அத்தியாயம் 67
ரிஷி மெய் மறந்து கீர்த்தனாவையே பார்த்துக் கொண்டிருக்க, “நீ பார்த்ததெல்லாம் போதும். நல்ல நேரம் போயிடப்போகுது சீக்கிரம் கிளம்பு. டேய் திலீப் இவன கூட்டிட்டு போய் கார்ல ஏறு போ.” என்று பின்னே இருந்து குரல் கொடுத்தார் தாத்தா.
உடனே ரிஷி தலை குனிந்தவாறு லேசாக புன்னகைக்க, அவனைக் கண்டு தானும் புன்னகைத்த கீர்த்தனா அவனது கன்னங்கள் இரண்டையும் செல்லமாக பிடித்து கிள்ளி விளையாடியபடி “சிரிச்சாலே உன்னோட டிம்பிள் ரொம்ப க்யூட்டா தெரியுது ரிஷி. எனக்காக இதே மாதிரி நீ எப்பயும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும் ஓகேவா?” என்று அன்புடன் கேட்டாள்.
தன் பேரனின் மீது அவள் வைத்திருக்கும் கள்ளம் கபடம் இல்லாத அன்பை கண்டு மகிழ்ந்து போன தாத்தா “நீ அவன் கூட இருக்கிற வரைக்கும் கண்டிப்பா என் பேரன் இதே மாதிரி சிரிச்சுக்கிட்டு சந்தோஷமா இருப்பான்ம்மா.” என்று சொல்லிவிட்டு ஒரு வழியாக அனைவரையும் கிளப்பி காரில் ஏற்றிக் கொண்டு கீர்த்தனாவின் வீட்டை நோக்கி பயணித்தார்.
அப்போது நேரம் சரியாக எட்டு மணி. கீர்த்தனாவின் அப்பா அரசு பள்ளி ஆசிரியர் என்பதால் ஸ்கூலுக்கு செல்வதற்காக அவசரமாக கிளம்பி கொண்டிருந்தார். எப்போதும் போல எப்போதும் தன் மகளை பிரிந்த சோகத்தில் இருக்கும் அவள் அம்மா அரை மனதாக ”என் பொண்ணு இந்நேரம் சாப்பிட்டு இருப்பாளோ இல்லையோ தெரியல! ஒவ்வொரு தடவை சமைக்கும்போதும் சாப்பிடும்போதும் எனக்கு அவளை நினைச்சாலே தொண்ட இறுக்கி பிடிக்கிது.
ஒரு அரிசி கூட உள்ள போக மாட்டேங்குது. எப்படியாவது என் புள்ளையை மறுபடியும் பாத்துர மாட்டோமானான்னு தான் நான் என் உசுர இன்னும் கைல புடிச்சு கிட்டு இருக்கேன். அவளை என் கண்ணுல காட்டுறதுக்கு ஏன் தான் இந்த கடவுளுக்கு இன்னும் மனச வரலையோ தெரியல. இன்னும் எத்தனை தடவை நாங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏறி ஏறி இறங்குறதோ தெரியல கடவுளே!” என்று நினைத்து சோகமான முகத்துடன் கடமைக்கு வேலை செய்து கொண்டிருந்தாள்.
கீர்த்தனாவின் அண்ணன் பாஸ்கர் தனது மகள் அணுவையும் குளிக்கவைத்துவிட்டு அவனும் குளித்து தனது ரூமில் இருந்து வெளியில் வர, அவர்கள் இருவருக்குமான லஞ்ச் பாக்ஸை ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து பேக் செய்து கொண்டு இருந்தாள் அவன் மனைவி தீபா.
அந்த நேரம் அவர்களது எளிமையான வீட்டின் வாசலில் விலை உயர்ந்த சொகுசு கார்கள் வரிசையாக வந்து நின்றது. இது மாதிரியான சம்பவங்கள் எல்லாம் அவர்கள் இருக்கும் தெருவில் நடப்பது அரிதிலும் அரிதான விஷயம் என்பதால் அக்கம் பக்கம் உள்ள மக்கள் அனைவரும் அந்த காட்சியை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சமைத்துக் கொண்டு இருந்த அமுதா ஜன்னல் வழியாக தங்கள் வீட்டு வாசலில் வரிசையாக கார்கள் அணிவகுத்து நிற்பதை பார்த்து ஏதோ அரசு அதிகாரிகள் தான் வந்திருக்கிறார்கள் போல என நினைத்து பயந்து “ஏங்க.. ஏங்க.. இங்க வாங்க!” என்று குரல் கொடுத்தாள்.
குளித்துவிட்டு ஆடை மாற்றிக் கொண்டு இருந்த சுரேந்தர் “வரேன்மா.. வரேன்! என்ன ஆச்சு எதுக்கு இப்படி கத்துற?” என்று கேட்டபடி தனது ரூமில் இருந்து ஹாலுக்கு வந்தார். வாசல் கதவு திறந்து இருந்ததால் தங்கள் வீட்டு வாசலில் நிற்கும் சொகுசு கார்களையும், முதலில் அதில் இருந்து டிப்டாப் ஆக பார்ப்பதற்கு ராஜா போல இருந்த தாத்தா இறங்கி வருவதையும் பார்த்து ஒரு நொடி ஆடிப் போய்விட்டார்.
இப்படியான மனிதர்களை எல்லாம் வெறும் சினிமாவிலும் சீரியலிலும் மட்டுமே பார்த்து இருந்த அந்த நடுத்தர குடும்பத்தில் இருக்கு இவர்கள் எதற்காக இங்கே வருகிறார்கள்? என நினைத்து பதட்டமாகவும் பயமாகவும் தான் இருந்தது.
தன் கணவர் ஷாக் ஆகி வாசலை பார்ப்பதை கவனித்த அமுதா அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு அவளும் வந்து சுரேந்தரின் அருகில் நிற்க, லஞ்ச் பாக்ஸ் பேக் செய்து கொண்டு இருந்த தீபா அவர்கள் அருகில் சென்று நின்று நடப்பதை பார்த்துவிட்டு அவளும் பதட்டத்தில் “ஏங்க.. ஏங்க இங்க வாங்களேன்!” என்று தன் கணவனை கீழே வரச் சொல்லி குரல் கொடுத்தாள்.
தன் மகளையும் கிளம்பி தானும் தயாராக இருந்த பாஸ்கர் அவளை தூக்கிக் கொண்டு கையில் அவளது ஸ்கூல் பேக் உடன் படிகளில் இறங்கி கீழே வந்தான். அவன் ஹாலுக்கு வரவும், தாத்தா, அவரது அசிஸ்டன்ட் பூபதி, கருப்பு சீருடை அணிந்திருந்த பாடிகார்டுகள் குடை சூல அவர்களது வீட்டு வாசலை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
முத்து படத்தில் வரும் பணக்கார அப்பா ரஜினிகாந்த் போல கம்பீரமாக கையில் ஒரு தடியை ஊனியபடி அப்போதும் தனது ஆளுமை குறையாமல் தங்கள் வீட்டிற்குள் வந்து கொண்டு இருக்கும் தாத்தாவையும் அவருடன் வந்தவர்களையும் பார்த்து கீர்த்தனாவின் குடும்பத்தினர்கள் சிலையாக சமைந்து நின்றார்கள். அவர்களுக்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை.
அவர்களது பார்வையை வைத்து அதை புரிந்து கொண்ட தாத்தா அவர்களுக்கு வணக்கம் சொல்லி “நான் ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி உங்க கிட்ட பேசுறதுக்காக வந்து இருக்கேன். நாங்க உள்ள வரலாமா?
உங்க கிட்ட முன்னாடியே எதையும் சொல்லாம திடீர்னு இப்படி நாங்க வந்ததுனால உங்களுக்கு இப்ப எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. எங்க சுச்சுவேஷன் அப்படி. கொஞ்ச நேரம் நம்ம எல்லாரும் உட்கார்ந்து பேசினா எல்லாத்தையும் தெளிவா பேசிடலாம்.
தயவு செஞ்சு எங்களை பார்த்து நீங்க பயப்படாதீங்க. உங்கள பயமுறுத்துறது எங்க எண்ணம் இல்ல. நாங்க யாருன்னு உங்களுக்கு தெரியுமான்னு எனக்கு தெரியல. தெரியலைன்னாலும் பரவால்ல. நானே எல்லாத்தையும் சொல்றேன்.” என்றார்.
தாத்தாவை அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் வந்திருக்கும் தோரணையை வைத்து கண்டிப்பாக அவர்கள் ஏதோ ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மரியாதைக்குரியவர்கள் என்று மட்டும் அவர்களுக்கு புரிந்தது. அதனால் வந்தவர்களை வாசலோடு நிற்க வைத்து பேசி அனுப்ப அவர்களுக்கு மனம் வராததால் சுரேந்தர் “உள்ள வாங்க ஐயா! வந்து உட்காருங்க.” என்றார்.
உடனே தீபா சோஃபாவில் இருந்த தேவையற்ற பொருட்களை எல்லாம் எடுத்து கிச்சனில் கொண்டு போய் அவசரமாக போட்டுவிட்டு வந்தாள். அவர்களுக்கு கையும் ஓடவில்லை காலம் ஓடவில்லை. வீட்டுக்கு வந்தவர்களை கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு பக்கம் இருக்க, இவர்கள் யார் எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள்? என்ற கேள்வி வேறு அவர்களுக்குள் இருந்து உறுத்தி கொண்டே இருந்தது.
அந்த கேள்விக்கு பதிலாக ரிஷியை வீழ்ச்சாரில் அமர வைத்து திலீப் தள்ளிக் கொண்டு வர, ஒரு கையில் தனது மகன் கவினை தூக்கிக் கொண்டு மற்றொரு கையில் கீர்த்தனாவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்து வந்தாள் நிரஞ்சனா.
வந்தவர்களை கவனிப்பதில் அமுதாவும், சுரேந்தரும் பிஸியாக இருக்க, தன் மகள் அணுவை கையில் தூக்கி வைத்துக் கொண்டு வாசலை பார்த்தபடி நின்று கொண்டிருந்த பாஸ்கர் ஏதோ திருமணமாகி மணப்பெண் போல தன் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த தனது தங்கையை பார்த்து அதிர்ந்து அவனையும் அறியாமல் “கீர்த்து!” என்றான்.
அவன் தங்கள் மகளின் பெயரைச் சொன்னதால் அமுதாவும், சுரேந்தரும் திரும்பி அவனை பார்த்தார்கள். தனது பெற்றோர்களை கண் கலங்க பார்த்த பாஸ்கர் வாசலை கை காட்டி “கீர்த்து!!” என்றான்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)