்தம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இன்றோ இருவரின் பார்வைக்கான அர்த்தம் இருவரும் அறிந்ததே. எவ்வளவு நேரம் நீடித்ததோ அப்பார்வை போட்டி.

“விக்ரம் டீ குடிக்க வாப்பா” என்று வள்ளி கொடுத்த குரலில் தான் இருவரும் மீண்டனர். சனந்தா முதலில் தன்னை ஆசுவாசபடுத்துக் கொண்டு முகத்தை மறுபுறம் திருப்பிக் கொள்ளவும் விக்ரம் இன்னும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் இன்னும் அவளை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது சனந்தா உணர்ந்து திரும்பி அவனை பார்க்கவும் விக்ரம் அவளை பார்த்து விரிவாக புன்னகைத்தான். எத்தனை நாட்கள் ஆனது அவனுடைய விரிவான புன்னகையை பார்த்து என்று அவனுடைய சிரிப்பை அவளையும் மீறி ரசித்து கொண்டிருந்தாள்.

“எவ்வளவு நேரம் பா கூப்பிடுறது” என்று வள்ளி வந்து விக்ரமின் கையில் டீக்கோப்பை கொடுக்கவும் சனந்தா சட்டென்று யாருக்கும் தெரியாதவாறு மாடியில் கீழே அமர்ந்து விட்டாள்.

அதை கண்டு விக்ரம் சிரித்து விட்டு, “இப்ப தான் வந்து டிஸ்டர்ப் பண்ணுவீங்களா?” என்று விக்ரம் கேட்க, “ஏன்டா நான் என்ன பண்ணேன்… காலையிலிருந்து வேலையா சுத்திட்டு இருக்கியேன்னு ஒரு டீ ஆவது குடின்னு கொடுத்தது தப்பா டா” என்று வள்ளி சலித்துக் கொள்ள, “உங்களுக்கு புரியாது வேலையை பாருங்க போங்க” என்று விக்ரம் கூறினான்.

சனந்தா மெதுவாக படிகளில் இருந்து இறங்கி யாரும் அறியாதவாறு சரவணன் வீட்டிற்குள் சென்று புகுந்து விட்டாள். சனந்தா அவளின் செய்கையை நினைத்து அவளே சிரித்துக் கொண்டிருந்தாள்.

அன்று இரவு அனைவரும் ஒன்றாக சேர்ந்து உணவருந்திவிட்டு சந்தோஷமா கலகலப்பாக பேசி கௌதமை ஒரு வழியாக்கி கலாய்த்துக் கொண்டிருந்தனர். இவை அனைத்தும் சனந்தா பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். அவ்வப்போது கௌதமை கிண்டல் செய்ய மட்டும் வாயைத் திறந்தாள்.

“சரி எல்லாரும் போய் தூங்குங்க காலையில எந்திரிச்சு கோயிலுக்கு போயிட்டு சாமி கும்பிட்டு வரணும்… சாயந்திரம் நாலு மணிக்கு எல்லாம் ரெடியா இருக்கணும்” என்று சந்திரசேகர் கூறவும், சரி என்று அனைவரும் உறங்க சென்றனர்.

விக்ரம் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டில் அனைவரையும் உறங்க அனுப்பிவிட்டு சரவணன் வீட்டிற்கு வரவும் சனந்தா எப்பவோ உறங்கி இருந்தாள்.

“ஏன் டா இவ்வளவு லேட்டாவா வருவ… அவளும் ரொம்ப நேரம் இங்க எங்க கூட உட்கார்ந்து பேசிட்டு இருந்தா அதுக்கு அப்புறம் நீ வர மாதிரி தெரியலன்னு தூங்கிட்டா” என்று சரவணன் கூறவும், “நான் மட்டும் என்னடா பண்றது வேலை இருந்துச்சு… அதெல்லாம் போக இப்ப கூட பாரு என்ன பண்றது எல்லாத்தையும் எடுத்து வெச்சுட்டு வந்தவங்க எல்லாருக்கும் எல்லாத்தையும் செட் பண்ணி கொடுத்துட்டு வரவே எனக்கு இவ்ளோ நேரம் ஆச்சுடா” என்று விக்ரம் கூறினான்.

“சரி விடு உள்ள தான் படுத்துட்டு இருக்கா அவ” என்று சரவணன் கூறவும், விக்ரம் உள்ளே சென்று சனந்தாவின் அருகே சென்று அமர்ந்து கொண்டு அவள் உறங்குவதே பார்த்துக் கொண்டிருந்தான் சிறிது நேரம். பின் அவளின் தலையை கோதிவிட்டு, “என்கிட்ட பேசுடி ரொம்ப கஷ்டமா இருக்கு…. என்கிட்ட பேசிட்டாலே போதும் வேற எதுவுமே வேணாம் பூனை குட்டி” என்று மெல்லிய குரலில் பேசிவிட்டு, குட் நைட் என்று கூறி அவளது நெற்றியில் முத்திரை பதித்து விட்டு சென்றான் விக்ரம். இது எதுவும் தெரியாமல் சிறு பிள்ளை போல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் சனந்தா.

மறுநாள் காலையில் விடியல் அனைவருக்கும் அழகாக இருந்தது. அனைவரும் சீக்கிரமே தயாராகி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு பிறகு அனைவரும் மாலை நிச்சயத்திற்கு தயாராகினர். என்ன தான் கௌதம் பலமுறை கவிதாவை சந்தித்து இருந்தாலும் அன்று தனக்கானவளாக போகும் நேரத்தில் சந்திப்பதே ஒரு தனி சந்தோஷம் தான். அன்று கோயிலில் அவளின் வருகைக்காகவே காத்துக் கொண்டிருந்தான் கௌதம்.

விக்ரம் சனந்தா வாங்கி கொடுத்த சட்டையை உடுத்திக் கொண்டு அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு கவிதாவின் சகோதரனாக பொறுப்பாக செய்து கொண்டிருந்தான். அனைவரும் கோயிலுக்கு ஒவ்வொருத்தராக சென்ற பின் சனந்தாவை விக்ரம் அழைத்து வருவதாக கூறியதும் அனைவரும் ஆமோதித்தனர்.

சனந்தா தயாராகி சரவணன் வீட்டிலிருந்து வெளியே வந்து விகாஷுக்கு ஃபோன் செய்து, “நான் ரெடி ஆயிட்டேன் டா… என்ன டா யாருமே இல்ல எல்லாரும் என்னை விட்டுட்டு போயிட்டீங்க… சரி நான் நடந்து வந்திடுறேன் கிட்ட தானே” என்று சனந்தா கூறவும், “இல்ல இல்ல விக்ரம் அத்தான் வண்டியோட வெளியில தான் நிப்பாரு பாரு அவர் கூட்டிட்டு வந்துருவாரு உன்ன” என்று கூறி சனந்தாவின் பதிலுக்கு காத்திராமல் ஃபோனை வைத்து விட்டான் விகாஷ், எங்கே அவளிடம் திட்டு வாங்கிடுவேனோ என்று நினைத்து.

ஒரு பக்கம் சனந்தாவுக்கு விக்ரமுடன் செல்வதில் உற்சாகமே ஆனாலும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவனுடன் செல்வதில் தயக்கமும் வெட்கமும் ஒட்டிக் கொண்டது தான். சனந்தா சரவணன் வீட்டில் இருந்து கதவைப் பூட்டுக் கொண்டு வெளியே தயக்கத்துடன் நடந்து வரவும், விக்ரம் வண்டியில் அமர்ந்து கொண்டு கண்ணாடி வழியாக அத்தயக்கத்தையும் அவள் புடவை கட்டிக் கொண்டு அழகாக வருவதையும் ரசித்துக் கொண்டிருந்தான்.

சனந்தா அருகில் நெருங்கி விட்டதை உணர்ந்து பார்த்து, ஏறு என்று விக்ரம் கூறவும் அவளும் பதில் எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்து கொண்டாள் சிறிது இடைவேளை விட்டு. அதை உணர்ந்த விக்ரம் வேண்டும் என்றே வண்டியை ஸ்டார்ட் செய்து சட்டென்று பிரேக் போட்டு ஆஃப் செய்து விடவும் சனந்தா பக்கத்திலிருந்து கம்பியை பிடித்து இருந்தவள் விக்ரம் அவ்வாறு செய்த உடன் விக்ரமனின் சட்டையை அவனது இடையில் இறுக்கமாக பிடித்து விட்டாள்.

சனந்தாவின் செய்கையை கண்டு விக்ரம் ரசித்தும் சிரித்தும் விட்டு, பின் அவள் புறம் முகத்தை திருப்பி போலாமா??? என்று கேட்கவும், அவள் ம்ம்ம… என்று மட்டும் கூறினாள். ஆனால் அவள் அவனின் சட்டையை பிடித்திருந்ததை மட்டும் விடவே இல்லை. ஒரு வருடம் கழித்து விக்ரமை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்கவும் சனந்தாவின் மனது பட்ட பாடு அவள் மட்டுமே அறிந்தது. ஒரு பக்கம் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி ஒரு பக்கம் கால் நடுக்கம் மறுபக்கம் அவளவனின் நெருக்கம் என அவளை துளைத்து எடுத்தது தான்.

இருவரும் ஒன்றாக கோவிலுக்குள் வந்தடையவும் அதை கண்ட அனைவருக்கும் சற்று நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுத்தது தான். சனந்தா இறங்கிவிட்டு எதுவும் கூறாமல் அமைதியாக வள்ளி மற்றும் லக்ஷ்மியுடம் சென்று ஏதேனும் வேலை இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டு அதற்கு உதவி கொண்டு இருந்தாள்.

அவ்வப்போது விக்ரமின் பார்வை தீண்டியதை அவள் உணராமல் இல்லை. சிறிது நேரத்தில் பெண் வீட்டார் வந்து விடவும் நிச்சயதாம்பூலம் சிறப்பாக முடிந்தது. கௌதமும் கவிதாவை ரசித்துக் கொண்டே இருந்தான். பின் அபிலாஷை படுத்தி எடுத்து விட்டான். “இப்படி ஃபோட்டோ எடுங்க அப்படி ஃபோட்டோ எடுங்க நாங்க ரெண்டு பேரும் இப்படி நிக்கிறோம்” என்று கௌதம் ஒவ்வொன்றாக கூறவும் அபிலாஷும் பொறுமையாக எடுத்துக் கொடுத்தான்.

“டேய் கௌதம் நான் டாக்டர்டா ஏன்டா இப்படி பண்ற” என்று அபிலாஷ் கேட்க, “சைட் பிசினஸா பண்ணுங்க பரவாயில்ல” என்று அனு அபிலாஷின் காலை வாரி விட்டாள். “அது சரி… வந்த புதுசுல வாயே இல்ல ஆனா இப்ப அவன் வாய மூட நல்லா வாய் வளர்த்து வெச்சிருக்க அனு” என்று சரவணன் கூறவும், “எல்லாம் அவங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான்” என்று சரவணனிடம் கூறி, “நீங்க பேசாம மாப்பிள்ளையும் பொண்ணையும் ஃபோட்டோ எடுங்க” என்று அனு அபிலாஷை போலியாக மிரட்டினாள்.

அபிலாஷும் அனுவும் தங்களின் வாழ்க்கையை மெதுவாகவும் நிதானமாகவும் தொடங்கினார்கள் என்றே கூறலாம். இப்பொழுது இருவருக்குள்ளும் ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டிருந்தது. பாட்டி கூறியதை போலவே அபர்ணா அனுவின் மூலமாக திரும்பவும் வண்ணத்தில் வளம் வந்துக் கொண்டிருந்தாள்.

நிச்சயம் ஊர் மக்கள் அனைவர் முன்னிலையிலும் வெகுவாக நடந்து முடிந்தது. இரவு உணவும் அங்கே ஏற்பாடு செய்திருந்ததால் அங்கேயே உணவருந்து அருந்தி விட்டு அங்கேயே அமர்ந்து கௌதம் மற்றும் கவிதாவை ஒரு வழி ஆக்கினர் அனைவரும் கூட்டமாக சேர்ந்து. பின் சனந்தாவின் கைப்பேசி ஒலிக்கவும், “நான் பேசிட்டு வந்திடுறேன்” என்று கூறி சென்றாள் சனந்தா.

அதில் சூர்யா என்று இருக்கவும், விக்ரமும் மெதுவாக அவள் பின்னாலே சென்றான். “இவன் போகாம இருந்தா தான் ஆச்சரியம்… இவன் போய் பேசிட்டு வந்தா கூட பரவால்ல சும்மா வேடிக்கை தாண்டா பார்க்க போறேன்” என்று சரவணன் கூறவும் அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

“அவன் நிலைமை நமக்கு வந்தா தெரியும் டா… அவன் ஒரு வருஷத்துக்கு மேல எவ்ளோ கஷ்டப்பட்டான் எவ்வளவு அழுதான்னு நம்ம தான டா பார்த்தோம்” என்று அபிலாஷ் கூறவும், “அதுவும் சரி தான் டா பாவமா தான் இருந்துது” என்று விக்ரமை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

“ஹலோ!!! சொல்லுங்க சூர்யா” என்று சனந்தா மெதுவாக நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் அவர்களின் வேலை விஷயமாகவும் படிப்பு விஷயமாகவும் பேசிக் கொண்டிருந்த சூர்யா அவன் வெகு நாட்களாக மனதில் பூட்டி வைத்திருந்ததை சனந்தவிடம் அவனது விருப்பத்தினை தெரியப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அதை சனந்தா உணர்ந்ததும் இதற்கு மேல் தாமதிக்கக்கூடாது எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேரா கூறி விட வேண்டும். இத்தனை நாள் சூர்யா எப்பொழுது ஏதாவது மறை முகமாக கூறினால் அதை கண்டு கொள்ளாமல் தட்டி கழித்து விடுவாள். ஆனால் இப்பொழுது நேராக கூற தயாராகி விட்டான் என்பதை அறிந்ததும் அவன் முகத்துக்கு நேராக தெளிவாக கூறிவிட வேண்டும் என்று சனந்தா மனதிற்குள் நினைத்துக் கொண்டு, “சூர்யா ஒரு நிமிஷம் நீங்க பேசுறதுக்கு முன்னாடி நான் பேசிடுறேன்” என்று சனந்தா கூறினாள்.

“என்ன இவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கா இந்த சூர்யாக்கு வேற வேலையே இருக்காதா” என்று விக்ரம் நினைத்துக் கொண்டு அவனுடைய வேகத்தை கூட்டி அவளுக்கு ஒரு ஐந்து அடி தூரத்திலேயே மெதுவாக அவள் பின்னால் நடந்து கொண்டு இருந்தான்.

“இல்ல சனா நான் சொல்ல வரர்த கேட்டதுக்கு அப்புறம் நீ என்ன உன்னோட முடிவு சொல்லு… என்ன சொன்னாலும் நான் ஏத்துக்க தயாரா இருக்கேன்” என்று சூர்யா கூறினான்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல


எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: Bhavani Varun
Article Title: Chapter 112
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.