அத்தியாயம் 38
தன் அப்பாவிடம் ஆத்திரம் பொங்க பேசிவிட்டு அவரது அழைப்பை துண்டித்தான் ரிஷி. அந்த குடும்பம் தனக்கு செய்த அனைத்து துரோகங்களையும் நினைத்து பார்க்க பார்க்க அவனது கோபம் அதன் எல்லையை கடந்து கொண்டிருக்க, அவனது இதயம் பகை உணர்ச்சியில் வேகமாக துடித்தது. அவனுக்கு வேர்த்து கொட்டவும் தொடங்கி இருந்ததால், பார்ப்பதற்கே ஒரு மாதிரி இருந்தான் அவன்.
“விடுங்க பாஸ், அவங்கள நெனச்சு டென்ஷன் ஆகி உங்களுக்கு ஏதாவது ஆயிடுப்போகுது. அதான் நமக்கு தகுந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சாளே.. இவளை வச்சு நம்ம அவங்க எல்லாரையும் சமாளிச்சிடலாம்.” எனது திலீப் அவனிடம் ஆறுதலாக பேச, இதுவரை இருந்த ரிஷி அப்படியே மாறி வேறு ஒருவனாக தன் முன்னை அமர்ந்திருப்பதை கண்டு பயந்துப்போன நித்திலா தன் உதட்டைப் பிதுக்கி கொண்டு குழந்தை போல சத்தமாக மூச்சு வாங்க தேம்பி தேம்பி அழத் தொடங்கி விட்டாள்.
அந்த சத்தத்தை கேட்டு ஆச்சரியமாக அவள் பக்கம் திரும்பி பார்த்த ரிஷிக்கு அவளது பயந்த முகத்தை பார்த்தவுடன் “என்ன ஆச்சு இவளுக்கு? ஏன் இப்படி அழுகிறா?” எனை யோசிக்கையில் அவளை நினைத்து பதட்டமாக இருந்ததே தவிர அதுவரை அவனிடம் இருந்த கோபம் ஒரே நொடியில் மாயமானது.
அவள் கையைப் பிடித்த ரிஷி “ஓய் அம்மு.. என்ன டி ஆச்சு எதுக்கு அழுகிற? சாப்பாடு காரமா இருக்கா? இல்லையே.. நானும் அதை தானே சாப்பிட்டேன்... எனக்கு காரமா இருந்த மாதிரி தெரியலையே.. அப்புறம் ஏன் நீ அழுகிற?” என குழப்பமாக கேட்க,
இருந்த பயத்தில் அவன் கையை சட்டென்று எடுத்துவிட்ட நித்திலா “நீ போ, என்ன தொடாத. நீயும் அவங்கள மாதிரி பேட் பாய் தான். நீயும் என்னை அடிச்சு திட்டிக்கிட்டே இருப்ப தானே.. எனக்கு தெரிஞ்சிருச்சு. எனக்கு உன்ன பார்த்தாலே பயமா இருக்கு. என் கிட்ட வராத.” என அழுது கொண்டே சொல்லிவிட்டு லேசாக பின்னோக்கி நகர்ந்தாள்.
“நான் இவளை எதுக்கு அடிக்கப் போறேன்? எதுக்கு இவ இப்படி ஒலறிட்டு இருக்கா?” என புரியாமல் கேள்வியாக ரிஷி சுற்றியுள்ளவர்களை பார்க்க, “நீங்க ஃபோன்ல உங்க அப்பா கிட்ட கோவமா பேசிட்டு இருந்தீங்கல்ல.. அத பார்த்து இவ பயந்துட்டான்னு நினைக்கிறேன். அதான் அவ கிட்டயும் நீங்க கோபப்படுவீங்கன்னு நினைக்கிறா சார்.” என விளக்கம் கொடுத்தாள் நிரஞ்சனா.
“ஐயோ.. இவ பக்கத்துல இருக்கிறத மறந்துட்டு டக்குனு டென்ஷன் ஆகி இவளை பயமுறுத்துற அளவுக்கு பேசிட்டேனே!” என நினைத்து மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட ரிஷி தனது காதுகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு “சாரி அம்மு.. நான் நீ பக்கத்துல இருக்குறத மறந்துட்டு அப்படி சவுண்டா பேசிவிட்டேன். இனிமே அப்படி பேச மாட்டேன். இந்த ஒரு தடவை என்னை மன்னித்துவிடு. நான் உனக்கு அப்புறமா ஒரு சாக்லேட் வாங்கி குடுக்கிறேன் ஓகேவா?” என்று கேட்டான்.
அப்போதும் அவனைப் பார்த்து நித்திலா அழுது கொண்டே இருக்க, அவளை இப்படி அழ வைத்ததற்கு அவனுக்கே தன் மீது கோபம் வந்தது. “அச்சோ அம்மு.. உனக்கு நான் என்ன சொல்லி புரிய வைக்கிறது? நீ நினைக்கிற மாதிரி நான் குட் பாய் தான். திடீர்னு என்ன பேட் பாய்னு நினைச்சுறாத.
என்னோட டாடி தான் பேட் பாய். அவர் எப்ப பாத்தாலும் என்னை ஹர்ட் பண்ணிக்கிட்டே இருக்காரு. நம்மளை யாராவது ஹர்ட் பண்ணா நமக்கு அவங்க மேல கோபம் வரும் தானே.. அந்த மாதிரி தான் நானும் அவர் மேல கோவப்பட்டு பேசிட்டேன். நான் கெட்டவங்ககிட்ட மட்டும் தான் இப்படி எல்லாம் பேசுவேன்.
என் அம்மு ஏஞ்சல் தானே.. அவ மேல எப்படி என்னால கோபப்பட முடியும்? உன் கூட இருக்கும்போது உன்ன மாதிரியே நானும் ரொம்ப ஸ்வீட் பர்சனா மாறிடுவேன். நான் எப்பவும் மேல கோபப்படவும் மாட்டேன், உன்ன திட்டவும் மாட்டேன், அடிக்கவும் மாட்டேன். உன்னை நான் பயமுறுத்துனது தப்பு தான். அதுக்காக வேணும்னா நீ என்னை இரண்டு தடவை அடிச்சுக்கிறியா?” என கேட்ட ரிஷி அவளது மென்மையான கையைப் பிடித்து தன்னைத் தானே அடித்துக் கொண்டான்.
இப்போது தன் கையால் அடி வாங்கும் அவனைப் பார்க்க அவளுக்கு பாவமாக இருக்க, மற்றொரு கையால் தன் கண்ணீரை துடைத்தபடி மூக்கை உள்ளே இழுத்த நித்திலா “வேணாம் வேணாம் என் friend ரிஷிய அடிக்காத. அவன் பாவம். அவனுக்கு வலிக்கும்.” என்று சொல்லிவிட்டு அவனை அணைத்துக் கொண்டாள்.
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)